அவரை  - தரமான விதை உற்பத்தி முறைகள்  
      நிலம் தேர்ந்தெடுத்தல்  
          
  அவரை விதை உற்பத்திக்கு, தேர்வு செய்யப்பட்ட நிலம் நல்ல வடிகால் வசதியுடன் அமைந்திருக்க  வேண்டும். மேலும் தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் முந்திய பயிர் அவரையாக இல்லாதிருத்தல்  அவசியம். 
      J தான்தோன்றி பயிர்கள் என்றால் என்ன? 
                 
  வயலில் உள்ள மண்களில் கலந்துள்ள விதைகளிலிருந்து  முளைக்கும் பயிர்களே தான்தோன்றி பயிர்களாகும். இவ்விதைகள் முந்தைய கால பருவ பயிர்களில்  இருந்து கீழே விழுந்தவை ஆகும். விதைக்காமல் தானகவே முளைத்து வளரக்கூடியவை என்பதால்  இவ்வாறு அழைக்கப்படுகின்றது. 
      இனத்தூய்மையை பராமரிக்க  பயிர் விலகு தூரம் 
          
  அவரையில் தேனீ மற்றம் வண்டுகளால் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே, அவரை விதைப் பயிர் இரகங்களுக்கிடையே குறைந்தது 75 அடி தூரம் இடைவெளி அமைந்திருக்க  வேண்டும். 
      விதை பயிர் செய்ய ஏற்ற  பருவம் 
          
  அவரையில் இரண்டு வகை உண்டு. ஒன்று பந்தல் அல்லது கொடி இரகம் மற்றது குத்து  இரகம். அவரைப் பயிர் செங்கை, தர்மபுரி, கோவை, மதுரை, தேனி, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்களில் பரவலாகப் பயிர் செய்யப்படுகின்றது. 
          
  பந்தல் இரகங்களான கோ.3 கோ.4 மற்றும் கோ.5 ஆகியன ஆடிப்பட்டத்திலும், குத்து  இரகங்களான கோ.6, கோ.7, கோ.8, கோ.9, கோ.10, கோ.11 மற்றும் கோ.12 ஆகியன புரட்டாசி  மற்றும் மாசிப் பட்டங்களிலும் பயிர் செய்யப்படுகின்றன. 
          
  அவரை விதை உற்பத்திக்கு மாசிப்பட்டம் மிகவும் ஏற்றதாகும். எனினும், தங்களுடைய  இடத்தின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற பருவத்தை தேர்வு செய்ய வேண்டும். 
      நிலம் தயாரித்தல் 
          
  நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்கு உழ வேண்டும். கடைசி உழவின் போது  20 கிலோ யூரியா மற்றும் 60 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரங்களை இட்டு நிலத்தை பண்படுத்த  வேண்டும். 
      பந்தல் இரகம் 
          
  பந்தல் இரகம் பயிர் செய்வதாக இருந்தால் பார்களுக்கிடையே 10 அடி விட வேண்டும்.  பின்னர்  1 அடி அளவு ஆழம் கொண்ட குழிகளை வெட்ட  வேண்டும். குழிகளுக்கிடையே 4 அடி இடைவெளி அவசியம். 
      பந்தல் அமைப்பு 
          
  ஓரடிக் குழிகளில் ஏழு அடி கொண்ட கல் தூண்களை நட வேண்டும். தூண்களுக்கிடையே  கம்பி கொண்டு கட்டி பின்னர்  1      அடி இடைவெளிகளில் கம்பிகளால் குறுக்காக கட்டி பந்தல் அமைக்கலாம்.  தூண்களுக்கிடையில் அரையடி ஆழக் குழியில் விதைகளை விதைக்கலாம். 
      குத்து இரகம் 
                 
  குத்து இரகம் பயிர் செய்வதாக  இருந்தால் பார்களுக்கிடையே 1.5 அடி இடைவெளியும் விட வேண்டும். 
      உரமும் உரமிடுதலும் 
                 
  இது தவிர பந்தல் அவரைக்கு (கொடி  அவரை) மேலுரமாக செடி ஒன்றுக்கு 115 கிராம் அம்மோனியம் சல்ஃபேட் மற்றும் 115  கிராம் சூப்பர் பாஸ்ஃபேட் உரங்களை விதைத்த இரண்டு மாதம் கழித்து இடவேண்டும். 
      ☺ உங்கள் கவனத்திற்கு 
      எந்த ஒரு விவசாயியும் சான்று விதை உற்பத்தி செய்யலாம். அந்த பகுதியின்  வேளாண் அலுவலர் அதற்கு துணை புரிவார். சான்று விதை உற்பத்தி ஆதார விதையை கொண்டும்,  ஆதார விதை உற்பத்தி வல்லுநர் விதையை கொண்டும் உற்பத்தி செய்ய வேண்டும். 
      விதை தேர்ந்தெடுத்தலின் அவசியம் 
      விதை உற்பத்திக்கு நல்ல தரமான  விதைகளையே பயன்படுத்த வேண்டும். விதைகளுக்கு இடையே காணப்படும் சுருங்கிய,  காயமுற்ற, உடைந்த மற்றும் பூசணம் தாக்கிய விதைகளை நீக்கி நல்ல தரமான விதைகளையே  பயன்படுத்த வேண்டும். இதற்கு சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்தவேண்டும். 
      விதை அளவு 
      அவரையில், விதையளவு இரகங்களைப்  பொருத்தே அமைகிறது. 
  இரகம்                                           விதையளவு (ஏக்கருக்கு) 
  கோ.3, கோ.4, கோ.6, கோ.7, கோ.8               1.5 கிலோ 
  கோ.9, கோ.11, கோ.12                          8 கிலோ  
  கோ.10                                          10 கிலோ 
      பூசணக் கொல்லி விதை நேர்த்தி 
      அவரை விதைகளுக்கு பூசணக்கொல்லி  விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான்  அல்லது திராம் பூசணக்கொல்லி மருந்தை கலந்த விதை நேர்த்தி செய்ய வேண்டும். 
      ரைசோபிய நுண்ணுயிரியின் பயன் 
      அவரைப் பயிரின் வேர்களிலும் வேர்  முடிச்சுகள் உள்ளதால், மற்ற பயறுவகை பயிர்களுக்கு செய்தது போலவே அவரைக்கும்  நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்ய வேண்டும். வேர் முடிச்சுகளை அதிகப்படுத்த,  நுண்ணுயிரியான ரைசோபியத்தை உபயோகித்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். ஒரு  ஏக்கருக்கு தேவையான விதைகளை நேர்த்தி செய்வதற்கு இரண்டு ரைசோபிய பாக்கெட்டுகள்  தேவைப்படும். ரைசோபியம் விதைகளில் ஒட்டுவதற்கு ஒரு இணைப்புப்பொருள் தேவை. இதனை  அரிசி கஞ்சி கொண்டு தயாரிக்க வேண்டும். 500 மி.லி. நீரில் 100 கி அரிசியை  கொதிக்க வைத்து பசையாக்க வேண்டும். இரண்டு ரைசோபிய பாக்கெட்டுகளுக்கு 300 மி.லி.  அரிசி கஞ்சி தேவைப்படும். தயார் செய்த அரிசி கஞ்சியை நிலழில் 5 மணி நேரம் உலர்த்த  வேண்டும். இதனில் இரண்டு ரைசோபிய பாக்கெட்டுகளை சேர்த்து நன்கு கிளறி விடுவதால்  கருப்பு நிற பொருள் கிடைக்கும். ஒரு பக்கெட்டில் 14 கிலோ ரைசோபியம் சேர்த்த  அரிசி கஞ்சியை ஊற்றி கைகளால் (அ) குச்சியால் நன்கு கிளற வேண்டும். இக்கலவை அனைத்து  விதைகளிலும் நன்கு பரவிய பின்னர் ஒரு சாக்குப் பையின் மேல் அதனை பரப்பி நிழலில் 6  மணி நேரம் உலர வைக்க வேண்டும். இதனை தயாரித்த 24 மணி நேரத்திற்குள் உபயோகிக்க  வேண்டும்.  
      விதைப்பு  
          
  விதை நேர்த்தி செய்த விதைகளை  குழிக்கு இரண்டு விதைகளாக விதைக்க வேண்டும். பின்னர் 5 ஆம் நாள் ஒரு செடிவிட்டு  மற்றதைக் களைய வேண்டும். 
      நீர் நிர்வாகம் 
          
  விதைத்தவுடன் முளைப்பு நீரும்,  மூன்றாம் நாள் உயிர் நீரும் பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சுதல் அவசியம்.  பூப்பு காய்ப்படிப்பு மற்றும் விதை முதிரும் ஆகிய பருவங்களில் நீர் பற்றாக்குறை  ஏற்பட்டால் விதைத்தரம் கெடும். 
      இலைவழி உரம் 
          
  தரமான விதை உற்பத்திக்கு, போதிய  ஊட்டச்சத்து கொடுப்பது அவசியம். விதைகள் உண்டாகி வளரும் போதும் அவற்றிக்கு அதிக  ஊட்டச்சத்து தேவைப்படுகின்றது. இதற்கு வேர்கள் மண்ணில் இருந்து பெறப்பட்ட  சத்துக்கள் மட்டும் போதாது. இலை மூலமாகவும் அளித்திடல் வேண்டும். இவ்வாறு இலை  மூலம் நாம் ஊட்டச்சத்து அளிக்கும் போது, வளரும் விதைகளுக்கு எளிதில் ஊட்டம்  போய்ச் சேரும் அதனால் அவை விரைவில் வளர்ந்து வீரிய விதை உற்பத்திக்கு வழி  வகுக்கும். 
          
  இலைவழி உரம் அளிப்பதற்கு டி.ஏ.பி.  உரக்கரைசலை பயன்படுத்த வேண்டும். இந்த டி.ஏ.பி. உரக் கரைசலைத் தயாரிப்பது எவ்வாறு  என்பதைப் பார்ப்போம். 
      தேவையான பொருட்கள் 
      
        
          - 4 கிலோ டி.ஏ.பி. உரம்
 
          - 13  லிட்டர் நீர் 
 
          - 15  லிட்டர் பிளாஸ்டிக் வாளி
 
          - வடிகட்ட  ஒரு துணி
 
         
       
      அ. முதலில் 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை 13 லிட்டர் நீரில், தெளிப்பதற்கு  முந்திய நாள் மாலை ஊரவைக்க வேண்டும். 
  ஆ. மறுநாள் தெளித்த நீரை மட்டும் எடுத்து, துணிணின் துணை கொண்டு வடிகட்டி  விட வேண்டும். 
  இ. பின்னர் ஒரு லிட்டர் கரைசலை எடுத்து அதனுடன் 14 லிட்டர் நீரை ஊற்றி  நன்கு கலக்க வேண்டும். 
  ஈ. இவ்வாறு தயாரித்த நீர்த்த கரைசலை கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேலையில்  செடிகளின் மீது நன்குபடுமாறு தெளிக்க வேண்டும். 
  உ. ஒரு ஏக்கருக்கு தெளிக்க 200 லிட்டர் நீர்த்த கரைசல் தேவைப்படும். 
  ஊ. மாலை நேரங்களில் (நான்கு மணிக்கு மேல்) தெளித்தால் இலைகள் கருகாமல்  பார்த்துக் கொள்ளலாம். 
  எ. டி.ஏ.பி. கரைசல் தெளித்த உடன் நீர்ப் பாய்ச்சுதல் மிகவும் அவசியம். 
         கோ.1 இரகத்திற்கு விதைத்த  100 ஆம் நாளும், பின்னர் 120 ஆம் நாளும், கோ.2  
  இரகத்திற்கு விதைத்த 45 ஆம் நாளும் பின்னர் 55 ஆம் நாளும் தெளிக்க  வேண்டும். 
  பந்தல் அவரையின் பராமரிப்பு 
         
  பந்தல் அவரைக்கு பந்தல் அமைத்து செடி நன்கு படருமாறு செய்ய வேண்டும்.  பந்தல் அமைக்க கல் அல்லது மர கம்புகளை நட்டு, பின்னர் கம்பி கொண்டு இணைக்க  வேண்டும். 
      நுனி கிள்ளுதல் 
          
  கொடி பந்தலை அடைந்தவுடன் நுனியினை கிள்ளிவிட வேண்டும். இதனால் பக்க  கிளைகள் அதிகமாகத் தோன்றும்.  பக்க  கிளைகள் பந்தலில் நன்கு படர்ந்தவுடன் அவற்றின் நுனிகளையும் கிள்ளி, கொடிகளை  மேலும் நன்கு படருமாறு செய்ய வேண்டும். இதனால் பூக்கள் அதிகம் தோன்றி விதை  பிடிப்பு அதிகரிக்கும். நுனி கிள்ளுதலை செடிகள் பூக்க தொடங்கியதிலிருந்து  தொடர்ந்து ஒரு மாதம் செய்ய வேண்டும். 
      களை நிர்வாகம் 
                 
  ஆரம்பத்தில் தோன்றும் களைகளைக் கட்டுப்படுத்த களைக்கொல்லி தெளிக்கலாம்.  இதற்கு ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி பாசலின் களைக் கொல்லியை கலந்து விதைத்த  மூன்று நாட்களுக்குள் தெளிக்க வேண்டும்.  
          
  பின்னர் 25 ஆம் நாள் ஒரு கைக்களை எடுப்பதால் களைகளை நன்றாகப்  கட்டுப்படுத்தலாம். 
      பயிர் பாதுகாப்பின் அவசியம் 
          
  செடிகள் வயலில் முளைத்தவுடன் அவைகள் வண்டுகளால் துளையிடப்பட்டு காய்ந்து  விடும். இவற்றை ஏக்கருக்கு 4 கிலோ மாலத்தியான் (10 சதம்) மருந்தை தூவி  கட்டுப்படுத்தலாம். 
          
  பூவண்டுகள் தோன்றினால் அவற்றை பிடித்து அழித்துவிட வேண்டும். காய்  துளைப்பானைக் கட்டுப்படுத்த எண்டோசல்பான் மருந்தை லிட்டருக்கு 4 மில்லி என்ற  அளவில் கலந்து தெளித்தோ அல்லது ரோகர் மருந்தை லிட்டருக்கு 2 மில்லி என்ற அளவிலோ  கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். 
          
  அவரை விதையிலும் பயறு வண்டுகள் தோன்றும், விதைகள் முதிர்ச்சியடைய  தொடங்கியவுடன் பயறு வண்டின் தாக்குதல் வயலிலேயே தொடங்கியவுடன் பயறு வண்டின்  தரக்குதல் வயலிலேயே தொடங்கிவிடும். எனவே அதனை கட்டப்படுத்த அறுவடைக்கு 10 நாள்  முன்னர் ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி எண்டோ சல்பான் மருந்து கலந்து காய்களின்  மேல் தெளிக்க வேண்டும். இதனால் வயலிலிருந்து சேமிப்பிற்கு பயறு வண்டுகள் எடுத்து  செல்வது தடுக்கப்படுகின்றது. 
      நோய் பாதுகாப்பு  
          
  ஆன்த்ரக்னோஸ் இலைப்புள்ளி நோய் தாக்கிய செடிகளுக்கு ஒரு லிட்டர் நீரில் 1  கிராம் பெவிஸ்டின் அல்லது 4 கிராம் மான்கோசெப் பூசணக் கொல்லிகளில் ஏதாவது  ஒன்றைக் கலந்து தெளித்து நோயைக் கட்டப்படுத்தலாம். 
      கலவன்கள் அகற்றுதல்  
          
  கலவன்களை பூக்கும் வயது, பூக்கள் மற்றும் காய்களின் தன்மை கொண்ட  கண்டறிந்து களைய வேண்டும் (அட்டவணை). இது தவிர ஆன்திரக்னோஸ் நோய், தேமல், வாடல்  மற்றம் வேரழுகல் நோய் தாக்கிய செடிகளையும் நீக்க வேண்டும். 
      அறுவடை  
  காய்களின் பச்சை நிறம் மாறி பழுப்பு நிறமடைந்தவுடன் காய்களை அறுவடை  செய்யவேண்டும்.  அப்பொழுது விதைகளும்  பச்சை நிறத்திலிருந்து கருப்பு நிறத்தை அடைந்திருக்கும்.  
          
  ஒரு பூக்கொத்து காம்பில் காணப்படும் முதல் ஐந்து காய்ந்த காய்களை மட்டுமே  விதை எடுக்க பயன்படுத்த வேண்டும். பின்னர் தோன்றும் காய்களில் உள்ள விதைகள்  சிறுத்து வீரியம் குறைந்து இருக்கும். எனவே, அவைகளை விதைக்கு விடாமல்,  காய்கறிக்காக பயன்படுத்தலாம். அறுவடை செய்த காய்களில் காணப்படும் நோய் தாக்கிய  மற்றும் நிறம் மாறிய காய்களை நீக்கிவிடவேண்டும். 
      விதை உருவாக்கம் 
          
  தேர்ந்தெடுத்த காய்களை நிழலில் உலர்த்தி ஒரு குச்சி கொண்டு  அடித்து விதைகளைப் பிரிக்க வேண்டும் (வரைபடம்  3). பிரித்த விதைகளை நிழலில் ஒன்பது சதம் ஈரப்பதம் வரும்வரை காய வைத்து பின்னர்  18/64 அங்குல வட்டக்கண் சல்லடை கொண்டு பிரித்தெடுக்க வேண்டும். உடைந்த,  சுருங்கிய, பூசணம் படிந்த விதைகளை நீக்கிவிட வேண்டும். 
      விதைச் சேமிப்பு  
          
  விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை  அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது. 
      விதையின் ஈரப்பதம் 
          
  விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது. விதையின்  ஈரப்பதம் அதிமகாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த  கால சேமிப்புக்கு விதைகளை 9 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளிலோ அல்லது  சாக்குப் பைகளிலோ நிறைத்து சேமியுங்கள். நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின்  ஈரப்பதத்தை 8 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து  வையுங்கள். 
      ☺செம்மண் விதை உருளைகள் 
      செம்மண்ணை கொண்டு விதை  உருளைகளை உருவாக்கலாம். நன்கு பொடிக்கப்பட்ட செம்மண்ணை நீர் சேர்த்து கலவை போலாக்கி  விதைகளை இதனை கொண்டு உருட்ட வேண்டும். சுற்றுப்புற தோழமை வாய்ந்த விதை நேர்த்தி முறையாகும்.  விதைகளை 3-4 மாதங்களுக்கு ஒரு முறை 8 சதம் ஈரப்பதம் வரையில் உலர்த்த வேண்டும். 
      விதை நேர்த்தி 
          
  விதைகளை சேமிப்புக்கு முன் பூசணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி  செய்யுங்கள். இதற்கு திராம் அல்லது கேப்டான் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம்  என்ற விகிதத்தில் கலந்து வையுங்கள். 
      விதைச் சேமிப்புப் பைகள் 
                 
  விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை. ஆகையால் காற்றின்  ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி கரைகளில் விதைகளை சேமித்திட  ஈரக்கரற்று புகா பைகளையே உபயோகிக்க வேண்டும். 700 அடர்வுள்ள பாலிதீன் பைகளே  காற்று புகாத பைகள். எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள். 
          
  விதைகளை, கிடங்குகளில் சேமித்து வைக்கும்பொழுது முன்னெச்சரிக்கையாக  இருங்கள். சாக்குப் பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கும்பொழுது 6 அல்லது 7  வரிசைக்கு மேல் அடுக்க வேண்டாம். ஏனென்றால், மேலே உள்ள முட்டைகளின் பாரம்  அடியிலுள்ள முட்டைகளைப் போட்டு அழுத்துவதால் அடி முட்டையில் உள்ள விதைகளின்  முளைப்புத் திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளது. 
          
  விதை முட்டைகளை வெறும் தரையின் மீது அடுக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.  அதேபோல் சுவற்றின் மீது சாய்த்து அடுக்குத்லையும் தவிர்க்க வேண்டும். இதனால் தரை  மற்றும் சுவற்றில் உள்ள ஈரப்பதம் விதைகளில் ஊடுருவி அவற்றைப் பாதிப்பதைத்  தடுக்கலாம். எப்பொழுதும் விதை முட்டைகளை மரக்கட்டைகளின் மீது அல்லது  தார்பாய்களின் மீது அடுக்கி வையுங்கள் (வரைபடம் 4).       
      விதைச் சேமிப்புக் கிடங்கு பராமரிப்பு  
                 
சேமிப்புக் கிடங்கை பூச்சிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.  விதை சேமிப்புக் காலத்தில் விதைகளை பூச்சிகள் தாக்கினால் புகை மூட்டம் போடலாம்.  காற்றுப் புகாமல் விதைக் கிடங்கை நன்கு அடைத்து விட்டு, செல்பாஸ் (அலுமினியம்  பாஸ்பைடு) நச்சு மாத்திரைகளை ஒரு கன மீட்டருக்கு ஒரு மாத்திரை என்ற அளவில் விதை  கிடங்கினுள்ளே 3 நாட்கள் வைத்து விடுங்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர்  நச்சுக்காற்றை வெளியேற்ற நல்ல காற்றோட்டம் இருக்கும்படி விதைக்கிடங்கை திறந்து  வையுங்கள். இவ்வாறு செய்வதால் விதைகள் பூச்சி தாக்குதலிலிருந்து  பாதுகாக்கப்படுகின்றன. 
      விதைச் சேமிப்பு  
          
  விதைகளை நன்கு சேமிக்க, அவற்றை 7 - 8 சத ஈரப்பதம் வரை காய வைத்து பின்னர்  கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் பூசணக் கொல்லி மருந்துடன் விதைநேர்த்தி செய்து  சேமிக்க வேண்டும். 
      பயறுவிதை மற்றும் தானிய சேமிப்பு 
          
  விவசாயிகள் பயறு விதைகளை தானியத்திற்காகவும், விதைக்காகவும் சேமிப்பதுண்டு.  அவ்வாறு செய்யும் போது, விதைகளுக்கு பூசணக்கொல்லி மருந்து கலந்து கொண்டு  சேமித்தால் அவற்றை தானியத்திற்காக பயன்படுத்த முடியாது. மருந்து கலந்து  சேமிக்காவிடில் விதைகள் பயறு வண்டுகளினால் பாதிப்புக்குள்ளாகும். எனவே விதைகளை  தானியத்திற்காகவும், விதைக்காகவும் சேமிக்க வேண்டும் என்றால் அவற்றை  ஊக்குவிக்கப்பட்ட களிமண் கொண்டு விதைநேர்த்தி செய்வது நல்லது. 
          
  நூறு கிலோ விதையுடன் ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்ற அளவில்  கலந்து சேமிக்கலாம். இதனால் பயறு வண்டு சேதாரம் இருக்காது. விதைகளை விதைக்கும்  போது ஒரு கிலோ விதையுடன் இரண்டு கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு  விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். விதைகள் விதைப்புக்குத் தேவைப்படாத போது  ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணை நன்கு கழுவி சுத்தம் செய்து தானியமாகப் பயன்படுத்தலாம். 
      ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்றால் என்ன? 
          
  ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்பது சாதரணமான வெள்ளை களிமண் ஆகும். இது  ஈரப்பதம் நீக்கப்பட்டு, அமிலத்தினால் கழுவப்பட்டது என்பதால் பூச்சிகளின்  மேல்புரத்தை தாக்கி அழிக்கும். இது மிகவும் குறைந்த விலை கொண்டது மற்றும்  மனிதர்களுக்கு தீங்கற்றது. ஒரு கிலோ விதைக்கு நூறு கிராம் ஊக்குவிக்கப்பட்ட  களிமண் என்ற அளவில் நேர்த்தி செய்யவேண்டும். இவை சுற்றுப்புறத்திற்கு தீங்கு  விளைவிக்காத மற்றும் விவசாயிகள் எளிதில் உபயோகிக்கும் முறைகளாகும். சுற்றுப்புறத்  தோழமை வாய்ந்த தாவரங்களான வேப்பம், புங்கம் மற்றும் அரப்பு ஆகியவற்றை கொண்டும்  ஒரு கிலோ விதைக்கு 100 மி.லி. என்ற அளவில் நேர்த்தி செய்யலாம். இவை பூச்சி  விரட்டியாகவும், சேமிப்பின் பொழுது ஏற்படும் தாக்குதலை தடுக்க வல்லதாகவும்  இருக்கும். மஞ்சள் பொடியும் உபயோகிக்கலாம். 
  விதைச் சான்றளிப்பு 
         
  தரமான விதைகள் என்பது தன்னுடைய இனத்தூய்மையில் சிறிதும் குன்றாமலும்,  களைவிதை, பிற இரக விதை, நோய் தாக்கிய விதை ஆகியவை இல்லாமலும் இருக்கும். மேலும்  தரமான விதை அதிக வீரியத்துடனும், முளைப்புத் தன்மையும் கொண்டிருக்கும். இதனால்  விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது வயல்களில் அதிக இடைவெளி இல்லாமல்  சரியான செடிகளின் எண்ணிக்கை பராமரிக்க முடியும். அதிக வீரியத்துடன் வளர்வதால்  நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்டிருக்கும். எனவே, விவசாயிகள் தரமான  விதைகனை பயன்படுத்தும் போது முட்டுவழி செலவுகளை குறைக்க முடியும். 
          
  விதை உற்பத்தி தரக்கட்டபாட்டுக்கென்று சட்டபூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே  விதைச் சான்றிப்பாகும். இதை “தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன்” என்ற கூட  சொல்லலாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக  சுத்தத்தன்மையும், மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்குத்  கிடைக்கச் செய்வதே விதைச்  சான்றளிப்பின்  முக்கிய நோக்கமாகும். 
          
  விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு  உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளதா  என்பது முதல், விதைப்பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப்  பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, முட்டை பிடித்தல்  முதலியவை சரியாக உள்ளனவா என்பது வரை ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் விதைகளை  முளைப்புச் சோதனைக்கு உட்படுத்தி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள்  வழங்கப்படுகின்றன. இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு  மேற்கொள்ளப்படுகிறது. 
          
  ஆய்வின் போது வயல் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம்  இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை  விற்பனைக்குத் தயாராகின்றன. 
          
  எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம்  இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.  
      சான்றுவிதை உற்பத்தி செய்யும்போது உற்பத்தி செய்த  விதைகளின் கீழ்க்கண்ட விதைத்தரம் இருத்தல் அவசியம்  
      வயல் தரம் 
      கலவன்கள் (அதிக பட்சம்)                                            0.2  சதம் 
          விதைத்தரம் 
      சுத்தமான விதைகள் (குறைந்த பட்சம்)                                   98  சதம் 
  தூசி (அதிக பட்சம்)                                                   2  சதம் 
  பிற இனப்பயிர் விதைகள் (அதிக பட்சம்)                               1  சதம் 
  களை விதைகள் (அதிக பட்சம்)                                        1  சதம் 
  முளைப்புத்திறன் (குறைந்த பட்சம்)                                      75  சதம் 
  ஈரத்தன்மை (அதிக பட்சம்)    
  காற்றுப்புகாத பை                                                     7.0  சதம் 
  காற்றுப்புகும் பை                                                     9.0  சதம் 
      கலவன் அகற்றும்  பொழுது கருத்தில் கொள்ள வேண்டிய சில படரும் இரகங்களின் குணாதிசயங்கள் 
          (கீ்ழ்கண்ட  குணங்களில் மாற்றம் கொண்ட செடிகளை அகற்றவேண்டும்)      
      
        
            
              குணாதிசயங்கள்  | 
              கோ.3  | 
              கோ.4  | 
              கோ.5  | 
             
            
              பெற்றோர்   | 
              கோவையில்  
                பயிரிடப்படும் இரகத்திலிருந்து தேர்வு  | 
              கோவையில் பயிரிடப்படும் இரகத்திலிருந்து தேர்வு  | 
              கஞ்ம் என்னும் இடத்திலிருந்து பெறப்பட்ட இரகம்  | 
             
            
              வயது (நாள்)   | 
              240  | 
              240  | 
              240  | 
             
            
              பூப்பு (ஆரம்ப நாள்)  | 
              120   | 
              120   | 
              120  | 
             
            
              செடி வகை   | 
              கொடி  | 
              கொடி  | 
              கொடி  | 
             
            
              செடியின் உயரம் 
                (செ.மீ)  | 
              -------  | 
              -------  | 
              -------  | 
             
            
              பூவின் நிறம்   | 
              ஊதா   | 
              ஊதா   | 
              வெள்ளை  | 
             
            
              பயிரின் நிறம்  | 
              பச்சைக்காய் ஊதா விளிம்பு   | 
              ஊதா  | 
              இளம்பச்சை   | 
             
            
              காயின் அமைப்பு   | 
              அகலமான தட்டையான காய்  | 
              தட்டை   | 
              உருண்டையான வளைந்த காய்கள்  | 
             
            
              விதை நிறம்   | 
              கறுப்பு   | 
              கறுப்பு  | 
              சாக்லைட் நிறம்  | 
             
            
              நூறு விதைகளின் எடை(கிராம்)  | 
              ------  | 
              ------  | 
              ------  | 
             
            
              விதை மகசூல்  
                (கிலோ/ஏ)  | 
              500  | 
              600  | 
              600  | 
             
               
       
      கலவன் அகற்றும்  பொழுது கருத்தில் கொள்ள வேண்டிய சில குத்து இரகங்களின் குணாதிசயங்கள் 
          (கீ்ழ்கண்ட  குணங்களில் மாற்றம் கொண்ட செடிகளை அகற்றவேண்டும்)       
      
        
            
               
                  குணாதிசயங்கள்  | 
              கோ.6  | 
              கோ.7  | 
              கோ.8  | 
              கோ.9  | 
             
            
              பெற்றோர்   | 
              டி.எல்.3176 X கோ.5  | 
              டி.எல்.3196 X கோ.5  | 
              கோ.5 X டி.எல்.3196   | 
              எம்.எஸ்.986778 இரகத்திலிருந்து சடுதி மாற்றம் மூலம் பெறப்பட்ட இரகம்  | 
             
            
              வயது (நாள்)   | 
              120   | 
              120   | 
              120  | 
              120   | 
             
            
              பூப்பு (ஆரம்ப நாள்)  | 
              45  | 
              45   | 
              45   | 
              45  | 
             
            
              செடி வகை   | 
              குத்து  | 
              குத்து  | 
              குத்து  | 
              குத்து  | 
             
            
              செடியின் உயரம் 
                (செ.மீ)  | 
              70 - 90  | 
              70 - 90  | 
              70 - 90  | 
              70 - 80  | 
             
            
              பூவின் நிறம்   | 
              இளம் ஊதா   | 
              வெள்ளை  | 
              வெள்ளை  | 
              வெள்ளை    | 
             
            
              பயிரின் நிறம்  | 
              பச்சை   | 
              வெளிர் பச்சை   | 
              வெளிர் பச்சை  | 
              வெளிர் பச்சை   | 
             
            
              காயின் அமைப்பு   | 
              உருண்டையான வளைந்த காய்கள்  | 
              உருண்டையான வளைந்த காய்கள்  | 
              உருண்டையான வளைந்த காய்கள்  | 
              தட்டை  | 
             
            
              விதை நிறம்   | 
              கறுப்பு   | 
              சாக்லைட் நிறம்  | 
              சாக்லைட் நிறம்  | 
              சாக்லைட் நிறம்  | 
             
            
              நூறு விதைகளின் எடை(கிராம்)  | 
              24.5  | 
              25.9  | 
              24.4  | 
              32.5  | 
             
            
              விதை மகசூல்  
                (கிலோ/ஏ)  | 
              400  | 
              500  | 
              500  | 
              400  | 
             
               
       
      கலவன் அகற்றும்  பொழுது கருத்தில் கொள்ள வேண்டிய சில குத்து இரகங்களின் குணாதிசயங்கள் 
          (கீ்ழ்கண்ட குணங்களில்  மாற்றம் கொண்ட செடிகளை அகற்றவேண்டும்)      
      
        
            
              | குணாதிசயங்கள்  | 
              கோ.10  | 
              கோ.11  | 
              கோ.12  | 
             
            
              பெற்றோர்   | 
              கோ.6 இரகத்திலிருந்து சடுதி மாற்றம் மூலம் பெறப்பட்ட இரகம்   | 
              கோ.9 (யானைக்காது)  | 
              கோ.9 X கோ.4  | 
             
            
              வயது (நாள்)   | 
              120   | 
              95/100  | 
              100/110  | 
             
            
              பூப்பு    (ஆரம்ப நாள்)  | 
              45   | 
              40  | 
              40   | 
             
            
              செடி வகை   | 
              குத்து  | 
              குத்து  | 
              குத்து  | 
             
            
              செடியின் உயரம் 
                (செ.மீ)  | 
              60 - 70  | 
              60 - 70  | 
              60 - 70  | 
             
            
              பூவின் நிறம்   | 
              ஊதா  | 
              ஊதா  | 
              ஊதா  | 
             
            
              பயிரின் நிறம்  | 
              வெளிர் பச்சை   | 
              பச்சை   | 
              ஊதா  | 
             
            
              காயின் அமைப்பு   | 
              உருண்டையான வளைந்த காய்கள்  | 
              அகலமான தட்டை 
                காய்கள்  | 
              உருண்டையான வளைந்த காய்கள்  | 
             
            
              விதை நிறம்   | 
              சாக்லைட் நிறம்  | 
              ஊதா  | 
              கருப்பு  | 
             
            
              நூறு விதைகளின் எடை(கிராம்)  | 
              22.5  | 
              35.9  | 
              38.4  | 
             
            
              விதை மகசூல்  
                (கிலோ/ஏ)  | 
              550  | 
              550  | 
              550  | 
             
               
                      |