தோட்டக்கலை :: மலரியல் பயிர்கள் :: கனகாம்பரம்

இரகங்கள் : சிகப்பு, ஆரஞ்சு மற்றும் டெல்லி கனகாம்பரம்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்து வண்டல மண் மற்றும் செம்மண் ஏற்றது. மண்ணின் அமிலக் காரத் தன்மை 6 முதல் 7.5க்குள் இருக்கவேண்டும். கனகாம்பரம் செடிகள் ஓரளவு நிழலைத் தாங்கி வளரும்.

பருவம் : ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். மழைக்காலத்தில் நடக்கூடாது.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது  மூன்று முறை நன்கு உழுது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின் போது எக்டருக்கு 25 டன் மக்கிய தொழு எரு இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். பின்னர் தேவைக்கேற்ப பார்கள் அமைக்கவேண்டும்.

விதையும் விதைப்பும்

இனப்பெருக்கம் : விதைகள் டெல்லி கனகாம்பரம் இரகத்தை வேர் வந்த குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.

விதையளவு : 5 கிலோ / எக்டர்

இடைவெளி : விதைக்காக பயிரிடுவதாக இருந்தால் 60 x 60 செ.மீ இடைவெளியை பின்பற்றவும். டெல்லி கனகாம்பரம் இரகத்திற்கு 60 x 40 செ.மீ.

நாற்றாங்கால் தயாரித்தல் : தேவையான அளவுகளில் மேடைப்பாத்திகள் அமைத்து அவ்றறில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைகளை விதைத்து, பின்னர் அவற்றை மணல் கொண்டு மூடிவிடவேண்டும். விதைகள் முளைக்கும் வரை தினமும் நீர்ப்பாய்ச்சவேண்டும். விதைகள் விதைத்த 60ம் நாளில் நடவுக்குத் தயாராகிவிடும்.

நடவு செய்தல் : 60 நாட்கள் ஆன நாற்றுக்களைப் பிடுங்கி 60 செ.மீ இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள பார்களில் நடவு  செய்யவேண்டும். நடும் முன் நாற்றுக்களை எமிசான் (1 கிராம் / லிட்டர் ) கரைசலில் முக்கி நடவேண்டும். நடவு செய்ய ஜுலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் வரையிலான பருவங்கள் மிகவும் உகந்தவை.

நீர் நிர்வாகம்

ஏழு நாட்களுக்கு ஒரு முறை நீர்பாய்ச்சவேண்டும். நிலத்தில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நிலத்தில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் வேர் அழுகல் நோய் தோன்றக்கூடும். எனவே சீராக நீாப்பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரமாக எக்டருக்கு 25 டன் தொழு உரம் கடைசி உழவின் போது இடவேண்டும். செடிகள் நட்ட மூன்று மாதங்கள் கழித்து எக்டருக்கு 75 கிலோ தழைச்சத்து 50 கிலோ மணிச்சத்து, 125 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய இராசயன உரங்களை இடவெண்டும். மேற்கண்ட உர அளவை மீண்டும் ஒவ்வொரு ஆறுமாத இடைவெளியில் கொடுக்கவேண்டும். இவ்வாறு இரண்டு வருடங்கள் வரை தொடர்ந்து இடவேண்டும். உயிர் உரமாகிய அசோஸ்பைரில்லத்தை ஒரு எக்டருக்கு 2 கிலோ என்ற அளவில் பயன்படுத்தினால் மத்தியில் இட்டு நன்கு கலக்கி, செடிகளுக்கு மண் அணைத்து பின் நீாப்பாயச்சவேண்டும். செடிகள் நட்ட மூன்று மாதங்கள் கழித்து அஸ்கார்பிக் அமிலம் 1000 பிபிஎம் என்ற அளவில் தெளித்தால் மகசூல் அதிகரிக்கும்.

 

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

சூப்பர் பாஸ்பேட்

கனகாம்பரம்

நட்ட மூன்று மாதங்கள் கழித்து

75

50

125

193

121

126

டெல்லி கனகாம்பரத்திற்கு : செடிகள் நட்ட 30 நாட்கள் கழித்து எக்டருக்கு வேப்பம் புண்ணாக்கு 250 கிலோ, தழைச்சத்து 40 கிலோ கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும். பிறகு 90 நாட்கள் கழித்து 40:20:20 கிலோ என்ற விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்கவேண்டும். இவ்வாறு வருடங்கள் வரை தொடர்ந்து இடவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

நூற்புழு : நூற்புழுக்கள் மண்ணில் இருந்தால் செடிகளின் வளர்ச்சி குன்றி இலைகள் வெளிறி மகசூல் பாதிக்கப்படும். நூற்புழு தாக்குதலைத் தடுக்க, நூற்புழு தாக்குதல் இல்லாத மண்ணில் கனகாம்பரம் சாகுபடி செய்யவேண்டும். நிலத்தல் ஈரம் இருக்கும்போது செடிகளின் வேர்ப்பகுதியில் போரேட் அல்லது கார்போப்யூரான் குறணை மருந்தினை இடவேண்டும்.

அசிவினிப் பூச்சிகள் : இவை இலைகளில் அடை அடையாக ஒட்டிக் கொண்டு சாற்றினை உறிஞ்சி சேதம் விளைவிக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த டைமித்தோயேட் மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்கவேண்டும்.
நோய்கள்

வாடல் நோய் : இந்நோயின் தாக்குதலினால்  செடிகள் நுனிப்பகுதியிலிருந்து வாடி படிப்படியாக செடி முழுவதும் காய்ந்துவிடும். நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் எமிசான் மருந்தினை லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் கரைத்து செடிகளைச் சுற்றி வேர்ப்பாகத்தில் ஊற்றிவிடவேண்டும்.

அறுவடை

அறுவடை நாற்றாங்காலில், இருந்து செடிகள் நட்ட ஒரு மாதம் கழித்து பூக்க ஆரம்பித்து விடும். நன்கு மலர்ந்த மலர்களை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பறிக்கவேண்டும்.

மகசூல் : ஒரு எக்டருக்கு ஒரு வருடத்தில் 2000 கிலோ மலர்கள் கிடைக்கும். டெல்லி கனகாம்பர இரகம் ஒரு எக்டருக்கு ஒரு வருடத்தில் 2800 கிலோ மலர்கள் கொடுக்கும்.