வரமிளகாய் 
      விதை உற்பத்திக்கு ஏற்ற நிலத் தேர்வு  
                 
  நிலத் தேர்வு செய்யும்  போது முந்தைய பருவத்தில் வேறு இரக மிளகாய் பயிரிடப்படாத வயலைத் தேர்ந்தெடுத்தல் மிக  அவசியம். இவ்வாறு செய்வதால் தான் தோன்றிப் பயிர்களால் ஏற்படும் இனக் கலப்பை தவிர்க்கலாம். 
      இனத் தூய்மையை பராமரிக்க பயிர் விலகு தூரம்  
                 
  மிளகாய் பெரும்பாலும் அயல்  மகரந்தச் சேர்க்கையுடைய காய்கறிப் பயிராகும். பயிரிடப்படும் விதைப் பயிரானது பிற இரக  வயல்களிலிருந்து குறைந்தது 200 மீட்டர் தூரம் தனிமைப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு  செய்வதால் அறுவடைக் காலங்களில் ஒரு இரகம் மற்றொரு இரகத்துடன் கலந்து விடாமல் விதைகளின்  பாரம்பரியத் தூய்மையை நாம் பாதுகாக்க முடியும். 
      விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம் 
                 
  “பருவத்தே பயிர் செய்”  என்பது பழமொழி. விதைப்பயிருக்கு இது மிகவும் பொருந்தும். விதைகளின் தரம் அது பயிரிடப்படும்  சூழ்நிலைக்கு ஏற்ற அமைகிறது. மிளகாய் எல்லா பருவங்களிலும் சாகுபடி செய்தாலும், விதை  உற்பத்திக்கு ஏற்ற சரியான பருவத்தை தேர்ந்தெடுப்பதுதான் மிக அவசியம். விதை எடுப்பதற்கான  பழ அறுவடைகளை முடித்து விதைகளைப் பிரித்து நன்கு உலர வைக்க ஏதுவான உலர்ந்த சூழ்நிலை  இருத்தல் அவசியம். விதை உற்பத்தி செய்வதற்கு சிறந்த பருவம் ஜ¤ன் - ஜ¤லை மாதங்கள் ஆகும்.  அப்பருவங்களில் விதைகளை பிரித்தெடுத்த பின் உலர்த்துவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் அமைகின்றன. 
      வளமான நாற்றுக்களைப் பெறும் வழிமுறைகள் 
          
  “விளையும் பயிர் முளையிலே”  என்ற பழமொழிக்கு ஏற்ற நல்ல தரமான விதைகளைத் தேர்ந்தெடுப்பதுடன் அவ்விதைகளை நல்ல வீரியமுள்ள  நாற்றுக்களாக உண்டாக்குவது முக்கியம். நடவு வயல்களில் நல்ல வீரியமுள்ள நாற்றுக்களை  நடுவதால் அந்நாற்றுக்கள் நன்றாக தழைத்து பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல்களை எதிர்த்து  வளர உதவுகிறது. அத்துடன் நாற்றுக்கள் நடவு வயல்களில் அடியுரமாக இடப்பட்ட உரங்களை வெகுவாக  பயன்படுத்தி வளர உதவுகின்றன. நாற்றுக்களை வீரியத்துடன் நடுவது நடவு வயல் பராமரிப்பில்  அதிக நாற்றுக்கள் வீணாக்காமல் தழைக்க ஏதுவாகிறது. அதனால், நாற்றுக்களை வீரியத்துடன்  வளரச் செய்ய நாற்றங்கால் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 
      விதை தேர்ந்தெடுத்தலின் நன்மை 
          
  வளமான நாற்றுக்களைப் பெற  தரமான மிளகாய் விதையை பயன்படுத்த வேண்டும். “விளையும் பயிர் முளையிலே” என்பது பழமொழி.  அதுபோல நாம் பயிரிடும் பயிர் மகசூல் விதையின் தரத்தை பொறுத்தே அமையும். விதை உற்பத்தி  செய்யும் பயிரில் மகசூலுடன் இரகத்தினுடைய பாரம்பரிய குணாதிசயங்களையும் பராமரிப்பது  மிக முக்கியம். அது விதைக்கும் விதையின் தரத்தை பொறுத்தே இருக்கும். எனவே விதை உற்பத்தி  பயிர் விதைப்பிற்கு விதைத் தேர்ந்தெடுத்தலுக்கு இன்றியமையாததாகும். 
      விதைப்பு 
          
  ஒரு ஏக்கருக்கு தேவையான  150 கிராம் விதையை விதைக்க 3 சென்ட் நாற்றங்காலில் விதைப்பு போதுமானது. மேட்டுப்பாத்திகளில்  படத்தில் உள்ளது போல 10 செ.மீ இடைவெளியில் கோடுகள் போட்டு விதைகளை பரவலாக விதைக்க  வேண்டும். பின் படத்தில் உள்ளது போல கோடுகளில் போட்ட விதைகளை மணல் அல்லது நாற்றங்கால்  மண் கொண்டு மூடி விட வேண்டும். அதன் பிறகு மேட்டுப்பாத்திகள் நன்கு மூழ்கும் அளவிற்கு  நீர் பாய்ச்ச வேண்டும். நாற்றுக்கள் முளைத்த பிறகு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.  
         
      நாற்றங்காலுக்கு உரம் இடுதல் 
                 
ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு  இரண்டு கிலோ டி.ஏ.பி உரம் இடுவதால் நாற்றுகள் நன்கு ஊட்டத்துடன் வளர்கின்றன. மேலும்  நாற்றுக்களைப் பிடுங்கும் போதும் வேர் அறுபடாமல் சுலபமாக வரும். டி.ஏ.பி.உரம் இல்லாவிட்டால்,  6 கிலோ யூரியாவும் 12 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் சேர்த்து இடலாம். வேர் அறுபடாத நாற்றுகளை  வயலில் நடும்போது எளிதில் அவை நிலத்தில் பிடிப்பு கொள்கின்றன. இதைத்தான் கிராமங்களில்  “நாற்று திரும்பிடிச்சு” என்று கூறுகிறோம். 
      நாற்றின் வயது 
                 
  விதைப் பயிர் செழித்து  வளர்வதில் நாற்றின் வயது முக்கிய பங்கு வகிக்கிறது. வயது குறைந்த நாற்றையோ அல்லது  வயது அதிகமான நாற்றையோ நடுவதால் மகசூல் குறைகின்றது என்பதை நாம் அறிவோம். மிளகாய்  நாற்றுக்களை, நாற்றுவிட்ட 30 - 35 நாட்களில் எடுத்து நட வேண்டும். 
      நடவு பாத்தி தயார் செய்தல் மற்றும் பராமரிப்பு  
                 
  நடவு செய்ய நீங்கள் தேர்ந்தெடுத்த  நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது விடவும். கடைசி உழவில் ஒரு ஏக்கருக்கு  20 வண்டி மக்கிய தொழுவுரத்தை போட்டு நன்கு உழுது விடவும். அதற்கு பின் நடவு பாத்திகளில்  60 செ.மீ. இடைவெளிகளில் பார்கள் அமைத்து கொள்ள வேண்டும். 
          
  இவ்வாறு பார்கள் அமைத்த  பின்பு, பார்களின் கீழ் பகுதியில் சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக  இடவேண்டும். நடவு பாத்திகளில் அடியுரம் இடுவது செடிகளின் முன் பருவ வளர்ச்சிக்கு மிக  முக்கியமான ஒன்றாகும். செடிகள் ஆரம்ப காலத்தில் நன்கு தளிர்த்து வீரியத்துடன் வளர மிகவும்  அவசியமாகிறது. இவ்விதை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு கீழ்க்கண்ட அளவு அடியுரம் இடவும். 
  சூப்பர் பாஸ்பேட்            168 கிலோ     
  பொட்டாஷ்                 45 கிலோ 
      நடவு 
          
  நன்கு பராமரிக்கப்பட்ட  நாற்றங்காலில் இருந்து எடுக்கப்பட்ட வீரிய நாற்றுக்களையே நடவிற்கு பயன்படுத்துங்கள்.  பார்கள் முழுவதும் நன்கு நனையும் அளவிற்கு நீர் பாய்ச்சி 30 செ.மீ. இடைவெளிகளில் நாற்றுக்களை  நடவேண்டும். நட்ட பின்பு மூன்றாவது நாள் மறுபடியும் நீர் பாய்ச்ச வேண்டும். அதை உயிர்  தண்ணீர் என்போம். இவ்வாறு நீர் பாய்ச்சுவதால் நட்ட நாற்றுக்கள் நன்கு வேர்விட்டு தளிர்க்க  ஏதுவாக இருக்கிறது. 
      களைக் கட்டுப்பாடு 
                 
  மிளகாய் விதைப்பயிரில்  களைகளை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இதற்காக நாற்றுக்கள்  நட்ட மூன்றாவது நாளுக்குள் ஒரு ஏக்கருக்கு 400 மில்லி ப்ளுக்குளோராலின் களைக் கொல்லியை  நாப்சாக் கை தெளிப்பான் கொண்டு தெளித்து விட வேண்டும். மேலும் 40 - 45 நாட்களுக்குள்  ஒரு கை களை  எடுத்து செடிகளுக்கு மண் அணைத்து  விடுவது அவசியம்.  
      மேலுரம் 
                 
  விதைப்பயிர் காய்கறிப்  பயிரில் மாறுபடுவதால் விதைப்பயிர்களுக்கு மேலுரம் இடுவது மிகவும் அவசியமாகிறது. மிளகாய்  செடிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க இப்பயிருக்கு யூரியாவை கீழ்க்கண்ட அளவு (ஏக்கருக்கு)  மூன்று மேலுரங்களாக இடவேண்டும். ஏக்கருக்கருக்கு 44 கிலோ யூரியாவை நட்ட 15 வது நாளிலும்,  இரண்டாவது மேலுரமாக 44 கிலோ யூரியாவை நட்ட 45வது நாளிலும், மூன்றாவது மேலுரமாக 35  கிலோ யூரியாவை நட்ட 90 வது நாளிலும் இடுவது அவசியம். மேலுரம் இடுவதால் செடிகளை நல்ல  வாழிப்பாக வீரியத்துடன் பராமரிக்க ஏதுவாகிறது. அதனால் காய்கள் நன்கு முதிர்ச்சி அடைந்து  அதன்பின் விதைகள் நன்கு முதிர்ச்சி அடைய உதவுகின்றது. 
      பயிர் பாதுகாப்பு 
                 
  “நோயற்ற வாழ்வே குறைவற்ற  செல்வம்” என்பது போல விதைப் பயிர்களையும் நோய் தாக்குதல் இன்றி பாதுகாப்பது தரமான  விதை உற்பத்திக்கு மிகவும் அவசியம். எனவே, அவ்வப்போது தென்படுகின்ற பூச்சி மற்றும்  நோய்களைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க  வேண்டும். 
      தரமான விதை உற்பத்தியில் கலவன்களை நீக்குதலின் முக்கியத்துவம் 
                 
  இனக்கலப்பில்லாத, தரமான  மிளகாய் விதை உற்பத்திக்கு விதைப் பயிரைத் தனிமைப்படுத்துவதின் முக்கியத்துவம் பற்றி  நாம் முன்பே பார்த்தோம். இப்பொழுது, விதை உற்பத்தியில் கலவன்கள் எப்படி விதையின்  தரத்தைப் பாதிக்கின்றன, அவற்றை நீக்குவதால் விதையின் இனக்கலப்பு மற்றும் தரம் எப்படி  பாதுகாக்கப்படுகின்றன என்பவை பற்றி தெரிந்து கொள்வோம். 
          
  சாதரணமாக, மிளாகாய் வயல்களில்  சில பயிர்கள் அதிக வளர்ச்சியுடன் சீக்கிரமாகவே பூத்திருப்பதையும், சில பயிர்கள் சரியான  வளர்ச்சியில்லாமல் படர்ந்து வளர்ந்திருப்பதையும் நீங்கள் அனுபவத்தில் அறிவீர்கள். அவை,  ஒரே இரகத்தைச் சேர்ந்த பயிராக இருந்திருந்தால் அந்த வயலில் வேறுபாடுகள் எப்படி வந்திருக்க  முடியும்? விதை உற்பத்தி செய்யப்படுகிற மிளகாய் வயலில் ஏதோ ஒரு வேறு இனக்கலப்பு ஆகியிருப்பதையே  இது நமக்குத் தெரியப்படுத்துகிறது அல்லவா? இதனால், நாம் உற்பத்தி செய்யும் மிளகாய்  இரகத்தின் இனத்தூய்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டு, அந்த வயல் விதை உற்பத்திக்கே தகுதியற்றதாக  ஆகிவிடுகிறது. 
          
  எனவே, மிளகாய் விதைக்காக  நடவு செய்யப்பட்ட பாத்திகளில் அந்தக் குறிப்பிட்ட மிளகாய் இரகத்தின் குணாதிசியங்களிலிருந்து  மாறுபட்டுத் தெரிகின்ற எல்லா பயிர்களையும், களைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட முக்கியமாக  வைரஸ் நோய் தாக்கப்பட்ட செடிகளையும் தக்க தருணத்தில் அதாவது அவைகள் பூக்கும் தருணத்திற்கு  முன்னரே நீக்கிவிடுதல் மூலம் இனக் கலப்பில்லாத சுத்தமான நல்ல விதைகளை நீங்களும் உற்பத்தி  செய்யலாம். 
      
        
            
                    கலவன்கள்    நீக்கும் தருணம்   | 
              நீக்கப்பயன்படும் தன்மைகள்  | 
             
            
              பூப்பதற்கு முன்  | 
              செடிகளின் உயரம் கிளைகளின்    எண்ணிக்கை தண்டு மற்றும் இலைகளின் நிறம்  | 
             
            
              காய்ந்த பின்  | 
              பழத்தின் வடிவம், நிறம்    மற்றும் பருமன் (படம் காண்க)  | 
             
            
              அறுவடைக்கு பின்  | 
              பழத்தின் வடிவம், நிறம்    மற்றும் பருமன்  | 
             
               
       
      அறுவடை 
          
  மிளகாயில்  விதைக்காக அறுவடை செய்யும் போது படத்தில் உள்ளது போல் காய்கள் நன்கு பழுத்து முழுவதும்  சிவப்பு நிறமாக மாறிய பின்புதான் எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் விதைகள் நன்கு முதிர்ச்சி  அடைந்து நல்ல முளைப்பு மற்றும் வீரியத் திறனுடன் இருக்கும். 
         
  அறுவடை,  இதர பயிர்கள் போல் ஒரே அறுவடையாக இல்லாமல் மிளகாயில் பல அறுவடைகளாக எடுக்க வேண்டி  உள்ளது. அவற்றில் முதல் மற்றும் கடைசி ஓரிரு அறுவடைகளை தவிர்த்து இடைப்பட்ட அறுவடைகளில்  இருந்து வரும் பழங்களிலிருந்து மட்டுமே விதைகள் எடுக்க பயன்படுத்த வேண்டும். முதல்  மற்றும் கடைசி ஓரிரு அறுவடைகளிலிருந்து கிடைக்கும் விதைகளின் மகசூல் மற்றும் தரம் குறைவாக  காணப்படும். எனவே, அவ்வறுவடைகளை காய்கறிக்காக எடுத்து விற்றுவிடலாம். மேலும் இடைப்பட்ட  அறுவடைகளில் இருந்து நோய் தாக்காத மற்றும் சிறிய பழங்களை அகற்றிவிட்டு படத்தில் உள்ளது  போல நடுத்தரம் முதல் பெரிய பழங்களை மட்டுமே விதை எடுப்பதற்காக பயன்படுத்த வேண்டும். 
      விதை தரம் பராமரிக்க சில வழி முறைகள் 
        
  பொதுவாக  மிளகாய் வத்தல்களை அப்படியே சேமித்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது விதைகளை  பிரித்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் விதைகளை வத்தல்களுடன் 2 வருடங்கள்  வரை சேமிக்க இயலும். விதையைப் பிரித்தெடுக்க தரம் பிரித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மிளகாய்  பழங்களை பிரித்தெடுக்க நன்கு காய்ந்த வத்தல்களை சாக்கு பை அல்லது துணிப்பைகளில் எடுத்துக்  கொண்டு வளையும் தன்மை கொண்ட மூங்கில் குச்சிகளால் தட்ட வேண்டும். இவ்வாறு செய்வதால்  மிளகாய் வத்தல்கள் உடைந்து விதைகள் வெளியே வந்துவிடும். அதன்பின் உடைந்த வத்தல்களுடன்  கூடிய விதைகளை காற்றில் தூற்றியும் அல்லது மொரங்களைக் கொண்டு புடைத்தும் பிரித்தெடுக்கலாம்.  மிளகாய் வத்தல் அதிக அளவில் இருந்தால் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து  உருவாக்கப்பட்ட, படத்தில் உள்ளது போன்ற மிளகாய் விதை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை  பயன்படுத்தலாம். 
      விதையை உலர்த்துதல் 
                
  பிரித்தெடுத்த  விதைகளை உடனே முறைப்படி உலர வைக்க வேண்டும். பிரித்து சுத்தம் செய்த மிளகாய் விதைகளை  சேகரித்து கித்ததான் சாக்குகளின் மேல் லேசாக பரப்பி நிழலில் 8 முதல் 10 மணி நேரம் வரை  உலரவைக்க வேண்டும். பின் சூரிய ஒளியில் உலர வைக்க வேண்டும். விதைகளை வெய்யிலில் உலர்த்தும்  போது தினமும் காலை 8 முதல் 12 மணி வரையிலும், பின்னர் 3 முதல் 5 மணி வரையிலும் உலர்த்துவது  நல்லது. 12 முதல் 3 மணி வரை உள்ள காலத்தை தவிர்ப்பது அவசியம். ஏனெனில், அந்த இடைக்கால  நேரத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் வீச்சு அதிகமாக இருப்பதாலும் வெய்யிலின்  வெப்பநிலை உச்சத்தில் உள்ளதாலும் விதையின் தரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. 
      
       
        உங்கள் கவனத்திற்கு 
        விதைகளை பிரித்தெடுத்தவுடன் நேரடியாக வெய்யிலில் உலர்த்தக்கூடாது. அவ்வாறு செய்தால் விதையின் முளைப்புத்திறன் அதிகமாக பாதிக்கப்படும். 
         
      விதை சுத்திகரிப்பு 
                
விதைகளை  நன்கு உலர்த்திய பின்பு விதைகளை சுத்திகரிப்பது மிக முக்கியம். அவ்வாறு விதை சுத்திகரிப்பு  செய்வதால் முதிராத பொக்கு மற்றும் சிறிய விதைகளை அகற்றுவதால் விதைகளின் வீரியம் மற்றும்  சேமிப்புத் திறன் கூடுகின்றன. விதை சுத்திகரிப்பின் போது முற்றாத, உடைந்த, கெட்டுப்போன  விதைகளையும், விதையுடன் கலந்திருக்கும் மற்ற விதைகள், கல், மண், தூசி முதலியவற்றையும்  அகற்றி விட வேண்டும். மிளகாய் விதைகளை 10 நெம்பர் கம்பி வலை கொண்ட கைச் சல்லடைகள்  கொண்டு சுத்திகரிப்பு செய்ய வேண்டும். விதைகளை சலித்து மேலே தங்கும் தரமான அடர்த்தியான  விதைகளை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். 
      விதை சுத்திகரிப்பில் முக்கியமாக கவனிக்க  வேண்டியவை 
                
  விதை  சுத்திகரிப்பு செய்யாமல் சேமித்து வைப்பது விதையின் தரத்தை வெகுவாக பாதிக்கிறது. சுத்திகரிப்பில்  கம்பி வலை சல்லடைகளை ஒரு இரகத்திற்கு பயன்படுத்திவிட்டு வேறு இரகத்திற்கு மாற்றும்  போது நன்கு சுத்தம் செய்யாவிடில் விதைக் கலப்பு நேர்ந்து விதைகளின் இனத்தூய்மை பாதிக்கப்படும்.  எனவே, விதை சுத்திகரிப்பு முறைகளில் அதிக கவனத்துடன் செயல்படவேண்டும்.  
      விதை சேமிப்பு 
               
  விதை  உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப்  பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது. 
      விதையின் ஈரப்பதம் 
                
  விதையின்  ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது. விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால்  விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 7  - 8 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளில் நிறைத்து சேமியுங்கள். நீண்ட காலம்  விதைகளை சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை 6 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன்  பைகளில் சேமித்து வையுங்கள். 
      விதை நேர்த்தி                                                                   
                
  விதைகளை  சேமிப்புக்கு முன் பூஞ்சாணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு திராம்  அல்லது கேப்டான் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வையுங்கள்.  இதற்குப் பதிலாக விதைகளை குளோரினேற்றம் செய்தும் சேமிக்கலாம். குளோரினேற்றம் என்றால்  கால்சியம் ஆக்ஸி குளோரைடு (அதாவது பிளீச்சிங் பவுடர்) என்ற இரசாயன பொருளை கால்சியம்  கார்பனேட் என்ற பொருளுடன் சம விகிதத்தில் கலந்து காற்றுப் புகா பாட்டிலில் ஒரு வாரம்  அடைத்து வைத்திருந்து பின்னர் அந்தக் கலவையிலிருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற  அளவில் எடுத்து கலந்து பின்பு சேமியுங்கள். குளோரினேற்றம் ஒரு சுற்றுப்புற சூழல் மாசுபடாத  விதை நேர்த்தி முறையாகும். 
      விதை சேமிப்புப் பைகள்                                                          
          
  விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை  கிரகிக்கும் தன்மை உடையவை என்பது உங்களுக்குத் தெரிந்ததே. ஆகையால் காற்றின் ஈரத்தன்மை  அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி ஓரங்களில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகா  பைகளையே உபயோகிக்க வேண்டும். ஈரக்காற்று புகா பைகள் எவை? 700 அடர்வுள்ள பாலிதீன் பைகளே  காற்று புகாத பைகள். எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள். 
      இடைக்கால விதை நேர்த்தி  
                 
  உங்கள் தேவைக்கென சேமித்து  வைத்திருக்கும் குறைந்த அளவு விதைகளை 5 அல்லது 6 மாத கால சேமிப்புக்குப் பின் “ஊறவைத்து  உலர வைக்கும் முறை” மூலம் விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு டை - சோடியம் பாஸ்பேட்  என்ற இரசாயன மருந்தை 100 லிட்டர் நீருக்கு 3.6 கிராம் என்ற விகிதத்தில் கரைத்து வைத்துக்  கொள்ளுங்கள். இந்த கரைசலில் (ஒரு பங்கு விதைக்கு இரு பங்கு கரைசல்) விதைகளை 3 மணி  நேரம் ஊற வைத்து பின்பு பழைய ஈரப்பதத்திற்கு காய வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதால்  விதைகளின் சேமிப்புத்திறன் அதிகமாகிறது. 
      விதைச் சான்றளிப்பு 
                 
  பாரம்பரியத்தூய்மையில்  இருந்து சிறிதும் குறையாததும், பிற இனக் கலப்பில்லாததும், பிற பயிர் களை விதை கலப்பு  இன்றி, தூசு துப்பு இன்றி அதிக சுத்தத்தன்மை உடையதும், அதிக முளைப்புத்திறனும் வீரியமும்,  மற்றும் நோய் தாக்காத விதைகளையே நாம் தரமான விதைகள் என்று சொல்கிறோம். 
          
  விவசாயிகளுக்கு விதையின்  இனத்தூய்மை பற்றியும் விதைத் தரம் பற்றியும் உத்திரவாதம் அளிப்பதே விதைச் சான்றளிப்பு  ஆகும். விதை உற்பத்திக்கு தரக்கட்டுப்பாட்டுக்கென்று சட்ட பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட  முறையே விதை சான்றளிப்பு ஆகும். இதை “ தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன்” என்று  கூடச் சொல்லலாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும்,  அதிக சுத்தத்தன்மையும், மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்குக்  கிடைக்கச் செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கம் ஆகும். 
          
  விதைச் சான்று பல்வேறு  நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட  நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும்  தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு,  மூட்டை பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பன வரையும் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும்  விதைகளை முளைப்புச் சோதனைக்கு அனுப்பி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள்  வழங்கப்படுகின்றன. இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 
          
  ஆய்வின் போது வயல் தரம்  மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி  செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்குத் தயாராகின்றன. 
          
  எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன்  மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.  நம் தமிழகத்தில்  
      சான்றுவிதை உற்பத்தி செய்யும்போது உற்பத்தி  செய்த விதைகளில் கீழ்க்கண்ட விதைத்தரம் இருத்தல் அவசியம் 
      வயல் தரம் 
      
        
            
              கலவன்கள் (அதிக பட்சம்)  | 
              
                -  
 
                | 
              0.2 சதம்  | 
             
            
              விதை நோயால் தாக்கப்பட்ட செடிகள் (அதிக பட்சம்)   | 
              
                -  
 
                | 
              0.5 சதம்  | 
             
               
       
      விதைத் தரம் 
      
        
            
              சுத்தமான விதைகள் (குறைந்த பட்சம்)  | 
              
                -  
 
                | 
              98 சதம்  | 
             
            
              தூசி (அதிக பட்சம்)  | 
              
                -  
 
                | 
              2 சதம்  | 
             
            
              பிற இனப்பயிர் விதைகள் (அதிக பட்சம்)  | 
              
                -  
 
                | 
              10 / கிலோ   | 
             
            
              களை விதைகள் (அதிக பட்சம்)  | 
              
                -  
 
                | 
              10 / கிலோ  | 
             
            
              முளைப்புத் திறன் (குறைந்த பட்சம்)  | 
              
                -  
 
                | 
              60 சதம்  | 
             
            
              ஈரத்தன்மை (அதிக பட்சம்)  | 
              
                -  
 
                | 
                 | 
             
            
              காற்றுப்புகாத பை   | 
              
                -  
 
                | 
              8.0 சதம்  | 
             
            
              காற்றுப்புகும் பை   | 
              
                -  
 
                | 
              6.0 சதம்  | 
             
               
       
                             |