தட்டைப்பயறு விதை உற்பத்தி 
      தரமான விதை உற்பத்தி முறைகள் 
      விதை  தரமானதென்றால் அது தனது பாரம்பரிய குணங்களிலிருந்து சிறிதும் குறையாமல் இருக்க  வேண்டும்.  மேலும் களை, பிற இரகம் மற்றும்  பிற பயிர் விதைகள் கலப்பில்லாமலும், âச்சி, âஞ்சாணங்களால் தாக்கப்படாமலும், தூசி,  துப்பு இல்லாமலும் நல்ல முளைப்புத்திறன் கொண்டதாகவும் இருப்பது அவசியம்.  விதை விதைத்தவுடன் நன்கு முளைத்து,  செழிப்பாகவும், சீராகவும் வளர்ந்து அதிக மகசூலுக்கு அடிப்படையாக இருப்பது தரமான  விதையே ஆகும்.  இப்பொழுது தரமான விதை  உற்பத்தி வழிமுறைகளை காண்போம். 
      நிலம் தேர்ந்தெடுத்தல் 
      தட்டைப்பயிறுக்கு  நல்ல வடிகால் கொண்ட நிலம் அவசியம்.   இல்லாவிடில் முளைப்பு பாதிப்பதோடு மகசூலும் குறையும். 
           
  விதைக்க  தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் இதற்கு முந்தைய பயிர் தட்டைப்பயிராக இல்லாதவாறு  பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.  மேலும்  வேர் அழுகல் மற்றும் வாடல் நோய் தாக்காத நிலமாயிருத்தல் நலம். 
      J தான்தோன்றி பயிர்கள் என்றால் என்ன? 
                 
  வயலில் உள்ள மண்களில் கலந்துள்ள விதைகளிலிருந்து முளைக்கும் பயிர்களே  தான்தோன்றி பயிர்களாகும். இவ்விதைகள் முந்தைய கால பருவ பயிர்களில் இருந்து கீழே  விழுந்தவை ஆகும். விதைக்காமல் தானகவே முளைத்து வளரக்கூடியவை என்பதால் இந்தப்  பெயர்.  
      இனத்தூய்மையை பராமரிக்க  பயிர் விலகு தூரம் 
           
  தட்டைப்பயிர்  தன் மகரந்தச் சேர்க்கை கொண்ட பயிராகும்.   இரண்டு தட்டைப்பயிர் இரகங்களுக்கு இடையே குறைந்த பட்சம் 75 அடி (25  மீட்டர்) இருக்க வேண்டும்.  இனக்கலப்பை  தடுக்க 5 அல்லது 6 வரிசை விதை பயிர் இரகத்தை எல்லை பயிராக விதைக்க வேண்டும். 
      ☺ விவசாயிகள் அடிக்கடி விதைப் பயிரினை விலக்கி  வைக்க இயலவில்லை என கூறுகின்றனர். அச்சமயங்களில் ஐந்து வரிசை மக்காச்சோள பயிரினை விதைப்பயிரினை  சுற்றி வளர்த்தல் பிற பயிரின் கலப்பினை தடுக்கும்.   
      விதைப்பயிர் செய்ய ஏற்ற பருவம் 
           
  அதிக  விளைச்சலுக்கு ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டம் ஏற்ற தருணமாகும்.  எனினும் பூப்பு மற்றும் காய்பிடிப்பு  சமயங்களில் மழை இல்லாதவாறு பார்த்து கொள்ளுதல் அவசியம். 
      நிலம் தயாரித்தல் 
           
  நிலத்தை  நன்கு உழுது பண்படுத்த வேண்டும்.  பின்னர்  இரகத்திற்கு ஏற்றவாறு 45 செ.மீ. (1.5 அடி) அல்லது 20 செ.மீ. இடைவெளிகளில பார்கள்  அமைக்க வேண்டும். 
      உரமும் உரமிடுதலும் 
           
  நிலத்தை  3 முதல் 4 முறை நன்கு உழுது கடைசி உழவின் போது ஏக்கருக்கு 10 வண்டி தொழுவுரம்  இடவேண்டும்.       ஒரு ஏக்கருக்கு தேவையான 45  கிலோ யூரியா மற்றும் 120 கிலோ சூப்பர் ஆகிய உரங்களை பார்களில் பக்கவாட்டில்  இடவேண்டும். 
      விதை தேர்ந்தெடுத்தலின்  அவசியம் 
      விதைப்பயறு  உற்பத்திக்கு சான்ற பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும்.  ஏனெனில், இரகத்தின் மரபுத் தன்மைகளுடன் அதிக  முளைப்பு திறனும் வீரியத் தன்மையும் கொண்டிருப்பதால் அவைகள் விரைவாக முளைத்து  வீரியமுள்ள நாற்றுகளை கொடுக்கும்.  இதனால்  பயிர் எண்ணிக்கை அதிகரித்து, அதிக மகசூலுக்கு வழிவகுக்கும். 
           
  வாங்கிய  விதைகளிலுள்ள உடைந்த, கருப்பு மற்றும் செம்பழுப்பு நிறமுள்ள விதைகளை நீக்கிவிட  வேண்டும். 
      ☺ உங்கள் கவனத்திற்கு 
      எந்த ஒரு விவசாயியும் சான்று விதை உற்பத்தி  செய்யலாம். அந்த பகுதியின் வேளாண் அலுவலர் அதற்கு துணை புரிவார். சான்று விதை உற்பத்தி  ஆதார விதையை கொண்டும், ஆதார விதை உற்பத்தி வல்லுநர் விதையை கொண்டும் உற்பத்தி செய்ய  வேண்டும். 
      விதை அளவு 
           
  இரகத்திற்கு  ஏற்றவாறு விதை அளவு 8 கிலோ வரை தேவைப்படும். 
      கடின விதைகள் என்றால் என்ன? 
      பயறு விதைகளில் பொதுவாக கடின விதைள் இருக்கும். இவ்விதைகளை நீரில்  நனைக்கும் பொழுது ஈரத்தை உறியாமல் இருக்கும். ஆதலால் வயலில் நடும் பொழுது  முளைக்காமல் அவை இடைவெளியை ஏற்படுத்தும். சான்றழிப்பிற்கு வயலில் இடைவெளி இருத்தல்  கூடாது. ஆதலால் விதைப்பிற்கு 10 சதத்திற்கும் அதிகமாக கடின விதைகளை உபயோகித்தல்  கூடாது. 
      கடின விதைகளை  கண்டறிவது எப்படி? 
      100 விதைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து  அதனில் 100 மி.லி. நீர் நிரப்ப வேண்டும். 2 மணி நேரம் கழிந்த பின்னர் நீரினை உறிந்து  விதைகள் பெரியதாகி விடும். அப்படி இல்லாத விதைகளை அகற்றி விட வேண்டும். 
      அமிலச் சிகிச்சை என்றால் என்ன? 
          
  விதையின் கடினத்  தன்மைக்கு காரணமே விதை உறை கடினமாக இருப்பதுதான். அமிலம் கொண்டு விதை நேர்த்தி  செய்யும் போது, விதையுறை மென்மை அடைகிறது. இதனால் நீர் எளிதில் உட் சென்று கடினத்  தன்மை நீங்க வழிகோல்கிறது. 
          
  அமிலச் சிகிச்சை செய்ய  10 சத வியாபார ரீதியான கந்தக அமிலம் தேவைப்படுகிறது. ஒரு கிலோ விதைக்கு 100  மி.லி. என்ற அளவில் கந்தக அமிலம் கலந்து, இரண்டு நிமிடம் வைத்திருந்து பின்னர்  நீரில் மூன்று முறை கழுவ வேண்டும். விதைகளின் மேல் படர்ந்துள்ள அமிலம் இதனால்  நீங்கிவிடும். பின்னர் நிழலில் நான்கு மணி நேரம் உலர்த்தி விதைக்கலாம். 
      பூசணக்கொல்லி விதைநேர்த்தி 
           
  விதைகளை  நோய்த் தாக்குதலிருந்து பாதுகாப்பதன் மூலம் கட்டாயமாக முளைப்புத்திறன் ஒரே சீராக  அமையும். எனவே விதைக்கும் முன் விதைநேர்த்தி செய்வது அவசியம். 
      முளைக்கும்  போது மண்ணில் காணப்படும் பூசணத்தின் தாக்குதலினால் விதை அழுகல் ஏற்பட்டு அவற்றின்  முளைப்பு பாதிக்கப்படும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் காப்டான்  அல்லது திராம் பூசணக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி  விதைநேர்த்தி செய்ய வேண்டும். 
           
      ரைசோபிய நுண்ணுயிரியின் பயன் 
           
  பயறு  வகைப் பயிர்களின் வேர்களில் வேர் முடிச்சுக்கள் காணப்படும்.  இந்த வேர் முடிச்சுகளில் ரைசோபியம் என்ற  நுண்ணுயிர் இருக்கின்றன.  இவை காற்றில்  உள்ள தழைச்சத்தை கிரகித்து பயறுவகைச் செடிகளுக்கு அளிக்கின்றன.  இதனால் செடிகள் நன்கு வளர்ந்து அதிக மகசூல்  கொடுக்கின்றன. 
      நுண்ணுயிர் விதை நேர்த்தி 
           
  இதற்கு  தட்டைபயிருக்கு பரிந்துரைக்கப்படும் ரைசோபிய நுண்ணுயிரை உபயோகித்தால் நல்ல பயன்  அடையலாம்.  ஒரு பொட்டலம் நுண்ணுயிர்  கலவையை 300 மில்லி ஆற வைத்த கஞ்சியுடன் கலந்து பின்னர் 8 கிலோ விதையுடன் நன்கு  கலக்க வேண்டும்.  இவ்வாறு கலந்த விதையை 3  முதல் 4 மணி நேரம் வரை நிழலில் உலர்த்த வேண்டும்   
           
  பூசணக்கொல்லி  விதை நேர்த்தி செய்திருந்தால், பூசணக்கொல்லி மருந்து கலந்து 24 மணி நேரம் கழித்து  ரைசோபிய விதை நேர்த்தி செய்ய வேண்டும்.   இல்லாவிடில் மருந்தினால், ரைசோபிய நுண்ணுயிர் பாதிப்புக்குள்ளாகும்.   
      விதைப்பு 
           
  விதைநேர்த்தி  செய்த விதைகளை பார்களில் பக்கவாட்டில் ஓர் அங்குல ஆழத்தில் 20 செ.மீ. இடைவெளியில் ஊன்ற  வேண்டும்.   
      நீர் நிர்வாகம் 
           
  விதைப்பயிருக்கு  தகுந்த பருவத்தில் தேவையான நீர் பாய்ச்சுதல் அவசியம். விதைப்பு நீர், மூன்றாம்  நாள் உயிர் நீர் பின்னர்  மண்ணின்  தன்மைக்கேற்ப வாரம் ஒரு முறை நீர்ப்பாய்சுதல் வேண்டும்.  பூ மற்றும் காய்ப்பருவங்களில் தகுந்த நீர்  நிர்வாகம் செய்யாவிடில் பூக்கள் உதிர்ந்து மகசூல் குறைய நேரிடும், விதைகளும்  சிறுத்துவிடும். 
      இலைவழி உரம் 
           
  திரட்சியான  விதைகளை பெறுவதற்கு அடி உரம் மட்டுமே போதாது.   இலை வழியாகவும் உரம் செலுத்த வேண்டும். 
           
  தரமான  விதை உற்பத்திக்கு, போதிய ஊட்டச்சத்து, கொடுப்பது அவசியம்.  சிறுவர்களுக்கு, வளரும் போது எவ்வாறு ஊட்டம்  அவசியமோ, அதேபோன்று விதைகள் உண்டாகி வளரும் போதும் அவற்றிற்கு அதிக ஊட்டச்சத்து  தேவைப்படுகின்றது.  இதற்கு வேர்கள் மண்ணில்  இருந்து பெற்ற சத்துக்கள் மட்டும் போதாது.   இலை மூலமாகவும் அளித்திடல் வேண்டும்.   இவ்வாறு இலை மூலம் நாம் ஊட்டச்சத்து அளிக்கும் போது, வளரும் விதைகளுக்கு  ஊட்டம் போய்ச் சேரும். அதனால் அவை விரைவில் வளர்ந்து வீரிய விதை உற்பத்திக்கு வழி  வகுக்கும். 
           
  இலைவழி  உரம் அளிப்பதற்கு டி.ஏ.பி. உரக்ககரைசலை பயன்படுத்த வேண்டும்.  இந்த டி.ஏ.பி உரக் கரைசலைத் தயாரிப்பது எவ்வாறு  என்பதைப் பார்ப்போம். 
      தேவையான பொருட்கள் 
      
        
          - 4 கிலோ டி.ஏ.பி  உரம்
 
          - 13 லிட்டர் நீர்
 
          - 15 லிட்டர்  பிளாஸ்டிக் வாளி
 
          - வடிகட்ட ஒரு துணி
 
          - கைத்தெளிப்பான்
 
         
       
        
      
        
          - முதலில் 4 கிலோ டி.ஏ.பி உரத்தை 13 லிட்டர் நீரில்,  தெளிப்பதற்கு முந்திய நாள் மாலை ஊறவைக்க வேண்டும்.
 
          - மறுநாள் தெளிந்த நீரை மட்டும் எடுத்து, துணியின் துணை  கொண்டு வடிகட்டி விட வேண்டும்.
 
          - பின்னர் ஒரு லிட்டர் கரைசலை எடுத்து அதனுடன் 14 லிட்டர்  நீரை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.
 
          - இவ்வாறு தயாரித்த நீர்தத கரைலை கைத்தெளிப்பான் கொண்டு  மாலை வேலையில் செடிகளின் மீது நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.
 
          - ஒரு ஏக்கருக்கு தெளிக்க 200 லிட்டர் நீர்த்த கரைசல்  தேவைப்படும்.
 
          - மாலை நேரங்களில் (நான்கு மணிக்கு மேல்) தெளித்தால்  இலைகள் கருகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
 
          - டி.ஏ.பி கரைசல் தெளித்த உடன் நீர்ப் பாய்ச்சுதல்  மிகவும் அவசியம்.
 
         
       
      இக்கரைசலை  பயிரின் 50 சத பூப்பு பருவத்தில் ஒரு முறையும் பின்னர் 15 நாட்கள் கழித்து ஒரு  முறையும் அடிக்க வேண்டும்.  வளரும்  விதைகளுக்கு எளிதில் ஊட்டம் போய்ச்சேரும்.   அதனால் அவை விரைவில் வளர்ந்து வீரிய விதை உற்பத்திக்கு வழி வகுக்கும். 
      ☺ தெளிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை 
      
        
          - டி.ஏ.பி கரைசலை காலையிலோ (அதாவது 9 மணிக்குள்) அல்லது  மாலையிலோ (4-6 மணிக்குள்) தெளிப்பதால் பயிருக்கு பாதிப்பு ஏற்படாது.
 
          - கரைசல் தெளிப்பதற்கு முன்னர் நீர் பாய்ச்சுதல் அவசியம்.
 
          - கரைசலுடன் பூச்சிக் கொல்லி மருந்தும் கலந்து  தெளிக்கலாம்.
 
          - கைத்தெளிப்பானை சுத்தமாக கழுவிய பின்னரே பயன்படுத்த  வேண்டும்.  களைக்கொல்லி அடிக்க  பயன்படுத்திய கைத்தெளிப்பானை உரக்கரைசல் அடிக்க பயன்படுத்தக்கூடாது.
 
         
       
      மேற்சொன்ன  டி.ஏ.பி கரைசலை விதை பயிர் பூத்த உடன் ஒரு முறையும் பின்னர் பதினைந்து நாள்  கழித்து ஒரு முறையும் என இரு முறை தெளிக்க வேண்டும். 
      வளர்ச்சியூக்கி தெளித்தலும்  அதன் நன்மைகளும் 
      பொதுவாக  தட்டைப்பயிரில் அதிகமாக பூக்கள் தோன்றும்.   இரகத்தின் தன்மை, நிலத்தின் வளம் ஆகியவற்றை பொறுத்து காய்பிடிப்பு  இருக்கும்.  எனினும் குறைந்த பூக்களே காயாக  மாறுகின்றன.  மற்றவை உதிர்ந்து  விடுகின்றன.  பூ உதிர்வதை தடுக்க  வளர்ச்சியூக்கி தெளிக்கலாம். 
           
  தட்டைப்பயிரில்  பூக்கள் தோன்றும் சமயத்தில் பிளானோஃபிக்ஸ் என்ற வளர்ச்சியூக்கியை லிட்டருக்கு 4  மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.   இதனால் காய்பிடிப்பு அதிகமாகும். 
           
  இதேபோன்று  முதல் தெளிப்புக்கு 15 நாட்கள் பின்னர் மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும். 
           
  வளர்ச்சியூக்கியை  குடிநீரில் கலந்து தெளிக்க வேண்டும்.   உப்பு நீர் பயன்படுத்துதல் கூடாது.   கைத்தெளிப்பான் சுத்தமாக இருக்க வேண்டும்.   காலையிலோ, மாலையிலோ தெளிக்கலாம்.   வளர்ச்சியூக்கி தெளிக்கும் போது லிட்டருக்கு ஒரு மில்லி டீப்பால் கலந்து  தெளிக்க வேண்டும். 
      0.1 சதம்  மற்றும் 1 சதம் பேவிஸ்டின் கரைசலை தயார் செய்வது எப்படி? 
      1 கிராம் பேவிஸ்டினை 1 லிட்டர் நீரில்  கரைப்பது 0.1 சதம் கரைசலாகும். 10 கிராம் பேவிஸ்டினை 1 லிட்டர் நீரில் கரைப்பது 1  சதம் கரைசலாகும் 
      நுனி கிள்ளுதல் 
           
  தட்டைப்பயிர்  வேகமாக வளரக்கூடிய ஒரு இரகமாகும்.  அதனால்  செடிகளில் அதிக கொடிகள் தோன்றும்.   இக்கொடிகளை நீக்காவிடில் பூப்பிடிப்பு குறைந்து மகசூல் பாதிக்கும். 
  இக்கொடிகளை  அவ்வப்போது கிள்ளிவிட வேண்டும்.  விதைத்த  ஒரு மாதத்தில் ஏக்கருக்கு 6 பெண்களை கொண்டு நுனிகளை கிள்ளி விடவேண்டும். 
      குச்சி கொண்டு நுனி கிள்ளுதல் 
           
  நுனிகளை  கையால் கிள்ளினால் செலவு அதிகமாகும்.  எனவே  ஒரு தப்பை கொண்டு பயிரில் மேலாக வீசும் போது நுனிகள் துண்டிக்கப்படும்.  இவ்வாறு செய்யும்போது ஏக்கருக்கு 6 பெண்கள் 3  மணி நேரத்தில் நுனி கிள்ளுதலை செய்து முடித்துவிடலாம்.  ஒரு வாரம் தொடர்ந்து செய்தால் செடிகளில்  பூக்கள் அதிகமாக தோன்றும். 
      களை நிர்வாகம் 
           
  தக்க  தருணத்தில் களைகளை நீக்குவதன் நன்மைகளை விவசாயிகளுக்கு அதிகம் கூற வேண்டியது  இல்லை. 
  தட்டைப்பயிறு  விதைப்பயிரில் களைகளை நீக்குவதால் தட்டைப்பயறு செடிகள் வேகமாக வளர்ந்து  விளைச்சலுக்கு உதவும்.  விதைத்த முதல் 10  நாட்களில் ஒரு களையும்  பின்னர் 15 நாட்கள்  கழித்து இரண்டாவது களையும் எடுப்பது அவசியம்.   மேலும், விதைத்தவுடன் ஒரு லிட்டர் நீரில் 1 மில்லி பாசலின் களைக்  கொல்லியைத் தெளித்தும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். 
      பயிர் பாதுகாப்பின் அவசியம் 
           
  தட்டைப்பயிரில்  முளைத்தவுடன் இலை வண்டுகள் தோன்றி இலைகளை பாதிக்கும்.  இதனைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீரில் 2  மில்லி எண்டோசல்பான் மருந்தை கலந்து தெளிக்கவேண்டும். 
           
  தண்டு  ஈ தாக்கிய செடிகள் வாடிவிடும்.  இதற்கும்  ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி எண்டோசல்பான் கலந்து தெளிக்கவும். 
           
  தட்டைப்பயிரில்  அசுவுனி அதிகமாக காணப்படும்.  இதனைக்  கட்டுப்டுத்த ஒரு லிட்டர் நீரில் 1 மில்லி அல்லது 1.5 மில்லி நூவக்கரான் கலந்து  தெளிக்கவும். 
      நோய்க்கட்டுப்பாடு 
           
  தட்டைப்பயிரில்  இளம்வயதில் அதிகமாக தேமல் நோய் காணப்படும்.   இவற்றை நீக்கி அழித்துவிட வேண்டும்.   மேலும் வாடல் மற்றும் வேர் அழுகல் நோய் காணப்பட்டால், செடிகளை பிடுங்கி  அழித்தல் வேண்டும்.  பிடுங்கிய இடத்தில்,  ஒரு லிட்டர் நீருடன் ஒரு கிராம் என்ற அளவில் பெவிஸ்டின் பூசணக்கொல்லியை கலந்து  ஊற்ற வேண்டும்.  இதனால் நோய் பரவுவதைக்  தடுக்கலாம். 
           
  தட்டைப்பயிரில்  தோன்றும் இலைப்புள்ளி நோய் ஒரு குறித்தறிவிக்கப்பட்ட நோயாகும்.  இந்நோய் கண்டவுடன் ஒரு லிட்டர் நீரில் 4  கிராம் டைதேன் எம்.45 என்ற பூசணக்கொல்லியை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். 
      குறித்தறிவிக்கப்பட்ட நோய்  என்றால் என்ன? 
           
  விதைப்பயிரில்  தோன்றும் சில முக்கிய நோய்களை குறித்தறிவிக்கப்பட்ட நோய் என்று சான்று  துறையினரால் அறிவிக்கப்படும்.  இவ்வகை  நோய்களை விதைப்பயிரை பாதிப்பதுடன், விதை மூலம் பரவும் நோயும் ஆகும்.  இதனால் விதை பயன்படுத்திய இடங்களில் நோய் பரவி  பயிரை பாதிக்கிறது.  எனவே  குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் விதைப்பயிரில் தோன்றிய பயிரை விதை எடுக்க பயன்படுத்தமுடியாது.  இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.  நோய்கண்ட செடிகளை நீக்கி, பூசணக்கொல்லி  அடித்து கட்டுப்படுத்துதல் அவசியம். 
      கலவன் அகற்றுதல் 
           
  பிற  இரகம், விதைப்பயிரில் கலந்து விடுவதை கலவன் என்கிறோம்.  கலவன்கள் விதைப் பயிரின் இனத்தூய்மையை  பாதிக்கின்றன.  மேலும், சிலவகைக்  கலவன்களினால் பூச்சி மற்றும் நோய் பரவும் வாய்ப்புகளும் உண்டு. 
           
  தட்டைப்பயிரில்  விதைப் பயிரில் கலவன்களை கீழ் காணும் பருவங்களில் கண்டிப்பாக நீக்குதல் அவசியம். 
      
        
          - பூக்கும்  பருவத்திற்கு முன்னர்
 
          - பூப்பின் போது
 
          - காய்ப்பிடிப்பின் போது
 
          - அறுவடைக்கு முன்னர்
 
         
       
      முளைத்த  25 நாட்களில் கலவன்களைக் கண்டறிந்து அகற்றிவிட வேண்டும்.  இதற்கு பயிர் செய்யப்பட்ட இரகத்தின் இயல்புகளை  (அட்டவணை) கொண்டிராத செடிகளையும், வேறு பயிர் செடிகளையும் நீக்கிவிடுவதால் விதை  பயிரில் இனத்தூய்மையைக் காக்கலாம்.   அதேபோன்று வேர் அழுகல், வாடல், தேமல் மற்றும் இலைப்புள்ளி நோய் கொண்ட  செடிகளை நீக்க வேண்டும். 
  பூப்பின்  போது மலர்கள் நிறம் கொண்டு கலவன்களை அகற்ற வேண்டும். காய்ப்பிடிப்பின் போது  காயின் நீளம், நிறம் ஆகியவற்றை கொண்டும் கலவன் அகற்றலாம்.  அறுவடைக்கு முன்னர் விதைகளின் நிறம் மற்றும்  உருவம் கொண்டு கலவன் அகற்ற வேண்டும்.    
      அறுவடை 
      பூப்பு  அடைந்த ஒரு மாதத்தில் காய்கள் அறுவடைக்கு தயாராகின்றன.  காய்கள் பச்சை, இளம் பச்சை நிறத்திலிருந்து  வைக்கோல் நிறமடையும் போது அறுவடைக்கு தயாராகும். 
           
  அறுவடைக்கு  முன்னர், பயறுவண்டுகளின் சேதத்தைத் தடுக்க, எண்டோசல்பான் மருந்தை லிட்டருக்கு  இரண்டு மில்லி என்ற அளவில் கலந்து காய்களின் மீது நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.ள 
           
  முதிர்ந்த  காய்களை பறித்து, களத்தில் காயப்போடவேண்டும்.   நன்கு காய்ந்தவுடன் ஒரு குச்சி கொண்டு, அடித்து விதைகளைப்ப பெறலாம்.  பிரித்த விதைகளை காற்றில் தூற்றி இரண்டு நாள்  நன்கு காயப்போடவேண்டும். 
           
  காய்ந்தவுடன்  விதைகளில் காணப்படும் உடைந்த, சுருங்கிய மற்றும் நோய் தாக்கிய விதைகளை நீக்கி,  திரட்சியான விதைகளை விதை உருவாக்கம் செய்ய வேண்டும். 
      விதை உருவாக்கம் 
           
  திரட்சியான  விதைகளைப் பெற, விதைகளை இரகத்திற்கு ஏற்றவாறு நன்கு காய்ந்த விதைகளை (10 சதம் விதை  ஈரப்பதம்) 4.6 மி.மீ. (பெரிய விதைகள் கொண்ட இரகத்திற்கு) 3.9 மி.மீ. (சிறிய  விதைகள் கொண்ட இரகத்திற்கு) அகல வட்டக்கண் சல்லடை கொண்டு உருவாக்கம் செய்வது  அவசியம்.  
      விதைச் சேமிப்பு 
           
  விதை  உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த  விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது. 
      விதையின் ஈரப்பதம் 
           
  விதையின்  ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது.  விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள்  முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன.   குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 9 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து  துணிப்பைகளிலோ அல்லது சாக்குப் பைகளிலோ சேமியுங்கள்.  நீண்ட காலம் விதைகளை சேமிக்க, விதைகளின் ஈரப்  பதத்தை 8 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து  வைக்கலாம். 
      விதை நேர்த்தி 
           
  விதைகளை  சேமிப்பதற்கு முன் பூசணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யுங்கள்.  இதற்கு திரம் அல்லது கேப்படான் மருந்தை ஒரு  கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வையுங்கள். 
      விதை சேமிப்புப் பைகள் 
      விதைகள்  காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை.   ஆகையால் காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி  கரைகளில்  விதைகளை சேமித்திட ஈரக்காற்று  புகா பைகளையே உபயோகிக்க வேண்டும்.  700  அடர்வுள்ள பாலிதீன் பைகளே காற்று புகாத பைகள்.   எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள். 
           
  விதைகளை,  கிடங்குகளில் சேமித்து வைக்கும் பொழுது முன்னெச்சரிக்கையாக இருங்கள்.  சாக்குப் பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக  வைக்கும்பொழுது 6 அல்லது 7 வரிசைக்கு மேல் அடுக்க வேண்டாம்.  ஏனென்றால், மேலே உள்ள மூட்டைகளின் பாரம்  அடியிலுள்ள மூட்டைகளைப் போட்டு அழுத்துவதால் அடி மூட்டையில் உள்ள விதைகளின்  முளைப்புத் திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளது. 
           
  விதை  மூட்டைகளை வெறும் தரையின் மீது அடுக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.  அதேபோல் சுவற்றின் மீது சாய்த்து  அடுக்குதலையும் தவிர்க்க வேண்டும்.  இதனால்  தரை மற்றும் சுவற்றில் உள்ள ஈரப்பதம் விதைகளின் ஊடுருவி அவற்றை பாதிப்பதைத்  தடுக்கலாம்.  விதை மூட்டைகளை  மரக்கட்டைகளின் மீது அல்லது தார்பாய்களின் மீது அடுக்க வேண்டும்.  
      விதைச் சேமிப்புக் கிடங்கு  பராமரிப்பு 
           
  சேமிப்புக்  கிடங்கை பூச்சிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.  விதை சேமிப்புக் காலத்தில் விதைகளை பூச்சிகள்  தாக்கினால் புகை மூட்டம் போடாலாம்.   காற்று புகாமல் விதைக் கிடங்கை நன்கு அடைத்து விட்டு, செல்பாஸ் (அலுமினியம்  பாஸ்பைடு) நச்சு மாத்திரைகளை ஒரு கன மீட்டருக்கு ஒரு மாத்திரை என்ற அளவில் விதை  கிடங்கினுள்ளே 3 நாட்கள் வைக்க வேண்டும்.   மூன்று நாட்களுக்குப் பின்னர் நச்சுக்காற்றை வெளியேற்ற நல்ல காற்றோட்டம்  இருக்கும்படி விதைக்கிடங்கை திறந்து வையுங்கள்.   இவ்வாறு செய்வதால் விதைகள் பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாக்கப்படும். 
      விதைச் சேமிப்பு 
           
  விதைகளை  நன்கு சேமிக்க, அவற்றை 7-8 சத ஈரப்பதம் வரை காய வைத்து பின்னர் கிலோவுக்கு 2  கிராம் காப்டான் பூசணக் கொல்லி மருந்துடன் விதை நேர்த்தி செய்து சேமிக்க  வேண்டும். 
      பயறுவிதை மற்றும் தானிய  சேமிப்பு முறை 
           
  விவசாயிகள்  பயறு விதைகளை தானியத்திற்காகவும், விதைக்காகவும் சேமிப்பதுண்டு.  அவ்வாறு செய்யும் போது, விதைகளுக்கு  பூசணக்கொல்லி மருந்து கலந்து கொண்டு சேமித்தால் அவற்றை தானியத்திற்காக  பயன்படுத்த முடியாது.  மருந்து கலந்து  சேமிக்காவிடில் விதைகள் பயறு வண்டுகளினால் பாதிப்புக்குள்ளாகும்.  எனவே, விதைகளை தானியத்திற்காகவும்,  விதைக்காகவும் சேமிக்க வேண்டும் என்றால் அவற்றை ஊக்குவிக்கப்பட்ட களிமண் கொண்டு  விதை நேர்த்தி செய்வது நல்லது. 
           
  நூறு  கிலோ விதையுடன் ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்ற அளவில் கலந்து  சேமிக்கலாம்.  இதனால் பயறு வண்டு சேதாரம்  இருக்காது.  விதைகளை விதைக்கும் போது ஒரு  கிலோ விதையுடன் இரண்டு கிராம் காப்டான் அல்லது திரம் கொண்டு விதைநேர்த்தி செய்து  விதைக்க வேண்டும்.  விதைகள் விதைப்புக்குத்  தேவைப்படாத போது ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணை நன்கு கழுவி சுத்தம் செய்து  தானியமாகப் பயன் படுத்தலாம். 
      விதைச் சான்றளிப்பு 
           
  தரமான  விதைகள் என்பது தன்னுடை இனத்தூய்மையில் சிறிதும் குன்றாமலும். களைவிதை, பிற இரக  விதை, நோய்தாக்கிய விதை ஆகியவை இல்லாமலும் இருக்கும்.  மேலும் தரமான விதை அதிக வீரியத்துடனும்,  முளைப்புத் தன்மையும் கொண்டிருக்கும்.   இதனால் விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது வயல்களில் அதிக  இடைவெளி இல்லாமல் சரியான செடிகளின் எண்ணிக்கை பராமரிக்க முடியும்.  அதிக வீரியத்துடன் வளர்வதால் நோய் மற்றும்  பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்டிருக்கும்.   எனவே விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது முட்டுவழி செலவுகளை  குறைக்க முடியும். 
      விதை  உற்பத்தி தரக்கட்டுபாட்டுக்கென்று   சட்டபூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே விதைச் சான்றளிப்பாகும்.  இதைத்தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன்,  என்று கூட சொல்லலாம்.  மிக உன்னதமான பயிர்  இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக சுத்தத்தன்மையும், மிகந்த  முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்கு கிடைக்கக் செய்வதே விதைச்  சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும். 
      விதைச்  சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது.   விதைப்புக்கு உபயோகிக்கும் விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து  வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப் பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம்,  பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் தருணம், அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு,  மூட்டை பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பது வரை ஆய்வு செய்யபபடுகிறது.  மேலும் விதைகளை முளைப்புச் சோதனைக்கு  உட்படுத்தி சோதனை முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன.  இவ்விதமாக விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில்  ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 
      ஆய்வின்  போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால்  மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்கத்  தயாராகின்றன. 
      எனவே,  விதை உற்பத்திக்கான வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம்  இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய  முடியும்.   
  சான்றுவிதை  உற்பத்தி செய்யும்போது உற்பத்தி செய்த விதைகளில் கீழ்க்கண்ட விதைத்தரம் இருத்தல்  அவசியம். 
      வயல் தரம் 
      
        
            
               
                கலவன்கள் (அதிக பட்சம்)  | 
              0.2  சதம்   | 
             
               
       
      விதைத்  தரம் 
      
        
            
               
                சுத்தமான விதைகள் (குறைந்த பட்சம்)  | 
              98 சதம்  | 
             
            
              தூசி (அதிக பட்சம்)  | 
              2 சதம்  | 
             
            
              பிற இனப்பயிர் விதைகள் (அதிக பட்சம்)  | 
              0.01 சதம்  | 
             
            
              களை விதைகள் (அதிக பட்சம்)  | 
              0.01 சதம்  | 
             
            
              முளைப்புத்திறன் (குறைந்த பட்சம்)  | 
              75 சதம்  | 
             
            
              ஈரத்தன்மை (அதிக பட்சம்)  | 
                 | 
             
            
              காற்றுப்புகாத பை  | 
              8.0 சதம்  | 
             
            
              காற்றுப்புகும் பை  | 
              9.0 சதம்  | 
             
               
       
        
      கலவன்  அகற்றும் பொழுது கருத்தில் கொள்ள வேண்டிய சில துவரை இரகங்களின் குணாதிசயங்கள் 
          (கீ்ழ்கண்ட  குணங்களில் மாற்றம் கொண்ட செடிகளை அகற்றவேண்டும்)      
      
        
            
              | குணாதிசயங்கள்   | 
              பூசா    - 152  | 
              கோ.4  | 
              கோ.6  | 
              பையூர்.1  | 
             
            
              பெற்றோர்  | 
              ஈரான் இரகத்திலிருந்து தேர்வு  | 
              ருஷ்ய இரகத்திலிருந்து தேர்வு  | 
              எம்.எஸ்.980Xசி.152  | 
              வி.எம்.16 இரகத்திலிருந்து தேர்வு  | 
             
            
              50 சதம் பூக்கும் நாள்   | 
              45-50  | 
              40-45  | 
              35  | 
              75  | 
             
            
              வயது (நாள்)  | 
              90-95  | 
              85  | 
              65-70  | 
              90  | 
             
            
              செடியின் உயரம்(செ.மீ)  | 
              60  | 
              50  | 
              35  | 
              60-70  | 
             
            
              தண்டு, கிளைகள் நிறம்  | 
              பச்சை நிறத் தண்டு  | 
              காய்கள் செடிகள் மேல் நீண்டு இருக்கும்  | 
              பச்சைத் தண்டு, 
                காம்புகளில் ஊதா நிறம்  | 
              குத்து இரகம்  | 
             
            
              கிளைகளின் எண்ணிக்கை  | 
              -  | 
              3-4  | 
              3-4  | 
              -  | 
             
            
              இலைகள்  | 
              பச்சை நிற இலைகள் செடி முதிரும்போது இலைகள்    காய்வதில்லை  | 
              பச்சை நிறக் காம்பு. காம்புக்கு மூன்று இலைகள்  | 
              மூன்று இலைகள் பச்சை நிறம்.  | 
              கரும்பச்சை நிற இலைகள், வெள்ளை முக்கோணம்    காணப்படும்  | 
             
            
              பச்சைக் காய்களின் நிறம்  | 
              பச்சை   | 
              பச்சை    | 
              இளம்பச்சை  | 
              பச்சை    | 
             
            
              முதிர்ந்த காய்களின் நிறம்  | 
              பழுப்பு  | 
              வெள்ளை   | 
              பழுப்பு  | 
              பழுப்பு   | 
             
            
              விதைகளின் நிறம்   | 
              மங்கிய வெள்ளை   | 
              கருப்பு  | 
              மங்கிய வெள்ளை  | 
              செங்கல் சிவப்பு   | 
             
            
              நூறு விதைகளின் எடை (கிராம்)  | 
              10.0  | 
              11.5  | 
              9.9  | 
              9.9  | 
             
            
              விதை மகசூல் (கிலோ/எ)  | 
              900  | 
              961  | 
              671  | 
              900  | 
             
               
       
                       |