கொள்ளு - தரமான  விதை உற்பத்தி முறைகள்  
      நிலம்  தேர்ந்தெடுத்தல் 
          
  கொள்ளு விதைப்  பயிருக்காக தேர்ந்தெடுத்த நிலத்தில் அதற்கு முந்திய பயிர் சான்று பெறாத அதே  கொள்ளு இரகமோ அல்லது வேறு இரகமோ இருக்கக்கூடாது. ஏனெனில், நிலத்தில் தங்கியுள்ள  விதைகள் இப்பருவத்தின்போது முளைத்து கலவன்களாகத் தோன்றும் வாய்ப்பு உள்ளது.  இதனால் விதைச்சான்று பெற இயலாது. மேலும் வாடல் மற்றும் வேர் அழுகல் நோய் தோன்றாத  நிலமாயிருத்தல் அவசியம். நல்ல வடிகாலுள்ள செம்மண் மற்றும் வண்டல் மண் திரட்சியான  விதைகளைத் தரும். 
      இனத்  தூய்மையை பராமரிக்க பயிர் விலகு தூரம் 
          
  இனக் கலப்பைத் தடுக்க  கொள்ளு பயிரை, சான்று பெறாத அதே இரகமோ அல்லது வேறு இரகத்திடமிருந்தோ விலக்கி  வைத்திருக்க வேண்டும். இதற்கு குறைந்தது 25 மீ. (75 அடி) இடைவெளி விதைப்  பயிருக்கும் மற்ற கொள்ளு பயிருக்கும் இடையே இருத்தல் அவசியம். 
      ☺ விவசாயிகள் அடிக்கடி விதைப் பயிரினை விலக்கி  வைக்க இயலவில்லை என கூறுகின்றனர். அச்சமயங்களில் ஐந்து வரிசை மக்காச்சோள பயிரினை விதைப்பயிரினை  சுற்றி வளர்த்தல் பிற பயிரின் கலப்பினை தடுக்கும்.   
      விதைப்  பயிர் செய்ய ஏற்ற பருவம் 
                 
  விதைகள் முதிரும் போது  அதிக மழையோ, வெயிலோ குளிரோ இல்லாத பருவமாக அமைந்திருத்தல் அவசியம். கொள்ளு  பயிர் பனிக்காலத்தில்தான் நன்கு பூத்து காய்பிடிக்கும். எனவே இதனை பயிர் செய்ய  ஐப்பசி பட்டமே சிறந்தது. 
      நிலம்  தயாரித்தல் 
          
  நிலத்தை மழை பெய்தவுடன்  மூன்று, அல்லது நான்கு முறை நன்கு உழவேண்டும். 
      உரமும்  உரமிடுதலும் 
          
  ஒரு ஏக்கருக்கு பத்து  வண்டி மக்கிய தொழு உரம் இட வேண்டும். பின்னர் ஒரு ஏக்கருக்கு யூரியா 20  கிலோவும், சூப்பர் பாஸ்பேட் 60 கிலோவும் அடியுரமாக பார்களின் பக்கவாட்டில்  இடவேண்டும். 
      விதை  தேர்ந்தெடுத்தலின் அவசியம் 
          
  விதைப் பயிர்  உற்பத்திக்கு சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், சான்று  விதைகள் இரகத்தின் மரபுத் தன்மைகளுடன் அதிக முளைப்புத் திறனும், வீரியத்தன்மையும்  கொண்டிருப்பதால் அவைகள் விரைவாக முளைத்து வீரியமுள்ள நாற்றுக்களை கொடுக்கும்.  இதனால் பயிர் எண்ணிக்கை அதிகரித்து, அதிக மகசூலுக்கு வழிவகுக்கும். 
      ☺ உங்கள் கவனத்திற்கு 
      எந்த ஒரு விவசாயியும் சான்று விதை உற்பத்தி செய்யலாம். அந்த பகுதியின்  வேளாண் அலுவலர் அதற்கு துணை புரிவார். சான்று விதை உற்பத்தி ஆதார விதையை கொண்டும்,  ஆதார விதை உற்பத்தி வல்லுநர் விதையை கொண்டும் உற்பத்தி செய்ய வேண்டும். 
      விதை  அளவு 
          
  இரகத்திற்கு ஏற்றவாறு  விதை அளவு நான்கிலிருந்து எட்டு கிலோ வரை தேவைப்படும்.  
      விதை  நேர்த்தி 
      விதைப்பதற்கு முன்னர்,  விதைகளிடையே காணப்படும் உடைந்த மற்றும் கருப்பு, சிகப்பு நிறம் கொண்ட விதைகளை  நீக்கிவிட்டு நல்ல தரமான விதைகளையே விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். 
      கடின  விதைகள் என்றால் என்ன? 
      பயறு விதைகளில் பொதுவாக  கடின விதைள் இருக்கும். இவ்விதைகளை நீரில் நனைக்கும் பொழுது ஈரத்தை உறியாமல்  இருக்கும். ஆதலால் வயலில் நடும் பொழுது முளைக்காமல் அவை இடைவெளியை ஏற்படுத்தும்.  சான்றழிப்பிற்கு வயலில் இடைவெளி இருத்தல் கூடாது. ஆதலால் விதைப்பிற்கு 10  சதத்திற்கும் அதிகமாக கடின விதைகளை உபயோகித்தல் கூடாது. 
      கடின விதைகளை  கண்டறிவது எப்படி? 
      100 விதைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து  அதனில் 100 மி.லி. நீர் நிரப்ப வேண்டும். 2 மணி நேரம் கழிந்த பின்னர் நீரினை  உறிந்து விதைகள் பெரியதாகி விடும். அப்படி இல்லாத விதைகளை அகற்றி விட வேண்டும். 
      பூசணக்  கொல்லி விதை நேர்த்தி 
          
  விதைகளை நோய்த்  தாக்குதலிலிருந்து பாதுகாப்பதன் மூலம் கட்டாயமாக முளைப்புத்திறன் ஒரே சீராக  இருக்கும். எனவே விதைக்கும் முன் விதை நேர்த்தி செய்வது அவசியம். 
          
  முளைக்கும் போது  மண்ணில் காணப்படும் பூசணத்தின் தாக்குதலினால் விதை அழுகல் ஏற்பட்டு அவற்றின்  முளைப்பு பாதிக்கப்படும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற  விகிதத்தில் காப்டான் அல்லது திரம் என்ற பூசணக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை  பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும். 
      ரைசோபிய  நுண்ணுயிரினை பயன்படுத்துவது எப்படி? 
                 
  சோயா மற்றும் பிற பயறு வகைப் பயிர்களின் வேர்களில் வேர்  முடிச்சுகள் காணப்படும். இந்த வேர் முடிச்சுகளில் ரைசசோபியம் என்ற நுண்ணுயிர்  இருக்கின்றன. ஒரு செடியின் வேரில் மண்ணில் உள்ள பாக்டீரியாவை பொருத்து 50 முதல்  100 வேர்முடிச்சுகள் வரையில் காணப்படும். இவை காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து  பயறுவகைச் செடிகளுக்கு அளிக்கின்றன. இதனால் செடிகள் நன்கு வளர்ந்து அதிக மகசூல்  கொடுக்கின்றன. இதற்கு பதிலாக செடிகள் அவற்றிற்கு உணவளித்து பாதுகாப்பளிக்கின்றன.  இது கூட்டுறவு வாழ்க்கை என அழைக்கப்படுகின்றது. சோயாமொச்சை பயிருக்கு ரைசோபிய நுண்ணுயிரை  உபயோகித்தால் ஒரு ஏக்கருக்கு 210 கிலோ தழைச்சத்தை  கிரகிக்க முடியும். 
          
  மண்ணில் போதுமான அளவு ரைசோபிய நுண்ணுயிரி இல்லாத காரணத்தால் விதைப்பிற்கு முன்னர்  ரைசோபிய நுண்ணுயிரியை சேர்ப்பது அவசியமாகும். ரைசோபியத்தை சேர்க்கும் முறை  உட்புகுத்துதல் என்றழைக்கப்படுகின்றது. மக்கிய  மண்ணில் சேர்க்கப்பட்ட நுண்ணுயிர் கலவையே 250 கிராம் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.  பண்ணயைில் உள்ள பெண்களே ரைசோபிய நுண்ணுயிரியை மண்ணில் உட்புகுத்துதலாம்.  
      ரைசோபிய  பாக்கெட்டுகளில் உள்ளதை கொண்டு விதை நேர்த்தி செய்வது எப்படி? 
      ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை நேர்த்தி செய்வதற்கு இரண்டு  ரைசோபிய பாக்கெட்டுகள் தேவைப்படும். ரைசோபியம் விதைகளில் ஒட்டுவதற்கு ஒரு  இணைப்புப்பொருள் தேவை. இதனை அரிசி கஞ்சி கொண்டு தயாரிக்க வேண்டும். 500 மி.லி.  நீரில் 100 கி அரிசியை கொதிக்க வைத்து பசையாக்க வேண்டும். இரண்டு ரைசோபிய  பாக்கெட்டுகளுக்கு 300 மி.லி. அரிசி கஞ்சி தேவைப்படும். தயார் செய்த அரிசி கஞ்சியை  நிலழில் 5 மணி நேரம் உலர்த்த வேண்டும். இதனில் இரண்டு ரைசோபிய பாக்கெட்டுகளை சேர்த்து  நன்கு கிளறி விடுவதால் கருப்பு நிற பொருள் கிடைக்கும். ஒரு பக்கெட்டில் 16 கிலோ  ரைசோபியம் சேர்த்த அரிசி கஞ்சியை ஊற்றி கைகளால் (அ) குச்சியால் நன்கு கிளற  வேண்டும். இக்கலவை அனைத்து விதைகளிலும் நன்கு பரவிய பின்னர் ஒரு சாக்குப் பையின்  மேல் அதனை பரப்பி நிழலில் 6 மணி நேரம் உலர வைக்க வேண்டும். இதனை தயாரித்த 24 மணி  நேரத்திற்குள் உபயோகிக்க வேண்டும். 
      ☻எச்சரிக்கை 
      
        
          
            - எப்பொழுதும் புதிதாக        தயார் செய்த பாக்கெட்டுகளையே வாங்க வேண்டும்
 
            - பூசணக்கொல்லி விதை நேர்த்தி செய்திருந்தால்,        பூசணக்கொல்லி மருந்து கலந்து 24 மணி நேரம் கழித்து ரைசோபிய விதை நேர்த்தி செய்ய        வேண்டும்.
 
            - ரைசோபிய        பாக்கெட்டுகள் காய்ந்திருந்தால் உபயோகிக்க கூடாது. 
 
           
         
       
        
      விதைப்பு 
      விதை நேர்த்தி செய்த  விதைகளை வரிசைக்கு 3 செ.மீ. இடைவெளியிலும் செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளியும்  விட்டு, 2 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும்.  
      நீர்  நிர்வாகம் 
          
  விதைப்பயிருக்கு தகுந்த  பருவத்தில் தேவையான நீர் பாய்ச்சுதல் அவசியம். கொள்ளுப் பயிர் வறட்சியை தாங்கி நன்கு  வளரும் தன்மையுடையதால் நீர் நிர்வாகம் தேவையில்லை. எனினும் பூ மற்றும் காய் பிடிப்பின்  போது மண்ணில் ஈரமில்லாமல் வறட்சி காணப்பட்டால் நீர் பாய்ச்சுவது நல்லது. இதனால் செடிகளில்  பூக்கள் மற்றும் காய்பிடிப்பு அதிகரிக்கும். 
      இலைவழி உரம் 
          
  தரமான விதை உற்பத்திக்கு,  போதிய ஊட்டச்சத்து கொடுப்பது அவசியம். சிறுவர்களுக்கு வளரும் போது எவ்வாறு ஊட்டம்  அவசியமோ, அதே போன்று விதைகள் உண்டாகி வளரும் போதும் அவற்றிற்கு அதிக ஊட்டச் சத்து  தேவைப்படுகின்றது. இதற்கு அவைகளுக்கு மண்ணில் இருந்து பெறப்பட்ட சத்துக்கள் மட்டும்  போதாது. இலைமூலமாகவும் அளித்திடல் வேண்டும். இவ்வாறு இலை மூலம் நாம் ஊட்டச்சத்து அளிக்கும்  போது, வளரும் விதைகளுக்கு எளிதில் ஊட்டம் போய்ச் சேரும் அதனால் அவை விரைவில் வளர்ந்து  வீரிய விதை உற்பத்திக்கு வழி வகுக்கும். 
          
  இலைவழி உரம் அளிப்பதற்கு  டி.ஏ.பி. உரக் கரைசலை பயன்படுத்த வேண்டும். இந்த டி.ஏ.பி உரக் கரைசலைத் தயாரிப்பது  எவ்வாறு என்பதைப் பார்ப்போம். 
      தேவையான பொருட்கள் 
      
        
          - 4 கிலோ டி.ஏ.பி. உரம்
 
          - 13  லிட்டர் நீர்
 
          - 15  லிட்டர் பிளாஸ்டிக் வாளி 
 
          - வடிகட்ட  ஒரு துணி
 
          -  
 
         
       
      அ. முதலில் 4 கிலோ டி.ஏ.பி.உரத்தை, 13லிட்டர் நீரில், தெளிப்பதற்கு  முந்திய நாள் மாலை     
      ஊறவைக்க வேண்டும். 
  ஆ. மறுநாள் தெளிந்த நீரை மட்டும் எடுத்து, துணியின் துணை கெரண்டு வடிகட்டிவிட  வேண்டும். 
  இ.  பின்னர் ஒரு லிட்டர் கரைசலை  எடுத்து அதனுடன் 14 லிட்டர் நீரை ஊற்றி கலக்க வேண்டும். 
  ஈ.  இவ்வாறு தயாரித்த நீர்த்த  கரைசலை கைத் தெளிப்பான் கொண்டு மாலை வேலையில் செடிகளின்  
      மீது நன்கு படுமாறு தெளிக்க  வேண்டும். 
  உ. ஒரு ஏக்கருக்கு தெளிக்க 200 லிட்டர் நீர்த்த கரைசல் தேவைப்படும். 
  ஊ. மாலை நேரங்களில் (நான்கு மணிக்கு மேல்) தெளித்தால் இலைகள் கருகாமல்  
     பார்த்துக்கொள்ளலாம். 
  எ. டி.ஏ.பி. கரைசல் தெளித்தவுடன் நீர்ப் பாய்ச்சுதல் மிகவும் அவசியம். 
       
                             ஐம்பது      சத பூப்பு பருவம் என்றால் என்ன?                             
                                            விதைப் பண்ணையில் உள்ள செடிகளில்      பாதிக்கும் மேற்பட்ட செடிகள்                   பூக்கும் நிலை அடைவதை ஐம்பது சத      பூப்பு பருவம் என்று கூறுகிறோம்.  
       
               
  இக்கரைசலை பயிரின் 50 சத பூப்பு பருவத்தில் ஒரு முறையும் பின்னர் 15  நாட்கள் கழித்து ஒரு முறையும் அடிக்க வேண்டும். 
    
  
        
       
        
  
  
 
  
 
இலை வழி நுண்ணூட்ட உரம் தெளித்தல் 
           
  கொள்ளு செடிகளின் நுனி இலைகள் வெளிரிக் காணப்பட்டால், மாங்கனீசு நுண்ணூட்டச்  சத்து தெளிக்கவேண்டும். இதற்கு மாங்கனீசியம் குளோரைடு என்ற உப்பை ஒரு லிட்டர் நீரில்  6 கிராம் என்ற அளவில் கரைத்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 600 கிராம் உப்பு தேவைப்படும். 
களை நிர்வாகம் 
          
  கொள்ளு விதைப்பயிரில் களைகளை நீக்குவதால் செடிகள் வேகமாக வளர்ந்து விளைச்சலுக்கு  உதவும். விதைத்த முதல் பத்து நாட்களுக்குள் ஒரு களையும் பின்னர் 15 நாட்கள் கழித்து  இரண்டாவது களையும் எடுப்பது அவசியம். மேலும் விதைத்தவுடன் ஒரு லிட்டர் நீரில் 1 மில்லி  பாசலின் களை கொல்லியை கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம். 
பயிர் பாதுகாப்பின் அவசியம் 
          
  பயறுவகைப் பயிர்கள் பூச்சி மற்றும் பூசணத் தாக்குதலினால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றன.  அவற்றை இப்போது பார்ப்போம். கொள்ளுப் பயிரில் அதிகமாக பூச்சியோ, நோயோ காணப்படுவதில்லை.  என்றாலும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அவ்வப்போது தோன்றுவதுண்டு. அவ்வாறு தோன்றினால்  ஒரு லிட்டர் நீரில் இரண்டு மில்லி நூவான் அல்லது மொனோகுரோட்டோபாஸ் தெளித்து பூச்சியினை  கட்டுப்படுத்த வேண்டும். 
  
மலட்டுத் தேமல் நோய்: நோய் கண்ட செடிகள்  வளர்ச்சி குன்றி, இலைகள் இளம் பச்சை நிறம் கொண்டிருக்கும்.  இச்செடிகள் பூக்காது. இந்நோயை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அழித்துவிட  வேண்டும். 
வேரழுகல் நோய்: வேர்களில் பூசணம் படர்வதால்  செடிகள் வளர்ச்சி குன்றி, காய்ந்துவிடும். அழுகிய  செடிகளை பிடுங்கி அழிப்பதுடன், நோய் கண்ட இடத்தில் லிட்டருக்கு ஒரு கிராம் பெவிஸ்டின்  பூசணக் கொல்லியை கரைத்து ஊற்றி பூசணம் மேலும் பரவாமல் தடுக்கலாம். 
0.1 சதம் மற்றும் 1 சதம் பேவிஸ்டின் கரைசலை தயார்  செய்வது எப்படி? 
1 கிராம் பேவிஸ்டினை 1 லிட்டர் நீரில் கரைப்பது 0.1 சதம் கரைசலாகும். 10  கிராம் பேவிஸ்டினை 1 லிட்டர் நீரில் கரைப்பது 1 சதம் கரைசலாகும் 
கலவன் அகற்றுதல் 
பிற இரகம் விதைப்பயிரில் கலந்து விடுவதை கலவன் என்கிறோம். கலவன்கள் விதைப்  பயிரின் இனத்தூய்மையை பாதிக்கின்றன. மேலும், சிலவகைக் கலவன்களினால் பூச்சி மற்றும்  நோய் பரவும் வாய்ப்புகளும் உண்டு. 
கொள்ளு விதைப் பயிரில் கலவன்களை கீழ் காணும் பருவங்களில் கண்டிப்பாக நீக்குதல்  அவசியம். 
  
    - பூக்கும்  பருவத்திற்கு முன்னர் 
 
    - பூப்பின் போது
 
    - காய்ப்பிடிப்பின் போது
 
    - அறுவடைக்கு முன்னர்
 
   
 
பூப்பு பருவத்திற்கு முன்னர், விதைப் பயிரில்  செடியின் உயரத்தைக் கொண்டு, ஊதா நிறம் கொண்ட செடிகள், முந்திக்கொண்டு பூக்கும் செடிகள்  ஆகியவற்றை நீக்க வேண்டும் (அட்டவணையில் காண்க). 
பூப்பின் போது பூக்கள் நிறம் மற்றும் அளவு  போன்றவற்றைக் கொண்டு கலவன்களை அகற்ற வேண்டும். மேலும் பூக்காத செடிகள், மலட்டுத்  தேமல் நோய் கண்ட செடிகள் ஆகியவற்றையும் நீக்க வேண்டம். காய்ப்பிடிப்பின் போது காய்களின்  நிறம், அகலம், நீளம் கொண்டு கலவனை அடையாளம் கண்டு அகற்றலாம். 
இவ்வாறு கலவன் நீக்குவதால், விதைப்பயிரின்  இனத்தூய்மையை நாம் எளிதில் பாதுகாக்க முடியும்.  
☺ உங்கள் கவனத்திற்கு 
கொள்ளு இரகங்களின் குணங்கள் கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.  
☺எச்சரிக்கை 
அனைத்துகலவன்களையும் விதை வயலில் இருந்து உடனடியாக அகற்றி அழித்துவிடவேண்டும்  
அறுவடை  
           
  பூக்கள் தோன்றிய 25 - 30 நாட்களில் விதைகள்  முற்றிவிடும். அறுவடையின் போது காய்கள் மற்றும் செடிகள் வைக்கோல் நிறமடையும். இதுவே  அறுவடைக்கு ஏற்ற தருணம். அப்போது செடிகளை அறுத்து களத்தில் நன்கு காயவைக்க வேண்டும்.  தாமதமாக அறுவடை செய்தால் காய்கள் வெடித்து, விதைகள் கீழே கொட்டி வீணாகிவிடும். 
          
  அறுவடை செய்த செடிகளை இரண்டு நாட்களுக்கு  நன்கு உலர்த்தி குச்சி கொண்டு அடித்து விதைகளை பிரிக்க வேண்டும் (வரைபடம் 3). பின்னர்  விதைகளுடன் கலந்துள்ள தூசி, துப்பு போன்றவற்றை பிரித்து, காற்றில் தூற்றி எடுத்து  காயவைக்க வேண்டும். நன்கு காய்ந்த விதைகளையே விதை உருவாக்க பயன்படுத்த வேண்டும்.  
விதை உருவாக்கம் 
          
  திரட்சியான விதைகளைப் பெற, விதைகளை இரகத்திற்கு  ஏற்றவாறு 8/64 அல்லது 3.1 மி.மீ வட்டக்கண் சல்லடை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.  சுத்திகரிப்பு செய்யப்பட்ட விதைகளில் காணப்படும் உடைந்த மற்றும் நோய்தாக்கிய விதைகளை  நீக்கி நல்ல தரமான விதைகளையே சேமிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.  
விதைச் சேமிப்பு  
          
  விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ  அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது. 
விதையின்  ஈரப்பதம் 
          
  விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது. விதையின் ஈரப்பதம்  அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த கால சேமிப்புக்கு  விதைகளை 9 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளிலோ அல்லது சாக்குப் பைகளிலோ சேமியுங்கள்.  நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின் ஈரப் பதத்தை 8 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத  பாலித்தீன் பைகளில் சேமித்து வையுங்கள். 
விதை நேர்த்தி 
           
  விதைகளை சேமிப்பதற்கு முன் பூசணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யுங்கள்.  இதற்கு திரம் அல்லது கேப்டான் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில்  கலந்து வையுங்கள். 
விதைச் சேமிப்புப் பைகள் 
          
  விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை. ஆகையால் காற்றின் ஈரத்தன்மை  அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி கரைகளில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகா  பைகளையே உபயோகிக்க வேண்டும். ஈரக்காற்று புகா பைகள் எவை? 700 காஜ் அடர்வுள்ள பாலிதீன்  பைகளே காற்று புகாத பைகள். எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள். 
          
  விதைகளை, கிடங்குகளில் சேமித்து வைக்கும் பொழுது முன்னெச்சரிக்கையாக இருங்கள்.  சாக்குப் பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கும்பொழுது 6 அல்லது 7 வரிசைக்கு மேல் அடுக்க  வேண்டாம். ஏனென்றால், மேலே உள்ள மூட்டைகளின் பாரம் அடியிலுள்ள மூட்டைகளைப் போட்டு  அழுத்துவதால் அடி மூட்டையில் உள்ள விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளது. 
          
  விதை மூட்டைகளை வெறும் தரையின் மீது அடுக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல்  சுவற்றின் மீது சாய்த்து அடுக்குதலையும் தவிர்க்க வேண்டும். இதனால் தரை மற்றும் சுவற்றில்  உள்ள ஈரப்பதம் விதைகளில் ஊடுருவி அவற்றைப் பாதிப்பதைத் தடுக்கலாம். விதை மூட்டைகளை  மரக்கட்டைகளின்மீது அல்லது தார்பாய்களின்மீது அடுக்கி வையுங்கள் (வரைபடம் 4). 
விதைச் சேமிப்புக் கிடங்கு  பராமரிப்பு 
           
  சேமிப்புக் கிடங்கை பூச்சிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். விதை  சேமிப்புக் காலத்தில் விதைகளை பூச்சிகள் தாக்கினால் புகை மூட்டம் போடலாம். காற்று  புகாமல் விதைக் கிடங்கை நன்கு அடைத்து விட்டு, செல்பாஸ் (அலுமினியம் பாஸ்பைடு) நச்சு  மாத்திரைகளை ஒரு கன மீட்டருக்கு ஒரு மாத்திரை என்ற அளவில் விதை கிடங்கினுள்ளே 3 நாட்கள்  வைத்து விடுங்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர் நச்சுக்காற்றை வெளியேற்ற நல்ல காற்றோட்டம்  இருக்கும்படி விதைக்கிடங்கை திறந்து வையுங்கள். இவ்வாறு செய்வதால் விதைகள் பூச்சி தாக்குதலிலிருந்து  பாதுகாக்கப்படுகின்றன. 
விதைச் சேமிப்பு 
           
  விதைகளை நன்கு சேமிக்க, அவற்றை 7 - 8 சத ஈரப்பதம் வரை காய வைத்து பின்னர் கிலோவுக்கு  2 கிராம் காப்டான் பூசணக் கொல்லி மருந்துடன் விதை நேர்த்தி செய்து சேமிக்க வேண்டும். 
பயறுவிதை மற்றும் தானிய  சேமிப்பு 
           
  விவசாயிகள் பயறு விதைகளை தானியத்திற்காகவும், விதைக்காகவும் சேமிப்பதுண்டு.  அவ்வாறு செய்யும் போது, விதைகளுக்கு பூசணக்கொல்லி மருந்து கலந்து கொண்டு சேமித்தால்  அவற்றை தானியத்திற்காக பயன்படுத்த முடியாது. மருந்து கலந்து சேமிக்காவிடில் விதைகள்  பயறு வண்டுகளினால் பாதிப்புக்குள்ளாகும். எனவே, விதைகளை தானியத்திற்காகவும், விதைக்காகவும்  சேமிக்க வேண்டும் என்றால் அவற்றை ஊக்குவிக்கப்பட்ட களிமண் கொண்டு விதை நேர்த்தி செய்வது  நல்லது. 
          
  நூறு கிலோ விதையுடன் ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்ற அளவில் கலந்து  சேமிக்கலாம். இதனால் பயறு வண்டு சேதாரம் இருக்காது. விதைகளை விதைக்கும் போது ஒரு கிலோ  விதையுடன் இரண்டு கிராம் காப்டான் அல்லது திரம் கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்க  வேண்டும். விதைகள் விதைப்புக்குத் தேவைப்படாத போது ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணை நன்கு  கழுவி சுத்தம் செய்து தானியமாகப் பயன்படுத்தலாம். 
விதைச் சான்றளிப்பு 
           
  தரமான விதைகள் என்பது தன்னுடைய இனத்தூய்மையில் சிறிதும் குன்றாமலும், களைவிதை  பிற இரக விதை, நோய்தாக்கிய விதை ஆகியவை இல்லாமலும் இருக்கும். மேலும் தரமான விதை அதிக  வீரியத்துடனும், முளைப்புத் தன்மையும் கொண்டிருக்கும். இதனால் விவசாயிகள் தரமான விதைகளை  பயன்படுத்தும் போது வயல்களில் அதிக இடைவெளி இல்லாமல் சரியான செடிகளின் எண்ணிக்கை பராமரிக்க  முடியும். அதிக வீரியத்துடன் வளர்வதால் நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்டிருக்கும்.  எனவே, விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது முட்டுவழி செலவுகளை குறைக்க முடியும். 
          
  நாம் ஒரு பொருளை வாங்கும்போது அதற்கு ஐ.எஸ்.ஐ என்ற தரச்சான்று முத்திரை உள்ளதா  என்று பார்த்து வாங்குவோம் அல்லவா! ஏன் அப்படிச் செய்கிறோம்? அப்போதுதான் அந்த பொருள்  தரக்கட்டுப்பாட்டுடன் செய்யப்பட்டு இருக்கிறது என அதை நம்பி வாங்குகிறோம். எனவே ஐ.எஸ்.ஐ  முத்திரை என்பது தரத்திற்கு உத்திரவாதம். இதுபோலவே விதைத் தரத்திற்கும் உத்திரவாதம்  தருவது விதைச்சான்று  நிறுவனமாகும். 
          
  விதை உற்பத்தி தரக்கட்டுபாட்டுக்கென்று சட்டப்பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே  விதைச் சான்றளிப்பாகும். இதை “தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன்” என்று கூட சொல்லலாம்.  மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக சுத்தத்தன்மையும்,  மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வதே விதைச்  சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும். 
          
  விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு உபயோகிக்கும்  விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப்  பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம்,  அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, மூட்டை பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பது  வரை ஆய்வு செய்யப்படுகின்றன. இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் ஆய்வு  மேற்கொள்ளப்படுகின்றது. 
          
  ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம்  இருந்தால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்குத்  தயாராகின்றன. 
          
  எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம்  இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும். 
சான்றுவிதை உற்பத்தி  செய்யும்போது உற்பத்தி செய்த விதைகளில் கீழ்க்கண்ட விதைத்தரம் இருத்தல் அவசியம் 
வயல் தரம் 
  
    
       
        கலவன்கள் (அதிக பட்சம்)  | 
         | 
        0.2 சதம்  | 
       
   
 
விதைத் தரம் 
  
    
       
        சுத்தமான விதைகள் (குறைந்த பட்சம்)  | 
         | 
        98 சதம்  | 
       
    
      தூசி (அதிக பட்சம்)  | 
         | 
        2 சதம்  | 
       
    
      பிற இனப்பயிர் விதைகள் (அதிக பட்சம்)  | 
         | 
        1 சதம்   | 
       
    
      களை விதைகள் (அதிக பட்சம்)  | 
         | 
        1 சதம்  | 
       
    
      முளைப்புத் திறன் ( குறைந்த பட்சம்)  | 
         | 
        75 சதம்  | 
       
    
      ஈரத்தன்மை (அதிக பட்சம்)  | 
         | 
           | 
       
    
      காற்றுப்புகாத பை   | 
         | 
        8.0 சதம்  | 
       
    
      காற்றுப்புகும் பை   | 
         | 
        9.0 சதம்  | 
       
   
 
கலவன் அகற்றும்  பொழுது கருத்தில் கொள்ள வேண்டிய சில கொள்ளு இரகங்களின் குணாதிசயங்கள் 
    (கீ்ழ்கண்ட  குணங்களில் மாற்றம் கொண்ட செடிகளை அகற்றவேண்டும்) 
   
  
    
       
            குணாதிசயங்கள்  | 
        கோ.1  | 
        பையூர் 1  | 
       
    
      பெற்றோர்   | 
        முதுகுளத்தூர் இரகத்திலிருந்து தனிவழித்தேர்வு  | 
        மேட்டூர் இரகத்திலிருந்து தனிவழித்தேர்வு  | 
       
    
      50 சதம் பூக்கும் நாள்  | 
        55 - 60  | 
        45 - 50  | 
       
    
      வயது (நாள்)   | 
        110  | 
        110  | 
       
    
      உயரம் 
        (செ.மீ)  | 
        30 - 40  | 
        35 - 40  | 
       
    
      கிளைகளின் எண்ணிக்கை   | 
        2 - 3  | 
        2 - 3  | 
       
    
      100 விதை எடை (கிராம்)  | 
        4 - 6  | 
        3 - 4  | 
       
    
      விதைகளின் நிறம்   | 
        மங்கிய நிறம் சிவப்பு புள்ளிகள் காணப்படும்   | 
        இளம் பழுப்பு   | 
       
    
      விதை மகசூல்   | 
           | 
           | 
       
    
      மானாவாரி (கிலோ / ஏக்கர்)   | 
        500  | 
        600  | 
       
   
 
           |