உளுந்தில் தரமான விதை உற்பத்தி  முறைகள் 
      நிலம்  தேர்ந்தெடுத்தல் 
          
  உளுந்து விதைப்  பயிருக்காக தேர்ந்தெடுத்த நிலத்தில் அதற்கு முந்திய பயிர் சான்று பெறாத அதே  உளுந்து இரகமாக இருக்கக்கூடாது. ஏனெனில், நிலத்தில் தங்கியுள்ள விதைகள்  இப்பருவத்தின்போது முளைத்து கலவன்களாகத் தோன்றும் வாய்ப்பு உள்ளது. இதனால்  விதைச்சான்று பெற இயலாது. மேலும் வாடல் மற்றும் வேர் அழுகல் நோய் தோன்றாத  நிலமாய் இருத்தல் அவசியம். நல்ல வடிகாலுள்ள செம்மண் மற்றும் வண்டல் மண் திரட்சியான  விதைகளைத் தரும். 
      இனத்  தூய்மையை பராமரிக்க பயிர் விலகு தூரம் 
          
  உளுந்து பயிர் தன்  மகரந்தச் சேர்க்கை கொண்டிருந்தாலும், தேனீக்கள் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கை  நடக்க வாய்ப்புள்ளது. எனவே, இனக் கலப்பை தடுக்க உளுந்து பயிரை, சான்று பெறாத அதே  இரகமோ அல்லது வேறு இரகத்திலிருந்தோ விலக்கி வைத்திருக்க வேண்டும். இதற்கு  குறைந்தது 5 மீ. (15 அடி) இடைவெளி விதைப் பயிருக்கும் மற்ற உளுந்து பயிருக்கும்  இடையே இருத்தல் அவசியம். 
          
  இனக்கலப்பை தடுக்க 5  அல்லது 6 வரிசை விதை பயிர் இரகத்தை எல்லைப் பயிராக விதைக்க வேண்டும். 
      விதைப்  பயிர் செய்ய ஏற்ற பருவம் 
                 
  விதைகள் முதிரும் போது  அதிக மழையோ, வெயிலோ குளிரோ இல்லாத பருவமாக அமைந்திருத்தல் அவசியம். இதற்கு ஆடி  மற்றும் மாசிப் பட்டம் மிகவும் ஏற்றது. 
      நிலம்  தயாரித்தல் 
          
  நிலத்தை மூன்று, நான்கு  முறை நன்கு உழவேண்டும். இதனால் மண் நன்கு பக்குவம் அடையும். நிலத்தை 30 செ.மீ. (1  அடி) அகலப் பார்களாக அமைத்து விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். 
      உரமும்  உரமிடுதலும் 
          
  ஏக்கருக்கு 10 வண்டி  தொழு உரம் இட வேண்டும். பின்னர் ஒரு ஏக்கருக்கு யூரியா 20 கிலோவும், சூப்பர்  பாஸ்பேட் 60 கிலோவும் அடியுரமாக பார்களின் பக்கவாட்டில் இடவேண்டும். 
      விதை  தேர்ந்தெடுத்தலின் அவசியம் 
          
  விதைப் பயிர் உற்பத்திக்கு  சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், சான்று விதைகள் இரகத்தின்  மரபுத் தன்மைகளுடன் அதிக முளைப்புத் திறனும், வீரியத் தன்மையும் கொண்டிருப்பதால்  அவை விரைவாக முளைத்து வீரியமுள்ள நாற்றுக்களை கொடுக்கும். இதனால் பயிர் எண்ணிக்கை  அதிகரித்து, அதிக மகசூலுக்கு வழிவகுக்கும். 
      விதை  அளவு 
                 
  இரகத்திற்கு ஏற்றவாறு  விதை அளவு 8 கிலோ வரை தேவைப்படும். 
      விதையும்  விதை நேர்த்தியும் 
          
  விதைப்புக்கு முன் விதைகளில் காணப்படும் வெளிறிய மற்றும்  சிறுத்த திரட்சியற்ற விதைகளை நீக்கி விட வேண்டும். கருத்த கரும்பச்சை நிறம் பெற்ற  விதைகளை பயன்படுத்துவதன்  மூலம் வீரியமான  செடிகளைப் பெறலாம். 
      கடின  விதைகள் 
          
  பயறு விதைகளை விதைத்து, அவை முளைக்கும்போது சில விதைகள் கல்  போன்று கடினமாக இருக்கும். இவைகளை கடின விதைகள் என்கிறோம். இவ்விதைகள் நீரில்  ஊறவைக்கும் போது நீர் உறிஞ்சாமல் கல் போன்று காணப்படும்.  
          
  விதை உற்பத்தியின்போது பயிருக்கு போதுமான தண்ணீர்  கிடைக்காதது, அதிக வெப்பம் போன்ற காரணங்களால் கடின விதைகள் உருவாகின்றன.  சேமிப்பின்போது பொதுவாக, கடினத்தன்மை நீங்கிவிடும். எனினும் கடினவிதை  காணப்பட்டால் அவற்றை நீக்கிவிட வேண்டும். 
          
  கடின விதையை அறிய, விதைகளை நீரில் ஊறப்போட வேண்டும். ஒரு மணி  நேரம் ஊறிய பின்பும், சில விதைகள் நீரை உறிஞ்சாது அப்படியே காணப்படும். அவ்வாறு  நீர் உறிஞ்சாத விதைகள் கடின விதைகளாகும். அவற்றை நீக்கிவிட்டு மற்ற விதைகளை  விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் விதைகள் வயலில் ஒரே சீராக  முளைக்கும். 
      கடின  விதையை கட்டுப்படுத்துதல் 
                 
  பத்து சதவீதத்திற்கும் மிகுந்து கடின விதைகள் காணப்பட்டால்,  அந்த விதைகள் விதைப்பதற்கு ஏற்றதல்ல, இரண்டு அல்லது மூன்று மாதம் கழித்து  விதைக்கும் போது, விதைக் கடினத்தன்மை நீங்கிவிடும். உடனே விதைக்க வேண்டும்  என்றால், விதையின் கடினத்தன்மை நீக்க அமிலச் சிகிச்சை செய்ய வேண்டும். 
          
  பூஞ்சாணத் தொற்றினால் நிறம் மாறிய விதைகள் அதிக நீரை  உறிஞ்சும் தன்மை வாய்ந்தவை. இவ்வாறு அதிக நீரை உறிஞ்சி உப்பிய விதைகளை ஒரு மணி  நேரம் ஊறவைத்தலின் போதே கண்டு களைந்து விடலாம். இவ்வகை விதைகள் வாடல் நோய்  மற்றும் வேர் அழுகல் போன்றவற்றை உண்டாக்கக்கூடியவை. இவைகளை உடனடியாக நீக்கி விட  வேண்டும். 
   
      அமிலச் சிகிச்சை என்றால் என்ன? 
          
  விதையின் கடினத் தன்மைக்கு காரணமே விதை உறை கடினமாக  இருப்பதுதான். அமிலம் கொண்டு விதை நேர்த்தி செய்யும் போது, விதையுறை மென்மை  அடைகிறது. இதனால் நீர் எளிதில் உட் சென்று கடினத் தன்மை நீங்க வழிகோல்கிறது. 
          
  அமிலச் சிகிச்சை செய்ய 10 சத வியாபார ரீதியான கந்தக அமிலம்  தேவைப்படுகிறது. ஒரு கிலோ விதைக்கு 100 மி.லி. என்ற அளவில் கந்தக அமிலம் கலந்து,  இரண்டு நிமிடம் வைத்திருந்து பின்னர் நீரில் மூன்று முறை கழுவ வேண்டும். விதைகளின்  மேல் படர்ந்துள்ள அமிலம் இதனால் நீங்கிவிடும். பின்னர் நிழலில் நான்கு மணி நேரம்  உலர்த்தி விதைக்கலாம். 
      நுண்ணூட்ட  விதை நேர்த்தி 
          
  விதைகளை கடினப்படுத்துவதால், அவைகள் வயலில் விரைவாக  முளைப்பதோடு மட்டுமின்றி, வறட்சியை தாங்கி வளரும் தன்மையும் பெருகின்றன. மேலும்  விதைகளை பல்வேறு இரசாயனப் பொருட்கள் கலந்துள்ள நீரில் கடினப்படுத்துவதால்,  விதைப்பயிருக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்க ஏதுவாகிறது. எனவே செடிகள் செழித்து  வளர்ந்து அதிக மகசூல் கிடைக்க வழிசெய்கிறது. 
          
  ஒரு ஏக்கர் விதைப்புக்கு தேவையான விதைகளை (8 கிலோ) கீழ்க்கண்ட  இராசயன பொருட்கள் கலந்துள்ள நான்கு லிட்டர் நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து  பின்னர் அவற்றை ஆறு மணி நேரம் நிழலில் நன்கு உலர்த்த வேண்டும். 
      
        
            
              வ.எண்  | 
              இரசாயனப்    பொருள்   | 
              நான்கு    லிட்டர் நீரில் சேர்க்க வேண்டிய அளவு (கிராம்)  | 
             
            
              1.  | 
              சக்சினிக் அமிலம்   | 
              8.0  | 
             
            
              2.  | 
              கோபால்ட் நைட்ரேட்  | 
              400.00  | 
             
            
              3.  | 
              அஸ்கார்பிக் அமிலம்  | 
              8.0  | 
             
            
              4.  | 
              சோடியம் மாலிப்டேட்   | 
              40.0  | 
             
            
              5.  | 
              மாங்கனீஸ் சல்ஃபேட்  | 
              40.0  | 
             
            
              6.  | 
              பொட்டாஷியம் சல்ஃபேட்  | 
              40.0  | 
             
            
              7.  | 
              துத்தநாக சல்ஃபேட்  | 
              40.0  | 
             
            
              8.  | 
              பொட்டாஷியம் குளோரைடு  | 
              40.0  | 
             
            
              9.  | 
              இன்டோல்/3 பியுட்ரிக் அமிலம்  | 
              40.0  | 
             
               
       
      பூசணக்கொல்லி  விதை நேர்த்தி 
                 
  கடின விதைகளை நீக்கிவிட்டு விதைப்பதன் மூலம் வயலில் நாம் சீரான  முளைப்புத்திறனை பெறமுடியும். இருப்பினும் விதைகளை நோய் தாக்குதலிலிருந்து  பாதுகாப்பதன் மூலம் கட்டாயமாக முளைப்புத்திறன் ஒரே சீராக இருக்கும். எனவே  விதைக்கும் முன் விதை நேர்த்தி செய்வது அவசியம். 
          
  முளைக்கும் போது மண்ணில் காணப்படும் பூசணத்தின் தாக்குதலினால்  விதை அழுகல் ஏற்பட்டு அவற்றின் முளைப்பு பாதிக்கப்படும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு  கிலோ விதைக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் காப்டான் அல்லது திராம் என்ற பூசணக்  கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும். 
      ரைசோபிய  நுண்ணுயிரினை பயன்படுத்துவது எப்படி? 
                 
  பயறு வகைப் பயிர்களின் வேர்களில் வேர் முடிச்சுகள் காணப்படும்.  இந்த வேர் முடிச்சுகளில் ரைசசோபியம் என்ற நுண்ணுயிர் இருக்கின்றன. இவை காற்றில்  உள்ள தழைச்சத்தை கிரகித்து பயறுவகைச் செடிகளுக்கு அளிக்கின்றன. இதனால் செடிகள்  நன்கு வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கின்றன. 
          
  இதற்கு உளுந்து பயிருக்கு பரிந்துரைக்கப்படும் ரைசோபிய  நுண்ணுயிரை உபயோகித்தால் நல்ல பயன் அடையலாம். இரண்டு பொட்டலங்கள் நுண்ணுயிர்  கலவையை 500 மில்லி ஆற வைத்த கஞ்சியுடன் கலந்து பின்னர் 8 கிலோ விதையுடன் நன்கு  கலக்க வேண்டும். இவ்வாறு கலந்த விதையை 3 - 4 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்  (வரைபடம் 2). 
       
                                        உங்கள் கவனத்திற்கு 
                        நுண்ணுயிர் பொட்டலம் ஒரு மாதத்திற்குள்      தயாரிக்கப்ட்டிருக்க வேண்டும்.                 பழைய பொட்டலத்தில் போதிய நுண்ணுயிர்      இருக்காது. எனவே, வாங்கும்                போது புதிய பொட்டலத்தையே வாங்குங்கள்.  
       
               
  பூசணக்கொல்லி விதை நேர்த்தி செய்திருந்தால், பூசணக் கொல்லி  மருந்து கலந்து 24 மணிநேரம் கழித்து ரைசோபிய விதை நேர்த்தி செய்ய வேண்டும்.  இல்லாவிடில் மருந்தினால், ரைசோபிய நுண்ணுயிர் பாதிப்புக்குள்ளாகும்.
  
        
       
        
   
விதைப்பு 
           
விதைகளை இரகத்திற்கு ஏற்றவாறு இடைவெளி விட்டு, 2 செ.மீ  ஆழத்தில் விதைக்க வேண்டும். செடிக்குச் செடி இடைவெளி 10 செ.மீ (நான்கு விரல்  இடைவெளி) இருக்க வேண்டும்.  
நீர்  நிர்வாகம் 
           
  விதைத்தவுடன் ஒரு நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மூன்றாம்  நாள் முளைப்பு நீர் அவசியம். அதன் பின்பு 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர்  பாய்ச்ச வேண்டும். பூப்பு மற்றும் காய்ப்பிடிப்பு சமயங்களில் நீர் பாய்ச்சுதல்  மிகவும் அவசியம். காய்ப்பிடிப்பின் போது நீர் சரிவர பாய்ச்சாவிட்டால் கடின  விதைகள் தோன்றுவதற்கு ஏதுவாகிறது. 
இலைவழி  உரம் 
          
  அடியுரம் மட்டுமே போதாது என்பது விதைப்பயிருக்கு முற்றிலும்  உண்மை. எனவே உளுந்துக்கு இலைவழி உரம் அளித்தல் அவசியம். இதற்கு நாம் பல  இரசாயனங்களை கொண்டு தெளிக்க வேண்டும். 
          
  கீழே கொடுக்கப்பட்டுள்ள உரம்/இரசாயணங்களை நூறு லிட்டர் நீரில்  கரைத்து விதைத்த 25 – 35 ஆம் நாளும் பின்னர் காய்ப்பிடிப்பின் போதும் (40 - 50  ஆம் நாளும்) தெளிக்க வேண்டும். 
  
    
      வ.எண்   | 
        உரம்    / இரசாயணம்   | 
        அளவு    (நூறு லிட்டர் நீரில் கரைக்க வேண்டிய அளவு)  | 
       
    
      1.  | 
        யூரியா   | 
        4 கிலோ  | 
       
    
      2.  | 
        டி.ஏ.பி.  | 
        1000 கிராம்  | 
       
    
      3.  | 
        முரியேட் ஆப் பொட்டாஷ்   | 
        600 கிராம்  | 
       
    
      4.  | 
        பொட்டாஷியம் சல்பேஃட்  | 
        20 மில்லி   | 
       
    
      5.  | 
        டீபால்   | 
        40 மில்லி   | 
       
    
      6.  | 
        சக்சினிக் அமிலம்   | 
        20 கிராம்  | 
       
   
 
களை நிர்வாகம் 
           
  உளுந்து விதைப்பயிரில்  களைகளை நீக்குவதால் உளுந்து செடிகள் வேகமாக வளர்ந்து விளைச்சலுக்கு உதவும். விதைத்த  மூன்று நாட்களுக்குள் ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி பாசலின் களைக்கொல்லியை கலந்து தெளிக்க  வேண்டும். பின்னர் 15 நாள் கழித்து ஒரு கைக் களை எடுக்க வேண்டும். 
பயிர் பாதுகாப்பின் அவசியம் 
பூச்சிகள் 
          
  உளுந்து பயிரில் தண்டு  ஈயின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இதனால் செடிகள் காய்ந்துவிடும். இதனைத் தடுக்க  விதைத்த 7 வது நாளும், பின்னர் பத்து நாட்களுக்கு பின்பும் எண்டோசல்பான் மருந்தை ஒரு  லிட்டர் நீரில் 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். விதைப்பயிர் வளர்ச்சி  பருவத்தின் போது காணப்படும் முக்கிய பூச்சிகளான அசுவுணி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ  ஆகியவற்றைக் கட்டுப்படுத்த மிதைல் டெமட்டான் அல்லது டைமித்தோயேட் அல்லது பாஸ்போமிடான்  போன்ற மருந்துகளில் ஏதாவது ஒன்றை லிட்டருக்கு 2 மில்லி கலந்து தெளிக்கவும். 
நோய்கள் 
  வளர்ச்சிப் பருவங்களின்  போது காணப்படும் தேமல் நோய் பாதித்த செடிகளை அவ்வப்போது நீக்க வேண்டும். வேர் அழுகல்,  மற்றும் வாடல் நோய் கொண்ட செடிகளை நீக்குவதுடன், பிடுங்கிய இடத்தில் 0.1 சதம் பெவிஸ்டின்  கரைசல் ஊற்ற வேண்டும். இதனால் வேர் அழுகல் நோய் மற்றும் வாடல் நோய் மேலும் பரவாமல்  தடுக்கலாம். 
பெவிஸ்டின் கரைசலைத் தயாரிப்பது எப்படி? 
          
  பத்து கிராம் பெவிஸ்டின்  மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து பெவிஸ்டின் 0.1 சத கரைசலைத் தயாரிக்கலாம். 
          
  இலைகளின் மீது பழுப்பு  நிறம் கொண்ட புள்ளிகள் காணப்பட்டால் அது சேர்க்கொஸ்போரா இலைப்புள்ளி நோயாகும்.  பயிர் இலைகள் நனையுமாறு ஒரு லிட்டர் நீரில் ஒரு கிராம் பெவிஸ்டின் கலந்து தெளித்தல்  வேண்டும். 
          
  மேற் சாம்பல் நோய் தென்படும்போது  ஒரு லிட்டர் நீரில் 10 கிராம் என்ற அளவில் நனையும் கந்தகத்தூள் கலந்து தெளிக்கலாம். 
கலவன் அகற்றுதல் 
பிற இரக விதைப்பயிரில்  கலந்து விடுவதை கலவன் என்கிறோம். கலவன்கள் விதைப்பயிரின் இனத்தூய்மையை பாதிக்கின்றன.  மேலும், சிலவகைக் கலவன்களினால் பூச்சி மற்றும் நோய் பரவும் வாய்ப்புகளும் உண்டு. 
உளுந்து விதைப் பயிரில்  கலவன்களை கீழ் காணும் பருவங்களில் கண்டிப்பாக நீக்குதல் அவசியம். 
  
    - பூக்கும் பருவத்திற்கு முன்னர்
 
    - பூப்பின்  போது
 
    - காய்ப்பிடிப்பின்  போது
 
    - அறுவடைக்கு  முன்னர்
 
   
 
முளைத்த 25 நாட்களில் கலவன்களைக் கண்டு அறிந்து அகற்றிவிட வேண்டும்  (அட்டவணையில் காண்க). இதற்கு பயிர் செய்யப்பட்ட இரகத்தின் இயல்புகளை கொண்டிராத செடிகளையும்,  கொடி ஒடிய செடிகளையும், வேறு பயிர் செடிகளையும் நீக்கிவிடுவதால் விதைப் பயிரில் இனத்தூய்மையைக்  காக்கலாம். அதே போன்று வேர் அழுகல் நோய், மஞ்சள் தேமல் நோய் கொண்ட செடிகளையும்  நீக்க வேண்டும். 
        
பூப்பின் போது மலர்கள் நிறம் கொண்டு கலவன்களை அகற்ற வேண்டும். காய்ப்பிடிப்பின்  போது காய்களின் நீளம், நிறம், காய் மீது உள்ள முடி ஆகியவற்றைக் கொண்டும் கலவன் அகற்றலாம்.  அறுவடைக்கு முன்னர் விதைகளின் நிறம் மற்றும் உருவம் கொண்டு கலவன் அகற்ற வேண்டும். 
அறுவடை மற்றும் கதிரடித்தல் 
          
  விதைத்த 55 - 65 நாட்களில் காய்கள் அறுவடைக்கு தயாராகின்றன. இது சுமார்  50 சத பூப்பிலிருந்து 30 நாட்களாகும். அறுவடையின் அறிகுறி காய்கள் பழுப்பு நிறமடைவதாகும்.  செடிகளில் 70 சத காய்கள் கருமை நிறம் அடைந்தவுடன், செடிகளை வெட்டி களத்தில் போடலாம்.  தாமதித்தால் காய்கள் வெடித்து விதை சிதறிவிடும். 
          
  அறுவடைக்கு முன்னர், பயறுவண்டுகளின் சேதத்தைக் தடுக்க எண்டோசல்பான்  மருந்தை லிட்டருக்கு இரண்டு மில்லி என்ற அளவில் கலந்து காய்களின் மீது நன்கு படுமாறு  தெளிக்க வேண்டும். 
          
  அறுவடை செய்த காய்களின் ஈரப்பதம் சுமார் 17 - 18 சதம் இருக்கும். செடிகளை  களத்தில் காயப்போட வேண்டும். இல்லாவிடில், வெயிலினால் காய்கள் வெடிக்கும்போது, விதைகள்  ஒரு குவியலிலிருந்து இன்னொரு குவியலுக்கு சென்றுவிடும். இதனால் இனக்கலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 
          
  காய்ந்த செடிகள் கறுப்பு நிறமடையும், விதைகளைப் பிரிக்க குச்சி கொண்டு  அடித்து நீக்கலாம்.  அடித்தபின் காற்றில் தூற்றி  விதைகளைப் பிரிக்கலாம். பிரித்த விதைகளை நிழலில் காயவைக்க வேண்டும். இதனால் விதையின்  ஈரப்பதம் 10 சதம் வரை குறையும். இவ்வாறு காய்ந்த விதைகளையே விதைச்சுத்திகரிப்பு செய்ய  பயன்படுத்த வேண்டும். 
விதை உருவாக்கம் 
           
  திறட்சியான விதைகளைப் பெற, விதைகளை இரகத்திற்கு ஏற்றவாறு 2.36 மி.மீ  வட்டக்கண் சல்லடை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சுத்திகரிப்பு செய்யப்பட்ட விதைகளில்  காணப்படும் பூசணத்தாக்கு கொண்ட விதைகள், உடைந்த தோலுரிந்த விதைகள் ஆகியவற்றை நீக்கி  நல்ல தரமான விதைகளையே சேமிப்புக்குப் பயன்படுத்த வேண்டும்.   
விதை சேமிப்பு 
           
  விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை  அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது. 
விதையின் ஈரப்பதம் 
           
  விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது. விதையின்  ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த  கால சேமிப்புக்கு விதைகளை 9 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளிலோ அல்லது சாக்குப்  பைகளிலோ சேமியுங்கள். நீண்ட காலம் விதைகளை சேமிக்க, விதைகளின் ஈரப் பதத்தை 8 சத அளவிற்குக்  குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து வைக்கலாம். 
விதை நேர்த்தி 
          
  விதைகளை சேமிப்பதற்கு முன் பூசணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யுங்கள்.  இதற்கு திராம் அல்லது கேப்டான் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில்  கலந்து வையுங்கள். 
விதை சேமிப்புப் பைகள் 
           
  விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை என்பது உங்களுக்கு  தெரிந்ததே. ஆகையால் காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி கரைகளில்  விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகா பைகளையே உபயோகிக்க வேண்டும். ஈரக்காற்று புகா பைகள்  எவை? 700 அடர்வுள்ள பாலிதீன் பைகளே காற்று புகாத பைகள். எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள். 
          
  விதைகளை, கிடங்குகளில் சேமித்து வைக்கும் பொழுது முன்னெச்சரிக்கையாக  இருங்கள். சாக்குப் பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கும்பொழுது 6 அல்லது 7 வரிசைக்கு  மேல் அடுக்க வேண்டாம். ஏனென்றால், மேலே உள்ள மூட்டைகளின் பாரம் அடியிலுள்ள மூட்டைகளைப்  போட்டு அழுத்துவதால் அடி மூட்டையில் உள்ள விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்க வாய்ப்பு  உள்ளது. 
          
  விதை மூட்டைகளை வெறும் தரையின் மீது அடுக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.  அதேபோல் சுவற்றின் மீது சாய்த்து அடுக்குதலையும் தவிர்க்க வேண்டும். இதனால் தரை மற்றும்  சுவற்றில் உள்ள ஈரப்பதம் விதைகளில் ஊடுருவி அவற்றை பாதிப்பதைத் தடுக்கலாம். விதை மூட்டைகளை  மரக்கட்டைகளின்மீது அல்லது தார்பாய்களின்மீது அடுக்கி வையுங்கள் (வரைபடம் 3). 
விதை சேமிப்புக் கிடங்கு பராமரிப்பு 
           
  சேமிப்புக் கிடங்கை பூச்சிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.  விதை சேமிப்புக் காலத்தில் விதைகளை பூச்சிகள் தாக்கினால் புகை மூட்டம் போடலாம். காற்று  புகாமல் விதை கிடங்கை நன்கு அடைத்து விட்டு, செல்பாஸ் (அலுமினியம் பாஸ்பைடு) நச்சு  மாத்திரைகளை ஒரு கன மீட்டருக்கு ஒரு மாத்திரை என்ற அளவில் விதை கிடங்கினுள்ளே 3 நாட்கள்  வைத்து விடுங்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர் நச்சுக்காற்றை வெளியேற்ற நல்ல காற்றோட்டம்  இருக்கும்படி விதைக்கிடங்கை திறந்து வையுங்கள். இவ்வாறு செய்வதால் விதைகள் பூச்சி தாக்குதலிலிருந்து  பாதுகாக்கப்படும். 
விதை சேமிப்பு  
          
  விதைகளை நன்கு சேமிக்க, அவற்றை 7 - 8 சத ஈரப்பதம் வரை காய வைத்து பின்னர்  கிலோவுக்கு 2 கிராம் காப்டான் பூசணக் கெரல்லி மருந்துடன் விதை நேர்த்தி செய்து சேமிக்க  வேண்டும். 
பயறுவிதை மற்றும் தானிய சேமிப்பு முறை 
           
  விவசாயிகள் பயறு விதைகளை தானியத்திற்காகவும், விதைக்காகவும் சேமிப்பதுண்டு.  அவ்வாறு செய்யும் போது, விதைகளுக்கு பூசணக்கொல்லி மருந்து கலந்து கொண்டு சேமித்தால்  அவற்றை தானியத்திற்காக பயன்படுத்த முடியாது. மருந்து கலந்து சேமிக்காவிடில் விதைகள்  பயறு வண்டுகளினால் பாதிப்புக்குள்ளாகும். எனவே, விதைகளை தானியத்திற்காகவும், விதைக்காகவும்  சேமிக்க வேண்டும் என்றால் அவற்றை ஊக்குவிக்கப்பட்ட களிமண் கொண்டு விதை நேர்த்தி செய்வது  நல்லது. 
          
  நூறு கிலோ விதையுடன் ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்ற அளவில்  கலந்து சேமிக்கலாம். இதனால் பயறு வண்டு சேதாரம் இருக்காது. விதைகளை விதைக்கும் போது  ஒரு கிலோ விதையுடன் இரண்டு கிராம் காப்டான் அல்லது திரம் கொண்டு விதைநேர்த்தி செய்து  விதைக்க வேண்டும். விதைகள் விதைப்புக்குத் தேவைப்படாத போது ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணை  நன்கு கழுவ சுத்தம் செய்து தானியமாகப் பயன்படுத்தலாம். 
☺ஊக்குவிக்கப்பட்ட  களிமண் என்றால் என்ன? 
          
  ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்பது சாதரணமான வெள்ளை களிமண் ஆகும். இது  ஈரப்பதம் நீக்கப்பட்டு, அமிலத்தினால் கழுவப்பட்டது என்பதால் பூச்சிகளின்  மேல்புரத்தை தாக்கி அழிக்கும். இது மிகவும் குறைந்த விலை கொண்டது மற்றும்  மனிதர்களுக்கு தீங்கற்றது. ஒரு கிலோ விதைக்கு ஒரு   கிராம் ஊக்குவிக்கப்பட்ட களிமண் என்ற அளவில்  நேர்த்தி செய்யவேண்டும். ஊக்குவிக்கப்பட்ட களிமண் சொரசொரப்பான மேல் தோல்  கொண்டதால் பயறு வண்டுகளை வெட்டு விடும். வெட்டு படுவதால் விரைவில் உடலிலுள்ள  நீரினை இழந்து வண்டுகள் இறந்து விடும். 
விதைச் சான்றளிப்பு 
          
  தரமான விதைகள் என்பது தன்னுடைய இனத்தூய்மையில் சிறிதும் குன்றாமலும்,  களைவிதை பிற இரக விதை, நோய்தாக்கிய விதை ஆகியவை இல்லாமலும் இருக்கும். மேலும் தரமான  விதை அதிக வீரியத்துடனும், முளைப்புத் தன்மையும் கொண்டிருக்கும். இதனால் விவசாயிகள்  தரமான விதைகளை பயன்படுத்தும் போது வயல்களில் அதிக இடைவெளி இல்லாமல் சரியான செடிகளின்  எண்ணிக்கை பராமரிக்க முடியும். அதிக வீரித்துடன் வளர்வதால் நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு  தன்மை கொண்டிருக்கும். எனவே, விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்தும் போது முட்டுவழி  செலவுகளை குறைக்க முடியும். 
          
  விதை உற்பத்தி தரக்கட்டுப்பாட்டுக்கென்று சட்டப்பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட  முறையே விதைச் சான்றளிப்பாகும். இதை “தரமான விதை விநியோகிப்பின் பாதுகாவலன்” என்று  கூட சொல்லாம். மிக உன்னதமான பயிர் இரகங்களின் விதைகளை மிகுந்த இனத்தூய்மையும், அதிக  சுத்தத்தன்மையும், மிகுந்த முளைப்புத் திறனும் உள்ள விதைகளாக விவசாயிகளுக்கு கிடைக்கச்  செய்வதே விதைச் சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும். 
          
  விதைச் சான்று பல்வேறு நிலைகளில் செய்யப்படுகின்றது. விதைப்புக்கு உபயோகிக்கும்  விதைகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டுள்ளதா என்பது முதல், விதைப்  பயிருக்கு உரிய தனிமைப்படுத்தும் தூரம், பயிர் வளர்ச்சிப் பருவம் பூக்கும் தருணம்,  அறுவடை சமயம், விதைச் சுத்திகரிப்பு, மூட்டை பிடித்தல் முதலியவை சரியாக உள்ளனவா என்பது  வரை ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், விதைகளை முளைப்புச் சோதனைக்கு உட்படுத்தி சோதனை  முடிவுகளைக் கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவ்விதமாக விதை உற்பத்தியின்  பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 
          
  ஆய்வின் போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட  தரம் இருந்தால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்குத்  தயாராகின்றன. 
         
  எனவே, விதை உற்பத்திக்கான வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன்  மூலம் இனக்கலப்பற்ற, சுத்தத்தன்மை உடைய நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும். சான்றுவிதை உற்பத்தி செய்யும்போது உற்பத்தி  செய்த விதைகளில் கீழ்க்கண்ட விதைத்தரம் இருத்தல் அவசியம் 
வயல் தரம் 
  
    
      கலவன்கள் (அதிக பட்சம்)  | 
        
          -  
 
          | 
        0.2 சதம்  | 
       
   
 
விதைத் தரம் 
  
    
      சுத்தமான விதைகள் (குறைந்த பட்சம்)  | 
        
          -  
 
          | 
        98 சதம்  | 
       
    
      தூசி (அதிக பட்சம்)  | 
        
          -  
 
          | 
        2 சதம்  | 
       
    
      பிற இனப்பயிர் விதைகள் (அதிக பட்சம்)  | 
        
          -  
 
          | 
        1 சதம்   | 
       
    
      களை விதைகள் (அதிக பட்சம்)  | 
        
          -  
 
          | 
        1 சதம்  | 
       
    
      முளைப்புத் திறன் ( குறைந்த பட்சம்)  | 
        
          -  
 
          | 
        75 சதம்  | 
       
    
      ஈரத்தன்மை (அதிக பட்சம்)  | 
        
          -  
 
          | 
           | 
       
    
      காற்றுப்புகாத பை   | 
        
          -  
 
          | 
        8.0 சதம்  | 
       
    
      காற்றுப்புகும் பை   | 
        
          -  
 
          | 
        9.0 சதம்  | 
       
   
 
அட்டவணை 
    கலவன் அகற்றும் பொழுது கருத்தில் கொள்ள வேண்டிய சில  துவரை இரகங்களின் குணாதிசயங்கள் 
    (கீ்ழ்கண்ட குணங்களில் மாற்றம் கொண்ட செடிகளை  அகற்றவேண்டும்)    
        
  
    
      
         
              குணாதிசயங்கள்  | 
          கோ.4  | 
          கோ.5  | 
          கே.எம்.2  | 
          வம்பன் - 1  | 
          டி. 9   | 
         
      
        பெற்றோர்   | 
          கோ.1 இரகத்திலிருந்து சடுதி மாற்றம்  | 
          முசிறி இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு  | 
          டி.9.Xஎல்.64 
            கலப்பிலிருந்து தேர்வு  | 
          கே.எம்.1X எச். 76 -1  | 
          தனிவழித் தேர்வு   | 
         
      
        50 சதம் பூக்கும் நாள்  | 
          35  | 
          35 - 40  | 
          30 - 35  | 
          30 - 35  | 
          30 - 35  | 
         
      
        வயது (நாள்)   | 
          70  | 
          70 -75  | 
          60 - 65  | 
          60 - 65  | 
          70 -75  | 
         
      
        செடியின் உயரம் 
          (செ.மீ)  | 
          30  | 
          30 - 35   | 
          25 - 35   | 
          30 - 35  | 
          35 - 40  | 
         
      
        குத்துகளில் காய்களின் எண்ணிக்கை   | 
          10 – 12   | 
          10 -12   | 
          10 -12  | 
          12 - 13  | 
          10 - 12  | 
         
      
        காய்களின் மீது ரோமம்   | 
          இல்லை  | 
          இருத்தல்   | 
          இருத்தல்  | 
          இருத்தல்   | 
          இல்லை   | 
         
      
        விதைகளின் நிறம்  | 
          மங்கிய கருப்பு   | 
          மங்கிய கருப்பு  | 
          கருப்புடன் பச்சை புள்ளிகள்  | 
          கருப்பு   | 
          மங்கிய கருப்பு   | 
         
      
        நூறு விதைகளின் எடை (கிராம்)  | 
          5.7  | 
          5.1  | 
          4.0  | 
          4.6  | 
          4.0  | 
         
      
        விதை மகசூல்  
          (கிலோ/ஏ)  | 
          500  | 
          600  | 
          600  | 
          800  | 
          950  | 
         
     
   
 
கலவன் அகற்றும் பொழுது கருத்தில் கொள்ள வேண்டிய சில  துவரை இரகங்களின் குணாதிசயங்கள் 
    (கீ்ழ்கண்ட குணங்களில் மாற்றம் கொண்ட செடிகளை அகற்றவேண்டும்) 
  
    
      
        குணாதிசயங்கள்  | 
          ஏடீடி.2  | 
          ஏடீடி.3  | 
          ஏடீடி.4  | 
          ஏடீடி.5  | 
          விபிஎன்    (பிஜி) 4   | 
          விபிஎன்    (பிஜி) 5   | 
         
      
        பெற்றோர்   | 
          திருநெல்வேலி ஏடீடி.1 கலப்பிலிருந்து தேர்வு  | 
          திருநெல்வேலிX ஏடீடி.1    இரகத்தில் இருந்து தனிவழித் தேர்வு   | 
          டி.9/ ஏடீடி.2 / பண்த்.யு.14 கலப்பிலிருந்து தேர்வு  | 
          கான்பூர் இரகத்திலிருந்து தனிவழித் தேர்வு  | 
          கோ.4  / பிடியு 102  | 
          வம்பன் - 1/ யுகே17  | 
         
      
        50 சதம் பூக்கும் நாள்  | 
          30 - 35  | 
          30 - 35  | 
          30 - 35  | 
          32  | 
             | 
             | 
         
      
        வயது (நாள்)   | 
          70 -75  | 
          70 - 75  | 
          60 - 65  | 
          62  | 
          75-80  | 
          65 – 70  | 
         
      
        செடியின் உயரம் 
          (செ.மீ)  | 
          60  | 
          50  | 
          20 - 25  | 
          20 - 25  | 
           | 
             | 
         
      
        குத்துகளில் காய்களின் எண்ணிக்கை   | 
          25 – 30  | 
          10 - 15  | 
          -----  | 
          13 -15  | 
           | 
             | 
         
      
        காய்களின் மீது ரோமம்   | 
          இருத்தல்  | 
          இருத்தல்   | 
          ------  | 
          இல்லை  | 
           | 
             | 
         
      
        விதைகளின் நிறம்  | 
          மங்கிய கருப்பு  | 
          மங்கிய கருப்பு   | 
          கருப்பு   | 
          கருப்பு   | 
           | 
             | 
         
      
        நூறு விதைகளின் எடை (கிராம்)  | 
          4.7  | 
          3.6  | 
          4.99  | 
          3.6  | 
           | 
             | 
         
      
        விதை மகசூல்  
          (கிலோ/ஏ)  | 
          950  | 
          900  | 
          700  | 
          1300  | 
           | 
             | 
         
     
   
 
  
  
           |