தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் :: கண்வலிக்கிழங்கு
வீடியோ

முன்னுரை

தமிழ்நாட்டில் வணிகரீதியாகப் பயிர் செய்ப்படும் மருந்துச் செடிகளில் கண்வலிக்கிழங்கு எனப்படும் காந்தள் மலர் மருந்துச் செடி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்து பதினைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் குறிப்பாக ஈரோடு, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் 500 எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இவற்றில்  ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மருந்துப் பயிரின் கிழங்குகள்  உழவுக் கலப்பை போன்ற அமைப்பைப் பெற்று இருப்பதால் கலப்பைக் கிழங்கு என்றம் அழைக்கப்படுகிறது. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட இது ஒரு கொடி வகை மருந்துப் பயிர் ஆகும். வேலிகளில் படர்ந்து செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் பூக்கும். இதன் கிழற்குகள் ஒவ்வொன்றும் சுமார் 80 முதல் 100 கிராம் வரை இருக்கும். கோடைக்காலத்தில் கிழங்குகள் ஓய்வுத்தன்மை (Dormancy) பெற்று மழைக்காலத்தில் மட்டுமே கொடிகள் துளிர்த்து பூத்துக் காய்க்கின்றன. காந்தள் மலர் செடிகள் வணிக ரீதியாக காணப்பட்டன. விதைகளுக்கு வெளிநாடுகளில் அதிக அளவுத் தேவை ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

பயன்கள்

கிழங்கு மற்றும் விதைகளில் கோல்ச்சிசின் (Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine) ஆகிய மூலப்பொருட்கள் உள்ளன. இவை பயிர் மேம்பாட்டு ஆராய்ச்சியில் சடுதி மாற்றத்திற்காகப் பயன்படுகின்றன. தவிர, வாதம், மூட்டுவலி, தொழு நோய், ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதை மற்றும் விஷக்கடிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. விதைகளில் அதிக அளவு கோல்ச்சின் மருந்து காணப்படுவதால் விதகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பு பெற்றுள்ளது. விதைகளில் 0.20 சதவீதம் கோல்ச்சின் மருந்துப் பொருள் உள்ளது.

அண்மையில் விதையிலிருந்து ‘கோல்ச்சின்’ மூலப்பொருளைக் காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான ்கோல்ச்சிகோஸைடு’ (Colchicoside) கண்டறியப்பட்டு வருகிறது.

செம்மண், பொறை மண் வகைகள் ஏற்றவை. மண்ணின் அமிலத்தன்மை 6.0 முதல் 0.7 ஆக இருத்தல்வேண்டும். வடிகால்  வசதியுடைய மண் வகைகள் மிகவும் ஏற்றவை. கடினமான மண்வகைகள் சாகுபடிக்கு உகந்தவை இல்லை.

மண் மற்றும்  தட்பவெப்பநிலை

வறட்சியான தட்பவெப்பநிலையில் காந்தள் மலர் அதிகம் பயிரிடப்படுகிறது. காற்றில் ஈரத்தன்மை ஓரளவு  உடைய இடங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. ஆண்டு சராசரி மழையளவு 70 செ.மீ இருந்தால் போதுமானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீட்டர் உயரம் வரையுள்ள மலைக்சரிவுகளிலும் பயிர் செய்யப்படுகிறது.

விதையும் விதைப்பும்

இந்த மருந்துச் செடியைக் கிழங்கு மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யவேண்டும். விதைக்கப் பயன்படுத்தப்படும் கிழங்குகள் ஒவ்வொன்றும் 50 முதல் 60 கிராம் அளவில் இருக்கவேண்டும. சிறிய கிழங்குகள் விதைத்தால் பலவீனமான கொடிகளும் குறைந்த விதை மகசூல் தான் கிடைக்கும். மிகவும் சிறிய கிழங்குகளான முளைப்புத்தன்மை குறைவாகவும் இருக்கும். அத்துடன் கொடிக்ள காய்க்கின்ற தன்மையை இழந்திருக்கும். கிழங்குகளில் மழைக்காலங்கள் தவிர மற்ற மாதங்கள் ஓய்வுக்காலமாக விளங்குகிறது. அதாவது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதங்களில் தான் காந்தள் மலர்க்கிழங்குகள் முளைக்கும்.

விதைக்கிழங்குகள் அளவு

ஒரு எக்டரில் விதைக்க சுமார் 2000 கிலோ சிழங்குகள் தேவைப்படும். கிழங்குகளின் சராசரி அளவு 60 கிராம் எடை உள்ளதாக இருக்கவேண்டும். விதைக்கிழங்குகளை விதைக்கும் முன் 0.1 சத கார்பன்டைசிம் பூசாண மருந்தில் அரை மணி நேரம்  நனைத்தபிறகு விதைக்கலாம். இதனால் கிழங்கு அழுகல் நோய் ஏற்படாமல் தடுக்கலாம். விதைக்கிழங்குகளை சேமிக்குமுன் இதே மருந்துக் கரைசலை தயார் செய்து அவற்றில் கிழங்குகளை அரை மணி நேரமம் நனைத்து நீரை வத்து நன்றாக உலர்த்தவேண்டும். பிறகு கிழங்குகளை மணலில் பதியன் வைத்திருந்து அடுத்த பருவத்தில் விதைக்கலாம். இதனால் பூஞ்சாண வளர்ச்சி கட்டுப்படுத்தலாம்.
விதைக்கும்பருவம்

மழைக்காலத்தின் துவக்கத்தில் அதாவது ஜுன் - ஜுலை மாதங்களில் விதைக்கிழங்குகளை விதைக்கவேண்டும்.

நிலம் தயாரித்தல்

நடுவதற்கு ஏற்ற நிலத்தை இரண்டு முறை உழவேண்டும். எக்டருக்கு 10 டன் தொழு எரு இட்டு மண்ணைப் பண்படுத்தவேண்டும்.

இடைவெளி

இரண்டு அடி இடைவெளியில்  அரை அடி ஆழம் அகலமுள்ள வாய்க்கால் எடுத்து அவற்றின் மண், தொழு எரு மற்றும் மணலை நிரப்பி அவற்றில் கிழங்ககளை 30-45 செ.மீ இடைவெளியில் ஊன்றவேண்டும்.

வேலி அமைத்தல்

பார்களின் பக்கவாட்டின் இருபுறமும் கிளுவை (Commiphora beryii) வேலிக்குச்சிகளை நட்டு காந்தள் மலர்க் கிழங்கின் கொடிகளை அவற்றின் மீது படரவிடலாம். இதற்கு மாற்றாக காய்ந்த விலாரிமார் (Dodonea visvose) செடிகளை நட்டு கொடிகளை அவற்றின் மீது படரச் செய்யலாம். நீண்ட காலம் பராமரிக்க வேண்டுமானால் கம்பி வேலியை அமைத்து கொடிகளைப் படரவிடலாம்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஒரு எக்டருக்கு 120 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 75 கிலோ சாம்பல் சத்து தரவல்ல இராசயன உரங்களை இடவேண்டும. பாதி அளவு தழைச்சத்து உரத்தையும், முழு அளவு மணிச்சத்து  மற்றும் சாம்பல் சத்து ஆகிய உரங்களை அடியுரமாக இட்டு மீதிப்பாதி தழைச்சத்து உரத்தையும் இரண்டு சமபாகமாகப் பிரித்து கிழங்குகளை விதைத்த முதல் மாதத்திலும் இரண்டாவது மாதத்திலும் இடவேண்டும்.

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

பொட்டாஷ்

கண்வலிக்கிழங்கு

120

50

75

193

219

42

நீர் நிர்வாகம்

கிழங்கை விதைத்தவுடனும் பிறகு ஐந்து நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சவேண்டும். பூக்கின்ற சமயத்தில் வாரம் ஒரு முறை பாசனம் கொடுப்பது அவசியம். முதிர்ச்சிப்பெறும் தருணத்தில் பாசனம் அவசியம் இல்லை.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

முளைத்து வரும் கொடிகளின் நுனிப்பகுதி சேதமடையாத வண்ணம் சாகுபடி முறைகளைக் கையாளவேண்டும். நுனிப்பகுதி சேதம் அடைந்துவிட்டால் அந்தப் பருவத்தில் கொடிகளின் வளாச்சிக் குன்றி பூக்காமல் காய்ந்துவிடும். கிளுவை வேலி அமைக்கின்ற தருணத்தில் கிளுவைக்குச்சிகள் காந்தள் மலர்க்கிழங்குப் பகுதியினை சேதமடையாத வண்ணம் நடவேண்டும்.  ஆண்டுக்கு ஒரு முறை அதிகமாக வளர்ச்சி அடைந்த கிளுவை வேலியை வெட்டிவிடவேண்டும்.

மகரந்தச் சேர்க்கை

ஒவ்வொரு கொடியிலும் 75 முதல் 150 பூக்கள் விரிகின்ற சமயம் தன் மகரந்தச்சேர்க்கை மிகவும் குறைவான அளவில் இருப்பதால் காய்களின் உற்பத்தி குறைந்துவிடும். இதற்கு அயல் மகரந்த சேர்க்கை செய்யவேண்டும். பூக்கள் விரிந்து மகரந்தம் வெளிப்படும் சமயத்தில் 10-15 செ.மீ நீளமாக மெல்லிய குச்சிகளை எடுத்து அவற்றின் நுனியில் சிறிது பஞ்சால் தொடும் போது மகரந்தங்கள் பஞ்சின் மீது ஒட்டிக்கொள்ளும். இதனைக் கொடிகளில் உள்ள மற்ற பூக்களின் சூல் பகுதியின் மீது தொட்டு அயல் மகரந்தச்சேர்க்கையும் ஏற்படுத்தலாம். இதற்காகத் தினமும் காலை நேரங்களில் (8 மணி முதல் 11 மணி வரை) இவ்வாறு  அயல் மகரந்தச் சேர்க்கை செய்து அதிக அளவு காய்மகசூலைப் பெறலாம்.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

பச்சைப்புழுக்களும் லில்லிப்புழு என்ற புழு வகையும் இலையைச் சேதப்படுத்துகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த 0.2 சத டைகுளோர்வாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு மில்லி மருந்து என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.

நோய்களில் இலைக்கருகல் நோய் ஏற்படும். இந்நோய் தொடர்மழை மற்றும் பனிக்காலத்தில் அதிகம் ஏற்படும் இலைகள் மேலிருந்து காய்ந்து கருகிவிடும். இதனைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் பூஞ்சாண மருந்தை அக்டோபர் - நவம்பர் மாதத்தில் லிட்டருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்த தெளிக்கவேண்டும். பிறகு 15 நாட்கள் கழித்து மான்கோசெப் + மெட்டலாக்சில் (லிட்டருக்கு 2 கிராம்) மருந்தை தெளிக்கவேண்டும்.

கிழங்கு அழுகல் நோய் மழைக்காலத்தில் ஏற்படும் மண்ணில் வடிகால் வசதி குறைவாக இருக்கும்போது அதிகம் ஏற்படும். இதனால் கொடிகள் நிறம் மாறி வெளுத்து, காய்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த தாமிரப் பூசணக்கொல்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு கிராம் என்ற அளவில் கலந்து தாக்கப்பட்ட கொடிகளினட் கிழங்குகள் நனையுமாறு மண்ணில் ஊற்றவேண்டும். மண்ணில் தண்ணீர் தேங்காத வண்ணம் வடிகால் வசதியை ஏற்படுத்தவேண்டும்.

அறுவடை

கிழங்குகள் முளைத்து 160 முதல் 180 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம். விளைந்த காய்கள் பச்சை நிறத்திலிருந்து இளம் பச்சை அல்லது பழுப்பு நிறமாக மாறி, காய்களின் தோல் சுருங்கிவிடும். இத்தருணத்தில் காய்களைப் பறிக்கவேண்டும். காய்களை 10 முதல் 15 நாட்களுக்கு நிழலில் உலர்த்தவேண்டும். ஒவ்வொரு காயிலும் 70 முதல் 100 விதைகள் இருக்கும்இ காய்கள் மஞ்சள் கலந்து சிவப்பு நிறத்தில் மாறும் போது விதைகளைக் காய்களிலிருந்து பிரித்து எடுக்கலாம். விதைகளைத் தரையில் பரப்பில் பத்து முதல் பதினைந்து நாட்களுக்கு உலர்த்தி விற்பனைக்கு அனுப்பலாம். உலர்த்தப்ட்ட விதைகளை மண் மற்றும் கற்களை அப்புற்ப்படுத்தி சுத்தம்  செய்து சாக்குப் பைகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.

மகசூல்       

ஒரு எக்டரில் 200 முதல் 250 கிலோ விதைகளும் 300 கிலோ கிழங்குகளும் ஓர் ஆண்டில் மகசூலாக கிடைக்கும். அதோடு 150 முதல் 200 கிலோ காய்களின் தோலும் கிடைக்கும்.

Last Update : October 2014