Seed Certification
வெண்டை

வெண்டை

விதை உற்பத்திக்கு ஏற்ற நிலத் தேர்வு

நிலத் தேர்வு செய்யும் போது முந்தைய பருவத்தில் வேறு இரக வெண்டை பயரிடப்படாத வயலைத் தேர்ந்தெடுத்தல் மிக அவசியம். இவ்வாறு செய்வதால் தான் தோன்றிப் பயிர்களால் ஏற்படும் இனக் கலப்பை தவிர்க்கலாம்.

மண் அமிலத்தன்மையோ, காரத்தன்மையோ இல்லாமல் நடுநிலைமையான பண்புகளைப் பெற்று நல்ல வடிகால் வசதியும் கொண்டிருப்பது மிகவும் அவசியம். வெண்டையில் அதிக விதை மகசூலைப் பெற கரிசல் மண் நிலம் மிகவும் உகந்தது.

J தான்தோன்றி பயிர்கள் என்றால் என்ன?
         
வயலில் உள்ள மண்களில் கலந்துள்ள விதைகளிலிருந்து முளைக்கும் பயிர்களே தான்தோன்றி பயிர்களாகும். இவ்விதைகள் முந்தைய கால பருவ பயிர்களில் இருந்து கீழே விழுந்தவை ஆகும். விதைக்காமல் தானகவே முளைத்து வளரக்கூடியவை என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.

இனத் தூய்மையை பராமரிக்க பயிர் விலகு தூரம்

வெண்டை பெரும்பாலும் அயல் மகரந்தச் சேர்க்கையுடைய காய்கறிப் பயிராகும்.  பயிரிடப்படும் விதைப் பயிரானது பிற இரக வயல்களிலிருந்து குறைந்தது 100 மீட்டர் தூரம் தனிமைப பட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பூக்கும் தருணத்தில் ஒரு இரகம் மற்றொரு இரகத்துடன் மகரந்தச் சேர்க்கை ஏற்படாமல் விதைகளின் பாரம்பரியத் தூய்மையை பாதுகாக்க முடியும்.

விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம்

“பருவத்தே பயிர் செய்” என்பது பழமொழி. விதைப்பயிருக்கு இது மிகவும் பொருந்தும். விதைகளின் தரம் அது பயிரிடப்படும் சூழ்நிலைக்கு ஏற்ப அமைகிறது. வெண்டை எல்லா பருவங்களில் சாகுபடி செய்தாலும், விதை உற்பத்திக்கு ஏற்ற சரியான பருவத்தை தேர்ந்தெடுப்பதுதான் மிக அவசியம். விதைக்கான அறுவடைகளை முடித்து விதைகளைப் பிரித்து நன்கு உலர வைக்க ஏதுவான உலர்ந்த சூழ்நிலை இருத்தல் அவசியம். விதை உற்பத்தி செய்வதற்க சிறந்த பருவம், அதாவது ஜ¤ன், ஜ¤லை மற்றும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களாகும். அப்பருவங்களில் விதைகளை பிரித்தெடுத்த பின் உலர்த்துவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் அமைகின்றன.

விதைத் தேர்வு

“விளையும் பயிர் முளையிலே” என்ற பழமொழி நடவு பாத்திகளில் ஊன்றும் விதைகள் தரமான விதைகளாக நல்ல முளைப்பு மற்றும் வீரியத்துடன் இருப்பவைகளாக இருப்பது அவசியம். ஏனெனில், நடவு பாத்திகளில் எவ்வாறு செடிகளை பராமரிக்கின்றோமோ அதைப் பொறுத்தே பயிர் மகசூலும் அமையும். நல்ல வீரியமான செடிகளை பெற தரமான வெண்டை விதையை பயன்படுத்த வேண்டும். ஒரு வருடத்திற்கு மேல் சேமிக்கப்பட்ட விதைகளை உபயோகிக்கக் கூடாது.

விதை தேர்ந்தெடுத்தலின் நன்மை

வளமான செடிகளைப் பெற தரமான வெண்டை விதையை பயன்படுத்த வேண்டும். “விளையும் பயிர் முளையிலே” என்பது பழமொழி. அதுபோல நாம் பயிரிடும் பயிர் மகசூல் விதையின் தரத்தை பொறுத்தே அமையும். விதை உற்பத்தி செய்யும் பயிரில் மகசூலுடன் இரகத்தினுடைய பாரம்பரிய குணாதிசயங்களையும் பராமரிப்பது மிக முக்கியம். அது விதைக்கும் விதையின் தரத்தை பொறுத்தே இருக்கும். எனவே விதை உற்பத்தி பயிர் விதைப்பிற்கு தேர்ந்தெடுக்கும் விதைகள் வல்லுனர் அல்லது ஆதார நிலை விதைகளாக இருப்பது மிக முக்கியம்.

நீர் மூலம் விதைத் தரம் நிர்ணயித்தல்

சேமித்து வைக்கும் வெண்டை விதைகளின் எடை, அவற்றின் சேமிப்புக் காலம், இடம், சூழ்நிலை மற்றும் பூச்சி பூஞ்சாணங்களால் மாறுபடுகின்றது. அதிக வயதான விதைகள், உபயோகித்த பேட்டரிசெல் போன்று காலப்போக்கில் வீரியம் குறைந்து விடும். தண்ணீரைப் பயன்படுத்தி தரமான, அடர்த்தியான வீரியமுள்ள வெண்டை விதைகளை பிரித்தெடுக்கலாம்.

முதலில் 15 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு பிளாஸ்டிக் வாளியில் 10 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு 5 அல்லது 6 கிலோ விதையை சிறிது சிறிதாகப் போட வேண்டும். எடை குறைந்த விதைகள் மிதக்கும். அதே சமயம் எடை அதிகமான, தரம் மிகுந்த விதைகள் நீரில் மூழ்கும். மிதக்கும் விதைகளை முற்றிலும் நீக்கிவிட வேண்டும். மூழ்கிய விதைகளையே விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு ஒரு ஏக்கருக்கு தேவையான 3 அல்லது 4 கிலோ விதையைத் தரம் பிரிக்க வேண்டும்.

விதை நேர்த்தி

இவ்வாறு பிரித்தெடுத்த விதைகளை நோய்களிலிருந்து பாதுகாத்திட விதை நேர்த்தி செய்வது மிக அவசியம். ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது பெவிஸ்டன் பூஞ்சாணக் கொல்லியைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து பின்னர் விதைகளை விதைக்கலாம்.

நடவு பாத்தி தயார் செய்தல் மற்றும் பராமரிப்பு                                                         

நடவு செய்ய நீங்கள் தேர்ந்தெடுத்த நிலத்தின் சேடை தண்ணீர் கட்டும் முன் ஒரு ஏக்கருக்கு 20 வண்டி நன்கு மக்கிய தொழு உரத்தை நன்கு பரப்பி விடவும். பின்பு இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழுது விடவும். அதன்பின் 60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்து எடுத்து கட்ட வேண்டும். விதைகளை ஊன்றுவதற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு கீழ்க்குறிப்பிட்ட அளவு உரங்களை கலந்து அடியுரமாக பார்களின் கீழிருந்து மூன்றில் ஒரு பாக உயரத்தில் போட வேண்டும்.
யூரியா                                                             35 கிலோ
சூப்பர் பாஸ்பேட்                                120 கிலோ
பொட்டாஷ்                                         26 கிலோ

விதைப்பு

அடியுரமிட்ட பின்பு பார்களில் 20 செ.மீ இடைவெளியில் குழிக்கு இரண்டு விதைகள் வீதம் விதைக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

அடுத்தபடியாக வெண்டை விதைப்பயிர் வளர்ப்பில் நீர் நிர்வாகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விதை விதைத்தவுடன் நன்றாக பார்கள் முழுவதும் நனையும் அளவிற்கு நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு விதைத்த மூன்றாவது நாள் நீர் பாய்ச்சுவது வெண்டை விதை முளைப்பிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அதன்பின் வாரத்திற்கு ஒரு முறை நீர்பாய்ச்ச வேண்டும். எக்காரணம் கொண்டும் செடிகள் பூக்கும் சமயம், காய்கள் மற்றும் விதைகள் முதிர்ச்சி அடையும் சமயங்களில் நீர் தட்டுப்பாடில்லாமல் கவனித்து கொண்டு வருவது மிகவும் அவசியம். ஏனெனில், காய்ப்பிடிப்பு குறைவதுடன், விதைகளும் நன்கு முதிர்ச்சி அடையாமல் விதை மகசூலுடன் விதைத்தரமும் பாதிக்கப்படும்.

களை கட்டுப்பாடு
         
வெண்டை விதைப்பயிரில் களைகளை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இதற்காக, விதை ஊன்றிய மூன்றாவது நாளில் ஒரு ஏக்கருக்கு 800 மில்லி ப்ளுகுளோரிலின் அல்லது 600 மில்லி மெட்டலாக்குளோர்களைக் கொல்லியை நாப்சாக் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து விட வேண்டும். 30 - 35 நாட்களுக்குள் ஒரு கை களை எடுப்பது அவசியம்.

மேலுரம்

விதைப்பயிர் காய்கறிப் பயிரில் இருந்து மாறுபடுவதால் விதைப்பயிர்களுக்கு மேலுரம் இடுவது மிகவும் அவசியமாகிறது. எனவே, வெண்டை விதைப்பயிருக்கு இரண்டு மேலுரங்களாக இட வேண்டும். யூரியாவை ஏக்கருக்கு 9 கிலோ வீதம் இரண்டு மேலுரங்களாக இட வேண்டும். யூரியாவை ஏக்கருக்கு 9 கிலோ வீதம் இரண்டு மேலுரங்களாக முதல் பூ வரும் தருணத்தில் ஒரு முறையும், அதன்பின் 10 நாட்கள் கழித்து இன்னொரு முறையும் இடவேண்டும்.

பயிர் பாதுகாப்பு
         
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செலவம்” என்பது போல விதைப் பயிர்களையும் நோய் தாக்குதல் இன்றி பாதுகாப்பது தரமான விதை உற்பத்திக்கு மிகவும் அவசியம். எனவே, அவ்வப்போது தென்படுகின்ற பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

J கலவன்களை நீக்குதலின் முக்கியத்துவம்

cv

சாதரணமாக, வெண்டை வயல்களில் சில செடிகள் அதிக வளர்ச்சியுடன் படத்திலுள்ளது போல மிகவும் சீக்கிரமாகவே பூத்திருப்பதையும், சில பயிர்கள் மிகவும் காலதாமதமாகி பூத்திருப்பதையும் நீங்கள் அனுபவத்தில் அறிவீர்கள். அவை, ஒரே இரகத்தைச் சேர்ந்த பயிராக இருந்திருந்தால் அந்த வயலில் வேறுபாடுகள் எப்படி வந்திருக்க முடியும்? விதை உற்பத்தி செய்யப்படுகிற வெண்டை வயலில் ஏதோ ஒரு வேறு இனக்கலப்பு ஆகியிருப்பதையே இது நமக்குத் தெரியப்படுத்துகிறது அல்லவா? இதனால், நாம் உற்பத்தி செய்யும் வெண்டை இரகத்தின் இனத்தூய்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டு, அந்த வயல் விதை உற்பத்திக்கே தகுதியற்றதாக ஆகிவிடுகிறது.

எனவே, வெண்டை விதைக்காக நடவு செய்யப்பட்ட பாத்திகளில் அந்தக் குறிப்பிட்ட வெண்டை இரகத்தின் குணாதிசியங்களிலிருந்து மாறுபட்டுத் தெரிகின்ற எல்லா பயிர்களையும், களைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட முக்கியமாக வைரஸ் நோய் தாக்கப்பட்ட செடிகளையும் தக்க தருணத்தில் அதாவது அவைகள் பூக்கும் தருணத்திற்கு முன்னரே நீக்கிவிடுதல் மூலம் இனக்கலப்பில்லாத சுத்தமான நல்ல விதைகளை உற்பத்தி செய்யலாம்.

            கலவன்களை நீக்கும் தருணம்                                             நீக்கப்பயன்படும் தன்மைகள்
பூப்பதற்கு முன்                                                                                   செடிகளின் உயரம் கிளைகளின்                                                                                                        எண்ணிக்கை தண்டு மற்றும்                                                                                                                          இலைகளின் நிறம் மற்றும் அமைப்பு.
காய்ந்த பின்                                                                            காய்களின் வடிவம், நிறம் மற்றும்                                                                                                      பருமன்
அறுவடைக்கு பின்                                                                 காய்களின் வடிவம், நிறம் மற்றும்                                                                                                      பருமன்

J கலவன்கள் நீக்கும் போது நரம்பு வெளுத்த நோய்க்கு ஆளான செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து அகற்றி விட வேண்டும். மேலும் காட்டு வெண்டை இரகச் செடிகளை பூப்பூக்கும் சமயத்திற்கு முன்பே நீக்கிவிட வேண்டும்.

இலை வழி உரம்     

தரமான விதை உருவாக பயிரின் ஒவ்வொரு வளர்ச்சிப்பருவத்திலும் தக்க தொழில் நுட்பம் தேவைப்படுகிறது. எனவே, வெண்டை விதை பயிருக்குத் தேவையான உரம் இட்டால் மட்டும் போதாது. ஏனெனில் இப் பயிர் காய்கள் பிடித்து நன்கு முதிர்ச்சி அடைந்தால்தான் அதனுள் உள்ள விதைகள் அதிக பருமனுள்ளதாகவும், வீரியமுள்ளதாகவும் இருக்கும். எனவே, இலை வழி உரம் அளிப்பது மிகவும் அவசியம். வெண்டை விதைப்பயிருக்கு டி.ஏ.பி. 0.5 சதக் கரைசலை முதல் பூப்பூக்கும் சமயத்திலிருந்து மூன்று முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிப்பது அவசியம். அதனால் விதைத் தரத்துடன் விதை மகசூல் கணிசமாக உயர்கிறது.

அறுவடை


வெண்டையில் விதைக்காக அறுவடை செய்யும் போது காய்கள் பழுப்பு நிறமடைந்தபின்தான் எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் விதைகள் நன்கு முதிர்ச்சி அடைந்து நல்ல முளைப்பு மற்றும் வீரியத் திறனுடன் இருக்கும். மேலும், படத்தில் உள்ளது போல காய்களில் விளிம்புகளில் மயிரிழை அளவு பிளவு தெரிந்தவுடன் அறுவடை செய்துவிட வேண்டும். அதற்குப்பின் தாமதம் செய்தால் படத்தில் உள்ளது போல் காய்கள் வெடித்து  விதைகள் கொட்டி சேதாரம் ஏற்பட வாய்ப்புண்டாகும்.

அறுவடை, இதர பயிர்கள் போல் ஒரே அறுவடையாக இல்லாமல் வெண்டையில் பல் அறுவடைகளைாக எடுக்க வேண்டி உள்ளது. அவற்றில் முதல் மற்றும் கடைசி ஓரிரு அறுவடைகளை தவிர்த்து இடைப்பட்ட அறுவடைகளில் இருந்து வரும் காய்களிலிருந்து மட்டுமே விதைகள் எடுக்க பயன்படுத்த வேண்டும். முதல் மற்றும் கடைசி ஓரிரு அறுவடைகளிலிருந்து கிடைக்கும் விதைகளின் மகசூல் மற்றும் தரம் குறைவாக காணப்படும். எனவே, அவ்வறுவடைகளை காய்கறிக்காக எடுத்து விற்றுவிடலாம். மேலும் இடைப்பட்ட அறுவடைகளில்  இருந்து காய்ப்புழுத் தாக்காத நடுத்தரம் முதல் பெரிய காய்களை மட்டுமே விதை எடுப்பதற்காக பயன்படுத்த வேண்டும்.

விதைத்தரம் பராமரிக்க சில வழிமுறைகள்

காய்களை அறுவடை செய்தபின் விதை பிரித்தெடுக்கும் முன்பு தேர்ந்தெடுத்த இரகத்திலிருந்து வேறுபட்ட காய்களையும் சிறிய மற்றும் காய்ப்புழு தாக்கிய காய்களையும் அகற்றிவிட்டு படத்திலுள்ளது போல நல்ல தரமான காய்களையே விதை எடுக்க பயன்படத்த வேண்டும்.

விதை பிரித்தெடுக்கும் முறைகள்



தரம் பிரித்து தேர்ந்தெடுக்கப்பட்ட காய்களை 2 அல்லது 3 நாட்கள் வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும். அவ்வாறு உலர்த்திய காய்களை சாக்கு பைகளின் மேல் பரப்பி வளையும் தன்மை கொண்ட மூங்கில் குச்சியினால் தட்ட வேண்டும். இவ்வாறு தட்டும்போது விதைகள் காய்களிலிருந்து பிரிந்து விடுகின்றன. பின்பு விதைகளை மட்டும் பிரித்தெடுத்து நீர் மூலம் தரம் உயர்த்த வேண்டும். பிரித்தெடுத்த விதைகளை நீரில் போடும்போது மிதக்கும் உடைந்த மற்றும் முதிராத பொக்கு விதைகள் அகற்றிவிட்டு மூழ்கி உள்ள விதைகளை பயன்படுத்த வேண்டும்.

விதை உலர்த்துதல்

பிரித்தெடுத்த விதைகளை உடனே முறைப்படி உலர வைக்க வேண்டும். நீர் மூலம் தரம் பிரித்த விதைகளை சேகரித்து கித்தான் சாக்குகளின் மேல் லேசாக பரப்பி நிழலில் 8 முதல் 10 மணி நேரம் வரை உலரவைக்க வேண்டும். பின் சூரிய ஒளியில் உலர வைக்க வேண்டும். விதைகளை வெய்யிலில் உலர்த்தும் போது தினமும் காலை 8 முதல் 12 மணி வரையிலும், பின்னர் 3 முதல் 5 மணி வரையிலும் உலர்த்துவது நல்லது. 12 முதல் 3 மணி வரை உள்ள காலத்தை தவிர்ப்பது அவசியம். ஏனெனில், அந்த இடைக்கால நேரத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் வீச்சு அதிகமாக இருப்பதாலும் வெய்யிலின் வெப்பநிலை உச்சத்தில் உள்ளதாலும் தரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

 

விதை சுத்திகரிப்பு
         
விதைகளை நன்கு உலர்த்திய பின்பு விதைகளை சுத்திகரிப்பது மிக முக்கியம். அவ்வாறு விதை சுத்திகரிப்பு செய்வதால் முதிராத பொக்கு மற்றும் சிறிய விதைகளை அகற்றுவதால் விதைகளின் வீரியம் மற்றும் சேமிப்புத் திறன் கூடுகின்றன. விதை சுத்திகரிப்பின் போது முற்றாத, உடைந்த கெட்டுப்போன விதைகளையும், விதையுடன் கலந்திருக்கும் மற்ற விதைகள், கல், மண், தூசி முதலியவற்றையும் அகற்றி விட வேண்டும். வெண்டை விதைகளை 6 நெம்பர் கம்பி வலை கொண்ட கைச் சல்லடைகள் கொண்டு சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.

J விதை சுத்திகரிப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை

விதை சுத்திகரிப்பு செய்யாமல் சேமித்து வைப்பது விதையின் தரத்தை வெகுவாக பாதிக்கிறது. சுத்திகரிப்பில் கம்பி வலை சல்லடைகளை ஒரு இரகத்திற்கு பயன்படுத்திவிட்டு வேறு இரகத்திற்கு மாற்றும் போது நன்கு சுத்தம் செய்யாவிடில் விதைக் கலப்பு நேர்ந்து விதைகளின் இனத்தூய்மை பாதிக்கப்படும். எனவே, விதை சுத்திகரிப்பு முறைகளில் அதிக கவனத்துடன் செயல்படவேண்டும்.

விதை சேமிப்பு
         
விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்த வைப்பதிலும் தேவைப்படுகிறது.

விதையின் ஈரப்பதம்
         
விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின்  தரம் மாறுபடுகிறது. விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 8 - 10  சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளில் நிறைத்து சேமியுங்கள். நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை 6 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து வையுங்கள்.

விதை நேர்த்தி
         
விதைகளை சேமிப்புக்கு முன் பூஞ்சாணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு திராம் அல்லது கேப்டான் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வையுங்கள். இதற்குப் பதிலாக விதைகளை குளோரினேற்றம் செய்தும் சேமிக்கலாம். குளோரினேற்றம் என்றால் கால்சியம் ஆக்ஸி குளோரைடு (அதாவது பிளீச்சிங் பவுடர்) என்ற இரசாயன பொருளை கால்சியம் கார்பனேட் என்ற பொருளுடன் சம விகிதத்தில் கலந்து காற்றுப் புகா பாட்டிலில் ஒரு வாரம் அடைத்து வைத்திருந்து பின்னர் அந்தக் கலவையிலிருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில் எடுத்து கலந்து பின்பு சேமியுங்கள். குளோரினேற்றம் ஒரு சுற்றுப்புற சூழல் மாசுபடாத விதை நேர்த்தி முறையாகும்.

விதை சேமிப்பு பைகள்

விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை. ஆகையால் காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி தீரங்களில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகா பைகளையே உபயோகிக்க வேண்டும். 700 அடர்வுள்ள பாலிதீன் பைகளே ஈரக்காற்று புகாத பைகள். எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள்.

இடைக்கால விதை நேர்த்தி
         
தேவைக்கென சேமித்து வைத்திருக்கும் குறைந்த அளவு விதைகளை 5 அல்லது 6 மாத கால சேமிப்புக்குப் பின் “ஊறவைத்து உலர வைக்கும் முறை” மூலம் விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு டை - சோடியம் பாஸ்பேட் என்ற இரசாயன மருந்தை 100 லிட்டர் நீருக்கு 3.6 கிராம் என்ற விகிதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கரைசலில் (ஒரு பங்கு விதைக்கு இரு பங்கு கரைசல்) விதைகளை 3 மணி நேரம் ஊற வைத்து பின்பு பழைய ஈரப்பதத்திற்கு காய வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதால் விதைகளின் சேமிப்புத்திறன் அதிகமாகிறது.

விதைச் சான்றளிப்பு

பாரம்பரியத்தூய்மையில் இருந்து சிறிதும் குறையாததும், பிற இனக் கலப்பில்லாததும், பிற பயிர்களை விதை கலப்பு இன்றி, தூசு துப்பு இன்றி அதிக சுத்தத்தன்மை உடையதும், அதிக முளைப்புத்திறனும் வீரியமும், மற்றும் நோய் தாக்காத விதைகளே தரமான விதைகள்.        விவசாயிகளுக்கு விதையின் இனத்தூய்மை பற்றியும் விதைத் தரம் பற்றியும் உத்திரவாதம் அளிப்பதே விதைச் சான்றளிப்பு ஆகும். விதை உற்பத்திக்கு தரக்கட்டுப்பாட்டுக்கென்று சட்ட பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே விதை சான்றளிப்பு ஆகும். இதை “தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன்” என்று கூடச் சொல்லலாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக சுத்தத்தன்மையும், மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.

விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, முட்டை பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பன வரையும் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் விதைகளை முளைப்புச் சோதனைக்கு அனுப்பி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றிக்கப்பட்டு அவை விற்பனைக்குத் தயாராகின்றன.

எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதை சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.

பரிந்துரைக்கப்பட்ட வயல் மற்றும் விதைத் தரம்

வயல் தரம்

  • கலவன்கள்                                                                              0.02 சதம்

(அதிக பட்சம்)

  • அனுதிக்க முடியாத களைச் செடிகள் (அதகபட்சம்)               இருக்கக்கூடாது

விதைத் தரம்

  • சுத்தமான விதைகள்

(குறைந்த பட்சம்)                                                                    99 சதம்
தூசி (அதிக பட்சம்)                                                                1.0 சதம்

  • பிற இனப்பயிர் விதைகள்                                                      5/கிலோ

(அதிக பட்சம்)

  • மொத்த களைவிதைகள்                                                                      இருக்கக்கூடாது

(அதிகபட்சம்)

  • அனுமதிக்க முடியாத களை விதைகள் (அதிகபட்சம்)                       இருக்கக்சகூடாது
  • பிற இரக விதைகள் (அதிக பட்சம்)                                        20/கிலோ
  • முளைப்புத்திறன் (குறைந்த பட்சம்)                                       65.0 சதம்
  • ஈரத்தன்மை (அதிக பட்சம்)   

காற்றுப்புகும் பை                                                                   10.0 சதம்
காற்றுப்புகாத பை                                                                  8.0 சதம்

வெண்டை விதை உற்பத்தி வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உற்பத்தி செய்து அதிக லாபம் பெறலாம். தனியார் விதை உற்பத்தியாளர்களும் உற்பத்தி வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உற்படுத்தி, நல்ல தரமான விதை உற்பத்தி செய்து விநியோகம் செய்யலாம்.

விதைச் சான்று பெறுவதற்கு நீங்கள் அருகாமையிலுள்ள விதைச் சான்றளிப்பு அலுவலர்களை அணுகி மேலும் விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016.

Fodder Cholam