  
                "அவுரி' மூலிகை செடி சாகுபடியில் சத்தமில்லாமல் சாதிக்கும் விவசாயி  
                
                  
                      | 
    
      
        பழனி 
          டி.கல்லுப்பட்டி, 
          திருமங்கலம், 
          மதுரை மாவட்டம். 
          தொடர்புக்கு -98437 23681   | 
       
      | 
   
 
                
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் சோலைபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனி "அவுரி' என்னும் மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை ஊடு பயிராக பயிரிட்டு ஆண்டுதோறும் ரூ. 25 ஆயிரம் வரை சத்தமில்லாமல் வருவாய் ஈட்டி வருகிறார். 
  அவர் கூறியதாவது: "தூத்துக்குடி சென்னா' என்றழைக்கப்படும் இந்த மூலிகைச் செடிகள் 90 நாட்கள் பயிராகும். ஆண்டுதோறும் பருவ மழையை ஒட்டி நவம்பர் இறுதியில் விதைள் விதைக்கப்படுவது வழக்கம். எக்டேருக்கு 20 கிலோ விதை விதைத்தால் போதுமானது. களை எடுப்பு மற்றும் உரம் போட தேவையில்லை.  
அதுவாகவே வளர்ந்து பயன்தரக் கூடியது. செடிகள் முழுவதும் மஞ்சள் நிறத்தில் பூ பூத்து, காய்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்கும். மல்லிகைக்கு ஊடு பயிராக இந்த "அவுரி'யை பயிரிட்டுள்ளேன். வறட்சியை தாங்கி விளையக்கூடியது. குறைந்த அளவே தண்ணீர் போதுமானது. எக்டேருக்கு ஒரு டன் வரை காய்ந்த இலைகள் மற்றும் காய்கள் கிடைக்கும். இவற்றை மொத்தமாக சேகரித்து தூத்துக்குடி மொத்த வியாபாரிகளிடம் விற்று விடுவேன். இதனால், விவசாய செலவு போக ஆண்டு தோறும் குறைந்தது 25 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. 
  மழை அதிகமாக பெய்தால் "அவுரி' க்கு ஆபத்து. பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து இந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். சோலைபட்டியை சுற்றியுள்ள கெஞ்சம்பட்டி, முத்தப்பன்பட்டி, ஜெகநாதன்பட்டி, புளியம்பட்டி போன்ற கிராமங்களில் இந்த விவசாயம் களை கட்டி வருகிறது, என்றார்.  
 |