முதல் பக்கம் தொடர்புக்கு  

குலைநோய்
(பைரிகுலேரியா ஒரைசே)

தாக்குதலின் அறிகுறிகள்  
  • பயிரின் அனைத்து பகுதிகளும் (இலைகள், தண்டு, கணுப்பகுதி, கழுத்துப் பகுதி, கதிர்) பூசணத்தால் தாக்கப்பட்டிருக்கும்.

  • இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும்.

  • தீவிர தாக்குதலின் போது, பயிர் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். இதையே “குலை நோய்” என்கிறோம். கதிர் வெளிவந்தவுடன் பயிர்கள் சாய்ந்துவிடும்.

  • கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர் மணிகள் சுருங்கியும்/பகுதி நிறைந்தும், கதிர்கள் உடைந்து தொங்கி கொண்டிருக்கும். இதை “கழுத்து குலை நோய்” என்கிறோம்.

  • கணுக்கள் கருப்பு நிறமாக மாறி, உடைந்துவிடும். இதை “கணு குலை நோய்” என்கிறோம்.

  • பயிரின் அடிப்பாகத்தில் இடைக்கணுத் தாக்குதலும் ஏற்படுவதால், வெண் கதிர் அறிகுறி தோன்றும்.

  • கதிர்ப்பருவ நிலைக்கு முன்பே கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. ஆனால் கதிர்ப்பருவத்திற்கு பின் தாக்குதல் ஏற்பட்டால், தானியம் உருவானாலும், குறைந்த தரத்துடன் காணப்படும். கதிர் மற்றும் கதிர்க்கிளைகளில் உள்ள புள்ளிகள் பழுப்பு நிறமாக (அ) அடர்பழுப்பு நிறமாக இருக்கும். நெல் இரகங்களைப் பொருத்து, புள்ளிகளின் அளவும், வடிவமும் வேறுபடும்.

 

இலைகளில் பழுப்பு நிற விளிம்பு, சாம்பல் நிற மையத்துடன் கூடிய நீள்புள்ளிகள் காணப்படும்
கண் வடிவ புள்ளிகள் இலைகளில் காணப்படும்
கழுத்து குலை நோய்
கணு குலை நோய்

மேலே செல்க

  நோய்க் காரணி
  • சேமிப்பு நெல் விதைகள் மற்றும் தாக்கப்பட்ட துார்களில் இந்நோய் காரணி இருக்கும்
  • பூசண இனவிருத்தி அமைப்புகள், வித்துக்கள் மூலம் அடுத்த பருவ நெற் பயிருக்கு இந்நோயைப் பரப்பும்.
  • பூசணவித்துக்களை காற்றின் மூலம் மற்ற நெய்பயிர்களுக்கு நீண்ட துாரம் வரை பரவும்.
  • கொத்துக்களாக உருவாகும் கொனீடியோபோர்கள் 2-4 இடைச்சுவருடன், அடிப்பரப்பு சற்று வீக்கமாக, நுனியில் மெலிந்திருக்கும்.
  • கொனீடியா 20-22 x 10-12 மியு.மீட்டர் அளவுடையது. கொனீடியா 2 இடைச்சுவர்களுடன், ஒளி கசியும் தன்மையுடன் சற்று கருப்பாக இருக்கும். இவை சற்று நீண்டு பெரியதாக, நுனிப்பகுதியை நோக்கி மெலிந்து காணப்படும்.
பைரிக்குலேரியா ஒரைசே பூசணக்கூட்டம் கொனிடியா
கூம்பு வடிவ கொனிடியா நுண்ணோக்கியில் பைரிக்குலேரியா ஒரைசே


தகுந்த நிலைகள்:

  •   வருடம் முழுவதும் குலை நோய் பூசண வித்துக்கள் காற்றில் இருக்கும்.
  • நெல் வளரும் மேட்டுப்பாங்கான இடங்களின் சுற்றுப்புற அமைப்பு மற்றும் வெட்பமண்டல பகுதிகள்.
  • மேக மூட்டமுள்ள வானம், தொடர் மழை மற்றும் துாரல்கள்.
  • அதிக அளவில் பயன்படுத்தப்படும் அம்மோனியம் சல்பேட் போன்ற தழைச்சத்து உரங்கள்.
  • காற்றின் ஈரப்பதம் (90 சதவிகிதம் மற்றும் அதற்கும் அதிகம்) மற்றும் ஈரமான இலைகள்.
  • வெப்பநிலை 25-28

    நோய் தோற்றம்:

    • இது மிகவும் பழமையான நோய்.
    • இந்த நோயை “அழுகிய கழுத்து” அல்லது “நெல் காய்ச்சல்” எனவும் கூறுவர்.
    • இதுவரை 80 நெல் வளரும் நாடுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் 1918 ல் முதலில் பதிவு செய்யப்பட்டது.
    • எதிர்ப்பார்க்கப்பட்ட தானிய இழப்பு : - 70-80 சதவிகிதம்

மேலே செல்க

கட்டுப்பாடு:  
உழவியல் முறை:
  • குலைநோய் எதிர்ப்பு இரகங்களை பயிர் செய்யவேண்டும்.
  • நோய் தாக்குதலைத் தாங்கும் இரகங்களான (கோ 47, கோ 50, எடிடீ 36,எடீடி 37, எஎஸ்டீ 16, எஎஸ்டீ 20, எடீடி 39, எஎஸ்டீ 19, டிபீஎஸ் 3, வெள்ளை பொன்னி, எடீடி 44, பீபிடி 5204, கோ ஆர் ஹச், பல்குனா, ஸ்வர்ணமுகி, சுவாதி, பிரபாட், ஐஆர் 64, ஐஆர்36, ஜெயா) ஆகியவற்றை பயிரிடுதல்.
  • அதிக தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
  • தழைச்சத்து உரத்தை மூன்றாக பிரித்து இடவேண்டும்.
  • வரப்பிலிருக்கும் களைகளை அழிக்க வேண்டும்.
அதிகப்படியான தழைச்சத்து உர பயன்பாட்டை தவிர்க்கவும் பீபிடி 5204 போன்ற எதிர்ப்பு இரகங்களை பயிரிடவும்

நோய் தடுப்பு முறை:
  • புழுதி நாற்றங்கால்களையும் தாமதமாக நடுதலையும் தவிர்க்க வேண்டும்.
  • தாமதமாக நடுதலை தவிர்க்க வேண்டும்.
  • அறுவடைக்குப் பின் வைக்கோல் மற்றும் துார்களை எரித்துவிட வேண்டும்.
  • வரப்புகள், பாத்திகளின் மீது உள்ள புல்வகைகள், மற்ற களைகள் அழிக்கவேண்டும்.
  • சூடோமோனாஸ் ஃபுலுாரசன்ஸ் பொடியுடன் உலர் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும். (10 கிராம்/கிலோ விதை)
  • 25 சதுர மீட்டர் பரப்பு உள்ள நாற்றங்காலில் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் தேக்கி வைக்க வேண்டும். இந்த தேங்கிய நீரில் 2.5 கிலோ சூடோமோனஸ் ஃபுலுாரசன்ஸ் பொடியைத் துாவி நன்கு கலக்க வேண்டும். நாற்றுக்களின் வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.
  • நடவு செய்த 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ் ஃபுலுாரசன்ஸ் பொடியை 0.5% என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும்
புழுதி நாற்றங்காலை தவிர்க்கவும் சூடோமோனஸ் உடன் நாற்றுகளின் வேர்களை நனைக்கவும்

இரசாயன முறை:
  •   பூசணக் கொல்லிகளை குறைந்த/அதிக அளவில் தெளிக்கக் கூடாது.
  • காலை 11.00 மணிக்குள்ளும்/மாலை 3.00 மணிக்கு மேலும் தான் மருந்துகளை தெளிக்க வேண்டும்.
  • கேப்டன்/கார்பன்டசிம்/திரம்/டிரைசைகலசோல் ஆகிய ஏதோ ஒன்றோடு 2.0 கிராம்/கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.
  • பைரோக்குயிலான்,டிரைசைக்லசோல் ஆகிய பூசணக் கொல்லிகளை தெளிக்கலாம்.
  • ட்ரைசைக்லசோல் 1 கிராம்/லிட்டர் தண்ணீர் (அ) கார்பன்டசிம் 1.0 கிராம்/லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்துதெளிக்க வேண்டும்.
  • முழுமையாக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நாற்றங்கால், துார் வைக்கும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் பருவங்களில் 3-4 முறை தெளிக்கவேண்டும்.
  • நாற்றங்கால் பருவம் : குறைந்த தாக்குதல் இருப்பின் கார்பன்டசீம் (அ) எடிஃபென்டாஸ் 1.0 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
  • துார் வைக்கும் முன் நிலை முதல் துார் வைத்தலின் மத்திய நிலை வரை: குறைந்த தாக்குதலாக (2-5%நோய் தீவிரம்) இருந்தால், எடிஃபென்பாஸ் அல்லது அல்லது கார்பன்டசீம் 1.0 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். நோய் தாக்குதல் காணப்பட்டால் தழைச்சத்து உரம் அளித்தலை தாமதமாக செய்ய வேண்டும்.
  •  கதிர் உருவாக்க ஆரம்ப நிலை முதல் கதிர் உருவாக்கம் வரை: 2-5% இலைப்பரப்பு சேதம் இருப்பின் - எடிஃபென்பாஸ் அல்லது கார்பன்டசீம் (அ) ட்ரைசைக்லசோன் @ (1.0 கிராம்/லிட்டர்) தண்ணீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். 
  • பூக்கும் பருவமும் அதற்கு பின் வரும் பருவங்களும்: 5% இலைப்பரப்பு சேதம் (அ) 1-2% கழுத்துப் பகுதி தாக்குதல் இருப்பின், எடிபென்பாஸ் (அ) கார்பென்டசீம் (அ) ட்ரைசைக்லசோன் @ 1 கிராம்/லிட்டர் நீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
கார்பென்டசிம் தெளிக்கவும் எடிஃபென்பாஸ் தெளிக்கவும்
திரம் - விதை நேர்த்தி பூசணக்கொல்லி கேப்டானுடன் விதை நேர்த்தி செய்யவும்
மேலே செல்க