கத்தரி 
      விதை உற்பத்திக்கு ஏற்ற நிலத் தேர்வு 
          
  நிலத் தேர்வு செய்யும்  போது முந்தைய பருவத்தில் வேறு இரக கத்தரி பயிரிடப்படாத வயலைத் தேர்ந்தெடுத்தல் மிக  அவசியம். இவ்வாறு செய்வதால் தான் தோன்றிப் பயிர்களால் ஏற்படும் இனக் கலப்பை தவிர்க்கலாம். 
      J தான்தோன்றி பயிர்கள் என்றால் என்ன? 
                 
  வயலில் உள்ள மண்களில் கலந்துள்ள விதைகளிலிருந்து முளைக்கும் பயிர்களே தான்தோன்றி  பயிர்களாகும். இவ்விதைகள் முந்தைய கால பருவ பயிர்களில் இருந்து கீழே விழுந்தவை ஆகும்.  விதைக்காமல் தானகவே முளைத்து வளரக்கூடியவை என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.  
      இனத் தூய்மையை பராமரிக்க பயிர் விலகு தூரம் 
          
  கத்தரி பெரும்பாலும் அயல்  மகரந்தச் சேர்க்கையுடைய காய்கறிப் பயிராகும். பயிரிடப்படும் விதைப் பயிரானது பிற இரக  வயல்களிலிருந்து குறைந்தது 100 மீட்டர் தூரம் தனிமைப் பட்டிருக்க வேண்டும். இவ்வாறு  செய்வதால் பூக்கும் தருணத்தில் ஒரு இரகம் மற்றொரு இரகத்துடன் மகரந்தச் சேர்க்கை ஏற்படாமல்  விதைகளின் பாரம்பரியத் தூய்மையை பாதுகாக்க முடியும். 
      விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம்  
          
  “பருவத்தே பயிர் செய்”  என்பது பழமொழி. விதைப்பயிருக்கு இது மிகவும் பொருந்தும். விதைகளின் தரம் அது பயிரிடப்படும்  சூழ்நிலைக்கு ஏற்ப அமைகிறது. கத்தரி எல்லா பருவங்களிலும் சாகுபடி செய்தாலும், விதை  உற்பத்திக்கு ஏற்ற சரியான பருவத்தை தேர்ந்தெடுப்பதுதான் மிக அவசியம். விதை எடுப்பதற்கான  பழ அறுவடைகளை முடித்து விதைகளைப் பிரித்து நன்கு உலர வைக்க ஏதுவான உலர்ந்த சூழ்நிலை  இருத்தல் அவசியம். விதை உற்பத்தி செய்வதற்கு சிறந்த பருவம் ஜ¤ன் - செப்டம்பர் மாதங்கள்  ஆகும். அப்பருவங்களில் விதைகளை பிரித்தெடுத்த பின் உலர்த்துவதற்கு ஏற்ற சூழ்நிலைகள்  அமைகின்றன. 
          
  விதை உற்பத்தி செய்வதற்கு  மே மாதத்தில் நாற்று விட்டு, ஜ¤லை மாத முதல் வாரத்தில் நடவு செய்துவிடவும். அவ்வாறு  நடவு செய்வதால் விதை எடுப்பதற்கான அறுவடைகள் செப்படம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடுவதால்,  விதைகளைப் பிரித்து நன்கு உலர வைக்க ஏற்ற சூழ்நிலை அமைகின்றது. எனவே கத்தரி விதை உற்பத்திக்கு  ஏற்ற பருவம் ஜ¤ன் - செப்படம்பர் மாதங்களே.  
      வளமான நாற்றுக்களைப் பெறும் வழிமுறைகள் 
          
  “விளையும் பயிர் முளையிலேயே”  என்ற பழமொழிக்கு ஏற்ற நல்ல தரமான விதைகளைத் தேர்ந்தெடுப்பதுடன் அவ்விதைகளை நல்ல வீரியமுள்ள  நாற்றுக்களாக உண்டாக்குவது முக்கியம். நடவு வயல்களில் நல்ல வீரியமுள்ள நாற்றுக்களை  நடுவதால் அந்நாற்றுக்கள் நன்றாக தழைத்து பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல்களை எதிர்த்து  வளர உதவுகிறது. அத்துடன் நாற்றுக்கள் தாக்குதல்களை எதிர்த்து வளர உதவுகிறது. அத்துடன்  நாற்றுக்கள் நடவு வயல்களில் அடியுயரமாக இடப்பட்ட உரங்களை வெகுவாக பயன்படுத்தி வளர உதவுகின்றன.  நாற்றுக்களை வீரியத்துடன் நடுவது நடவு வயல் பராமரிப்பில் அதிக நாற்றுக்கள் வீணாகாமல்  தழைக்க ஏதுவாகிறது. அதனால், நாற்றுக்களை வீரியத்துடன் வளரச் செய்ய நாற்றங்கால் பராமரிப்பில்  அதிக கவனம் செலுத்த வேண்டும். 
      விதை தேர்ந்தெடுத்தலின் நன்மை 
                 
  வளமான நாற்றுக்களைப் பெற  தரமான கத்தரி விதையை பயன்படுத்த வேண்டும். “விளையும் பயிர் முளையிலே” என்பது பழமொழி.  அதுபோல பயிரிடும் பயிர் மகசூல் விதையின் தரத்தை பொறுத்தே அமையும். விதை உற்பத்தி  செய்யும் பயிரில் மகசூலுடன் இரகத்தினுடைய பாரம்பரிய குணாதிசயங்களையும் பராமரிப்பது  மிக முக்கியம். அது விதைக்கும் விதையின் தரத்தை பொறுத்தே இருக்கும். எனவே விதை உற்பத்தி  பயிர் விதைப்பதற்கு தேர்ந்தெடுக்கும் விதைகள் வல்லுநர் அல்லது ஆதார நிலை விதைகளாக இருப்பது  மிக முக்கியம். 
      நாற்றங்கால் தேர்வு மற்றும் பராமரிப்பு 
      நாற்றங்கால் அமைப்பு 
          
  நல்ல தரமான விதைகளை பெற்ற  பின் நல்ல நாற்றுக்களை தயாரிப்பது மிக முக்கியம். ஆதலால் நல்ல வீரியமுள்ள நாற்றுக்களைப்  பெற நன்கு பண்படுத்திய ஒரு சென்ட் நிலத்திற்கு 200 கிலோ வரை மக்கிய தொழு உரம் அல்லது  கம்போஸ்ட் போட்டு படத்தில் உள்ளது போல அமைத்த மேட்டுப் பாத்திகளில் நாற்றுவிட வேண்டும். 
      மேட்டுப் பாத்தி நாற்றங்கால் 
      விதைப்பு 
          
  ஒரு ஏக்கருக்கு தேவையான  150 கிராம் விதையை விதைக்க 3 சென்ட் நாற்றங்காலில் விதைப்பு போதுமானது. மேட்டுப்பாத்திகளில்  படத்தில் உள்ளது போல 10 செ.மீ இடைவெளியில் கோடுகள் போட்டு விதைகளை பரவலாக விதைக்க  வேண்டும். பின் படத்தில் உள்ளது போல கோடுகளில் போட்ட விதைகளை மணல் அல்லது நாற்றங்கால்  மண் கொண்டு மூடி விட வேண்டும். அதன் பிறகு மேட்டுப்பாத்திகள் நன்கு மூழ்கும் அளவிற்கு  நீர் பாய்ச்ச வேண்டும். நாற்றுக்கள் முளைத்த பிறகு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.  
      
       
        J கவனத்திற்கு  
                 மேட்டுப் பாத்திகள் அமைக்கும் போது பாத்திகளின் அகலம் ஒரு மீட்டருக்கு      அதிகமில்லாமல் அமைப்பது அவசியம். ஏனெனில் நாற்றங்காலில் களை எடுப்பது உரம் இடுவது      போன்ற வேலைகளை செவ்வனே செய்ய சுலபமாக இருக்கும். 
       
      நாற்றங்காலுக்கு உரம் 
        
எவ்வாறு வளரும் குழந்தைகளுக்கு  ஊட்டம் அவசியமோ அதே போல் நாற்றங்காலுக்கும் உரம் அவசியம். இதற்கு ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு  இரண்டு கிலோ டி.ஏ.பி. உரம் இடுவதால் நாற்றுகள் நன்கு ஊட்டத்துடன் வளர்கின்றன. மேலும்  நாற்றுக்களைப் பிடுங்கும் போதும் வேர் அறுபடாமல் சுலபமாக வரும். டி.ஏ.பி உரம் இல்லாவிட்டால்,  6 கிலோ யூரியாவும் 12 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் சேர்த்து இடலாம். வேர் அறுபடாத நரற்றுகளை  வயலில் நடும்போது எளிதில் அவை நிலத்தில் பிடிப்பு கொள்கின்றன. இதைத்தான் கிராமங்களில்  பச்சை திரும்பிவிட்டது என்று கூறுகிறோம். 
      நாற்றின் வயது 
          
  விதைப் பயிர் செழித்து  வளர்வதில் நாற்றின் வயது முக்கிய பங்கு வகிக்கிறது. வயது குறைந்த நாற்றையோ அல்லது  வயது அதிகமான நாற்றையோ நடுவதால் மகசூல் குறைகின்றது. கத்தரி நாற்றுக்களை, நாற்றுவிட்ட  30-35 நாட்களில் எடுத்து நட வேண்டும். 
      1.3 நடவு பாத்தி தயார் செய்தல் மற்றும் பராமரிப்பு  
          
  நடவு செய்ய தேர்ந்தெடுத்த  நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுதுவிட வேண்டும். கடைசி உழவில் ஒரு ஏக்கருக்கு  20 வண்டி மக்கிய தொழு உரத்தை பரப்பி நன்கு உழுது விடவேண்டும். அதற்குப் பின் நடவு  பாத்திகளில் 75 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பார்கள்  அமைத்த பின், பார்களின் கீழ் பகுதியில் ஒரு ஏக்கருக்குத் தேவையான 44 கிலோ யூரியா,  180 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 48 கிலோ பொட்டாஷ் உரங்களை கலந்து அடியுரமாக இடவேண்டும்.  நடவு பாத்திகளில் அடியுரம் இடுவது செடிகளின் முன் பருவ வளர்ச்சிக்கு மிக முக்கியமான  ஒன்றாகும். செடிகள் ஆரம்ப காலத்தில் நன்கு தளிர்த்து வீரியத்துடன் வளர மிகவும் அவசியமாகிறது. 
      நடவு 
          
  நன்கு பராமரிக்கப்பட்ட  நாற்றங்கால்களில் இருந்து எடுக்கப்பட்ட வீரிய நாற்றுக்களையே நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.  பார்கள் முழுவதும் நன்கு நனையும் அளவிற்கு நீர் பாய்ச்சி செடிக்கு செடி 60 செ.மீ இடைவெளிகளில்  நாற்றுக்களை நடவேண்டும். நட்ட பின்பு மூன்றாவது நாள் மறுபடியும் நீர் பாய்ச்ச வேண்டும்.  அதை உயிர் தண்ணீர் என்போம். இவ்வாறு நீர் பாய்ச்சுவதால் நட்ட நாற்றுக்கள் நன்கு வேர்விட்டு  தளிர்க்க ஏதுவாக இருக்கிறது. 
      களைக்கட்டுப்பாடு 
                 
  கத்தரி விதைப்பயிரில் களைகளை  ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இதற்காக நாற்றுக்கள் நட்ட மூன்றாவது  நாளுக்குள் ஒரு ஏக்கருக்கு 400 மில்லி லிட்டர் பென்டிமெத்தாலின் களைக்கொல்லியை நாப்சாக்  கைதெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். மேலும் 35 - 40 நாட்களுக்குள் ஒரு கைகளை எடுப்பது  அவசியம்.  
      மேலுரம் 
          
  விதைப்பயிர் காய்கறிப்  பயிரில் இருந்து மாறுபடுவதால் விதைப் பயிர்களுக்கு மேலுரம் இடுவது மிகவும் அவசியமாகிறது.  ஒரு ஏக்கருக்கு 44 கிலோ யூரியாவை மேலுரமாக பூ பூப்பதற்கு முன் இடுவது மிகவும் அவசியம்.  ஏனெனில், மேலுரம் இடுவதால் செடிகளை நல்ல வாழிப்பாக வீரியத்துடன் பராமரிக்க ஏதுவாகிறது.  அதனால் காய்கள் நன்கு முதிர்ச்சி அடைந்து அதன்பின் விதைகள் நன்கு முதிர்ச்சி அடைய உதவுகின்றது. 
      பயிர் பாதுகாப்பு 
                 
  “நோயற்ற வாழ்வே குறைவற்ற  செல்வம்” என்பது போல விதைப் பயிர்களையும் நோய் தாக்குதல் இன்றி பாதுகாப்பது தரமான  விதை உற்பத்திக்கு மிகவும் அவசியம். எனவே, அவ்வப்போது தென்படுகின்ற பூச்சி மற்றம்  நோய்களைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க  வேண்டும். 
      தரமான விதை உற்பத்தியில் கலவன்களை நீக்குதலின் முக்கியத்துவம்  
          
  சாதரணமாக, கத்தரி வயல்களில்  சில பயிர்கள் உயரமாகவும், சில பயிர்கள் படர்ந்தும் வளர்ந்திருப்பதையும் காணலாம். அவை,  ஒரே இரகத்தைச் சேர்ந்த பயிராக இருந்திருந்தால் அந்த வயலில் வேறுபாடுகள் எப்படி வந்திருக்க  முடியும்? விதை உற்பத்தி செய்யப்படுகிற கத்தரி வயலில் ஏதோ ஒரு வேறு இனக்கலப்பு ஆகியிருப்பதையே  இது தெரியப்படுத்துகிறது. இதனால்,  உற்பத்தி  செய்யும் கத்தரி இரகத்தின் இனத்தூய்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டு, அந்த வயல் விதை உற்பத்திக்கே  தகுதியற்றதாக ஆகிவிடுகிறது. 
          
  எனவே, கத்தரி விதைக்காக  நடவு செய்யப்பட்ட பாத்திகளில் அந்தக் குறிப்பிட்ட கத்தரி இரகத்தின் குணாதிசியங்களிலிருந்து  மாறுபட்டத் தெரிகின்ற எல்லா பயிர்களையும், களைகள் மற்றம் நோய்வாய்ப்பட்ட முக்கியமாக  வைரஸ் நோய் தாக்கப்பட்ட செடிகளையும் தக்க தருணத்தில் அதாவது அவைகள் பூக்கும் தருணத்திற்கு  முன்னரே நீக்கிவிடுதல் மூலம் இனக்கலப்பில்லாத சுத்தமான நல்ல விதைகளை நீங்களும் உற்பத்தி  செய்யலாம். 
         
  கலவன்கள் நீக்கும் தருணம்                              நீக்கப்பயன்படும் தன்மைகள் 
  பூப்பதற்கு முன்                                                செடிகள்  உயரம் கிளைகளின்  
                                                         எண்ணிக்கை  தண்டு மற்றும்                                                                 இலைகளின்  நிறம் 
  காய்ந்த பின்                                            பழத்தின்  வடிவம், நிறம் 
                                                         மற்றும்  பருமன் 
  அறுவடைக்கு பின்                                      பழத்தின் வடிவம்,  நிறம் மற்றும்                                                             பருமன் 
  அறுவடை 
          
  கத்தரியில் விதைக்காக அறுவடை  செய்யும் போது காய்கள் படத்தில் உள்ளது போல நன்கு பழுத்து முழுவதும் மஞ்சள் நிறமாக  மாறி பின்புதான் எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் விதைகள் நன்கு முதர்ச்சி அடைந்து  நல்ல முளைப்பு மற்றும் வீரியத் திறனுடன் இருக்கும். 
          
  அறுவடை, இதர பயிர்கள் போல்  ஒரே அறுவடையாக இல்லாமல் கத்தரியில் பல அறுவடைகளாக எடுக்க வேண்டி உள்ளது. அவற்றில் முதல்  மற்றும் கடைசி ஓரிரு அறுவடைகளை தவிர்த்து இடைப்பட்ட அறுவடைகளில் இருந்து வரும் பழங்களிலிருந்து  மட்டுமே விதைகள் எடுக்க பயன்படுத்த வேண்டும். முதல் மற்றும் கடைசி ஓரிரு அறுவடைகளிலிருந்து  கிடைக்கும் விதைகளின் மகசூல் மற்றும் தரம் குறைவாக காணப்படும். எனவே, அவ்வறுவடைகளை  காய்கறிக்காக எடுத்து விற்றுவிடலாம். மேலும் இடைப்பட்ட அறுவடைகளில் இருந்து படத்தில்  உள்ளது போன்ற காய்ப்புழுத் தாக்காத வேறு இரகம் மற்றும சிறிய பழங்களை அகற்றிவிட வேண்டும்.  போன்ற நடுத்தரம் முதல் பெரிய பழங்களை மட்டுமே விதை எடுப்பதற்காக பயன்படுத்த வேண்டும். 
      விதை தரம் பராமரிக்க சில வழி முறைகள் 
           
      விதை பிரித்தெடுக்கும் முறைகள் 
          
  படத்தில் உள்ளது போன்ற  தரம் பிரித்து தேர்ந்தெடுக்கப்பட்ட கத்தரி பழங்களை சிறு சிறு துண்டுகளாக நீட்டவாக்கில்  அறுத்து பின் அவற்றை ஒரு சிமிண்டு தொட்டியில் தண்ணீர் 10 - 12 மணி நேரம் ஊற வைக்க  வேண்டும். அல்லது அறுவடை செய்த பழங்களை ஓரிரு நாட்கள் வைத்திருந்து விதையெடுக்கலாம்.  அதனால் பழங்களின் தோல் பகுதி மேலும் மிருதுவாகி கூழாக்குவது எளிதாகிறது. பின் கை அல்லது  கால்களால் மிதித்து கூழாக்க வேண்டும். அதன் பின் அவற்றுடன் அதிக அளவில் நீர் சேர்த்து  நன்கு கலக்கி விடவும். அதற்குப் பிறகு மேலே மிதக்கும் சதைப் பகுதியை அகற்றிவிட்டு நீரில்  மூழ்கி உள்ள விதைகளைச் சேகரித்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு சேகரித்த விதைகளை சிறிது  நீருடன் எடுத்துக்கொண்டு ஒரு கிலோ விதைக்கு 2-3 மில்லி ஹைட்ரோ குளோரிக் அமிலம்  கலந்து 15 நிமிடங்கள் வைத்துவிட வேண்டும். பின் அவற்றை இரண்டு அல்லது மூன்று முறை நீர்  கலந்து நன்கு கழுவி விட வேண்டும். 
          
  கத்தரியில் பிரித்தெடுத்த  விதைகளை அமில நேர்த்தி செய்வதினால் விதைகளின் நிறம் கூடுவதுடன் விதை மேல் பரவக்கூடிய  பூஞ்சான்கள் அழிந்துவிடும். மேலும் விதைகள் கட்டி சேராமல் ஒரே சீராக உலர்த்த உதவுகின்றன.  கத்தரி விதைப்பயிர் அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்திருந்தால் படத்தில் உள்ளது போன்ற  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட விதை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை  பயன்படுத்தலாம். 
         
      விதை உலர்த்துதல்    
      பிரித்தெடுத்த விதைகளை உடனே முறைப்படி உலர வைக்க  வேண்டும். ஏனெனில், கத்தரி விதைகள் அதிக ஈரப்பத சூழ்நிலையில் இருக்கின்றன. நன்கு கழுவிய  விதைகளை சேகரித்து கித்தான் சாக்குகளின் மேல் லேசாக பரப்பி நிழலில் 8 முதல் 10 மணி  நேரம் வரை உலரவைக்க வேண்டும். பின் சூரிய ஒளியில் உலர வைக்க வேண்டும். விதைகளை வெய்யிலில்  உலர்த்தும் போது தினமும் காலை 8 முதல் 12 மணி வரையிலும், பின்னர் 3 முதல் 5 மணி வரையிலும்  உலர்த்துவது நல்லது. 12 முதல் 3 மணி வரை உள்ள காலத்தை தவிர்ப்பது அவசியம். ஏனெனில்,  அந்த இடைக்கால நேரத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் வீச்சு அதிகமாக இருப்பதாலும்  வெய்யிலின் வெப்பநிலை உச்சத்தில் உள்ளதாலும் விதையின் தரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.  விதைகளை உலர்த்தும் போது விதைகள் கட்டி சேராமல் நன்கு கிளறிவிடவும். 
      விதை சுத்திகரிப்பு  
          
  விதைகளை நன்கு உலர்த்திய  பின்பு விதைகளை சுத்திகரிப்பது மிக முக்கியம். அவ்வாறு விதை சுத்திகரிப்பு செய்வதால்  முதிராத பொக்கு மற்றும் சிறிய விதைகளை அகற்றுவதால் விதைகளின் வீரியம் மற்றும் சேமிப்புத்  திறன் கூடுகின்றன. விதை சுத்திகரிப்பின் போது முற்றாத, உடைந்த, கெட்டுப்போன விதைகளையும்,  விதையுடன் கலந்திருக்கும் மற்ற விதைகள், கல், மண், தூசி முதலியவற்றையும் அகற்றி விடவேண்டும்.  கத்தரி விதைகளை 12 நம்பர் கம்பி வலை கொண்ட கைச் சல்லடைகள் கொண்டு சுத்திகரிப்பு செய்ய  வேண்டும். சல்லடைகள் மேல் தங்கியுள்ள விதைகளை மட்டுமே எடுத்துக் கொள்ள  வேண்டும். 
      
       
        கவனத்திற்கு  
                 விதைகளை பிரித்தெடுத்தவுடன் நேரடியாக வெய்யிலில்      உலர்த்தக்கூடாது. அவ்வாறு செய்தால் விதையில் அதிக ஈரப்பதம் இருக்கின்ற காரணத்தால்      விதை முளைப்புத்திறன் அதிகமாக பாதிக்கப்படும். அதே போல் விதைகளை உலர்த்தும் போது      விதைகளை நன்கு கிளறி விடவேண்டும். இல்லாவிடில் கீழ் உள்ள விதைகள் கட்டி சேர்த்து      ஈரம் குறையாமல், பூஞ்சாணம் தோன்றி, விதைகளில் வீரியம் குறைய வாய்ப்புண்டாகும். 
       
      விதை சுத்திகரிப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை 
        
விதை சுத்திகரிப்பு செய்யாமல்  சேமித்து வைப்பது விதையின் தரத்தை வெகுவாக பாதிக்கிறது.  சுத்திகரிப்பில் கம்பி வலை சல்லடைகளை ஒரு இரகத்திற்கு  பயன்படுத்திவிட்டு வேறு இரகத்திற்கு மாற்றும் போது நன்கு சுத்தம் செய்யாவிடில் விதைக்  கலப்பு நேர்ந்து விதைகளின் இனத்தூய்மை பாதிக்கப்படும். எனவே, விதை சுத்திகரிப்பு முறைகளில்  அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.  
      விதை சேமிப்பு 
          
  விதை உற்பத்தி செய்வதில்  எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து  வைப்பதிலும் தேவைப்படுகிறது. 
      விதையின் ஈரப்பதம் 
                 
  விதையின்  ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது.  விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன.  குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 7-8 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளில்  நிறைத்து சேமிக்கலாம். நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை 6 சத அளவிற்குக்  குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து வைக்கலாம். 
      விதை நேர்த்தி 
                 
  விதைகளை சேமிப்புக்கு முன்  பூஞ்சாணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். இதற்கு திராம் அல்லது கேப்டான்  மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வைக்க வேண்டும். இதற்குப்  பதிலாக விதைகளை குளோரினேற்றம் செய்தும் சேமிக்கலாம். குளோரினேற்றம் என்பது கால்சியம்  ஆக்ஸி குளோரைடு (அதாவது பிளீச்சிங் பவுடர்) என்ற இராசயன பொருளை கால்சியம் கார்பனேட்  என்ற பொருளுடன் சம விகிதத்தில் கலந்து காற்றுப் புகா பாட்டிலில் ஒரு வாரம் அடைத்து  வைத்திருந்து பின்னர் அந்தக் கலவையிலிருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில்  எடுத்து கலந்து பின்பு சேமித்து வைத்தலே. குளோரினேற்றம் ஒரு சுற்றுப்புற சூழல் மாசுபடாத  விதை நேர்த்தி முறையாகும். 
      விதை சேமிப்புப் பைகள் 
          
  விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை  கிரகிக்கும் தன்மை உடையவை. ஆகையால் காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள்  மற்றும் நதி தீரங்களில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகா பைகளையே உபயோகிக்க வேண்டும்.  700 அடர்வுள்ள பாலிதீன் அல்லது அலுமினிய காகித பைகளே காற்று புகாத பைகள். எப்போதும்  புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள். 
      இடைக்கால விதை நேர்த்தி 
                 
  தேவைக்கென சேமித்து வைத்திருக்கும்  குறைந்த அளவு விதைகளை 5 அல்லது 6 மாத கால சேமிப்புக்குப் பின் “ஊறவைத்து உலர வைக்கும்  முறை”  மூலம் விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு  டை - சோடியம் பாஸ்பேட் என்ற இராசயன மருந்தை 100 லிட்டர் நீருக்கு 3.6 கிராம் என்ற  விகிதத்தில் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கரைசலில் (ஒரு பங்கு விதைக்கு  இரு பங்கு கரைசல்) விதைகளை 3 மணி நேரம் ஊற வைத்து பின்பு பழைய ஈரப்பதத்திற்கு காய வைத்து  விடவேண்டும். இவ்வாறு செய்வதால் விதைகளின் சேமிப்புத்திறன் அதிகமாகிறது. 
      விதைச் சான்றளிப்பு 
                 
  பாரம்பரியத்தூய்மையில்  இருந்து சிறிதும் குறையாததும், பிற இனக் கலப்பில்லாததும், பிற பயிர்களை விதை கலப்பு  இன்றி, தூசு துப்பு இன்றி அதிக சுத்தத்தன்மை உடையதும், அதிக முளைப்புத்திறனும் வீரியமும்,  மற்றும் நோய் தாக்காத விதைகளே தரமான விதைகள்.      விவசாயிகளுக்கு  விதையின் இனத்தூய்மை பற்றியும் விதைத் தரம் பற்றியும் உத்திரவாதம் அளிப்பதே விதைச்சான்றளிப்பு  ஆகும். விதை உற்பத்திக்கு தரக்கட்டுபாட்டுக்கென்று சட்ட பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே  விதை சான்றளிப்பு ஆகும். இதை “ தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன்” என்று கூடச்  சொல்லலாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக சுத்தத்தன்மையும்,  மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதே விதைச்  சான்றளிப்பின் முக்கிய நோக்கம் ஆகும். 
          
  விதைச் சான்று பல்வேறு  நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட  நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும்  தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு,  முட்டை பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பன வரையும் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும்  விதைகளை முளைப்புச் சோதனைக்கு அனுப்பி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள்  வழங்கப்படுகின்றன. இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 
          
  ஆய்வின் போது வயல் தரம்  மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டும் உற்பத்தி  செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்குத் தயாராகின்றன.  
          
  எனவே, விதை உற்பத்திக்கான  வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய  நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.  
      சான்று விதை உற்பத்திக்கு பரிந்துரைக்கப்பட்ட வயல்  மற்றும் விதைத் தரம் 
      வயல் தரம் 
      
      (அதிக பட்சம்)  
      
        
          - விதை  நோயால் தாக்கப்பட்ட செடிகள்                     0.5  சதம்
 
         
       
      விதைத் தரம் 
      
        
          - சுத்தமான  விதைகள் (குறைந்த பட்சம்)              98 சதம்
 
          - தூசி  (அதிக பட்சம்)                              2  சதம்
 
          - பிற  இனப்பயிர் விதைகள்                         இருக்கக்கூடாது
 
         
       
      (அதிக பட்சம்)  
      
        
          - களைவிதைகள்  (அதிக பட்சம்)                           இருக்கக்கூடாது
 
          - முளைப்புத்திறன்                                  70 சதம்
 
         
       
      (குறைந்தபட்சம்) 
      
      காற்றுப்புகும் பை                                8.0 சதம் 
  காற்றுப்புகாத பை                                6.0 சதம் 
                         |