பயிர் பாதுகாப்பு :: சர்ப்பகந்தா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

Sarphandha பயிர் : சர்ப்பகந்தா
அறிவியல் பெயர் :ராவோல்ஃபியா செர்பென்டா
குடும்பம் : அப்போசைனேசியே
வெட்டுப்புழு

            இப்புழுக்கள் இளம் நாற்றுகளைத் தாக்குகின்றன. இவை நாற்றுகளின் அடிப்பகுதியை வெட்டி உண்டு அதிக அளவில் சேதத்தை உண்டாக்குகின்றன. இவை நாற்றுகளை சுற்றியுள்ள இலை மற்றம் சருகுகளுக்குள்ளே இருந்து கொண்டு நிலமட்டத்தில் உள்ள செடியின் அடிப்பகுதியை வெட்டி உண்டு விடுகின்றன. தாழ்வான தண்ணீர் தேங்கும் பகுதிகளில் சேதம் அதிகமாகக் காணப்படும். இளம்புழுக்கள் சிறிது நாட்களுக்கு இலைகளை உண்டுவிட்டு பின்னர் வேர்ப்பகுதிக்கு சென்று விடும். கூட்டுப்புழுவானது மண்ணில் காணப்படும்.
மேலாண்மை முறைகள்

  • கோடை உழவு செய்வதன் மூலம் புழுக்களையும், கூட்டுப்புழுக்களையும் மண்ணில் இருந்து வெளியேற்றி பறவைகளுக்கு உணவாக்குதல் மூலம் கட்டுப்படுத்தலாம்.
  • விளக்குப் பொறி அமைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • இனக்கவர்ச்சிப் பொறியை எக்டருக்கு 20 என்ற எண்ணிக்கையில் அமைத்து ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • செடிகள் நட்டு ஒருநாள் கழித்து, மாலை நேரத்தில் செடியைச் சுற்றியுள்ள பகுதியை குளோரிபைரிபாஸ் 2 மி.லி. அளவில் கலந்து நனைக்க வேண்டும்.

பச்சைக் கொம்புப்புழு
இப்புழுக்கள் இலைகள் அனைத்தையும் உண்டு அதிக சேதத்தை விளைவிக்கின்றன. தாய் அந்துப்பூச்சி, பச்சை நிறத்தில் மஞ்சள் நிறக்கோடுகள் மற்றும் மஞ்சள் நிறத்திட்டுகளுடன் பருமனாகக் காணப்படும்.
மேலாண்மை முறைகள்

  • தாக்கப்பட்ட  இலைகளையும்,  புழுக்களையும் சேகரித்து அழித்து விட வேண்டும்.
  • விளக்குப் பொறிகளை அமைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • இப்புழுக்கள் அரளியை அதிக அளவில் தாக்குவதால், வரப்பில் அரளி செடிகளை நட்டு அதில் பூச்சிக் கொல்லிகளைத் தெளிப்பதன் மூலம்  இப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
 புழு      அந்துப்பூச்சி
முட்டை வண்டுப்புழு வண்டு

புள்ளி வண்டு 
புழுக்களும் வண்டுகளும் இலையின் மேல்பாகத்திலிருந்து பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகள் வாடி, செடிகள் காய்ந்து விடும். அரை வட்ட வடிவ புள்ளி வண்டுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் கரும்புள்ளிகளுடன் காணப்படும். புழுக்கள் மஞ்சள் நிறத்தில் உடலில் ஒரு வித முள் போன்ற ரோமங்களுடன் காணப்படும்.
மேலாண்மை முறைகள்

  • தாக்கப்பட்ட  இலைகளுடன், புழுக்கள் மற்றும் வண்டுகளை சேகரித்து அழிப்பதன் மூலம் சேதத்தைக்  குறைக்கலாம்.
  • பூச்சிகளின் எண்ணிக்கையும் சேதமும் குறைவாக இருக்கும் பொழுது வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சத கரைசலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

சாம்பல் கூன் வண்டு
இந்த கூன் வண்டுகள் பெரும்பாலும் இலைகளில் சிறு துவாரங்கள் ஏற்படுத்தியும், ஓரங்களைக் கடித்தும் சேதம் உண்டாக்குகின்றன. சில சமயங்களில் அதிக அளவில் தோன்றி பெருத்த  சேதத்தை உண்டாக்கும். வண்டுகளின் புழுப்பருவம் செடிகளின்  வேர்ப்பாகத்தில் மண்ணிற்குள்  காணப்படும். புழுக்கள் வேர்களின் நுனிகளைக் கடித்துத் தின்பதால் தாக்கப்பட்ட செடிகள்  வாடி, நாளடைவில் காய்ந்து விடும்.
மேலாண்மை முறைகள்

  • சாம்பல் கூன் வண்டுகளைக் கட்டுப்படுத்த 3 சத வேப்பெண்ணெய் அல்லது 5 சத வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு தெளிக்க வேண்டும்.
  • மண்ணினுள் உள்ள புழுக்களைக் கட்டுப்படுத்த வேப்பம்புண்ணாக்கு எக்டருக்கு 250 கிலோ அல்லது கார்போப்யூரான் குருணை மருந்தினை ஒரு ஏக்கருக்கு 6 கிலோ என்ற அளவில் நாற்றுகள் நட்ட 15 நாட்களுக்குப் பின் மண்ணில் இடுதல்  வேண்டும்.

மாவுப்பூச்சி
இளம் மற்றும்  முதிர்ந்த மாவுப்பூச்சிகள் இலையின் அடிப்பகுதியில் அடர்த்தியாய் இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சி சேதம் உண்டு பண்ணுகின்றன. இதனால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி சிறுத்துக் காய்ந்து விடும். மாவுப்பூச்சி வெளியேற்றும் தேன் போன்ற திரவம் இலைகளின் மேல் கரும்பூசணத்தை உருவாக்குகிறது. இப்பூச்சிகள் சிறிதாகவும் மென்மையான உடலின் மேல் வெள்ளை நிற மாவு போன்ற பூச்சினால் சூழப்பட்டும் காணப்படும்.
மேலாண்மை முறைகள்

  • இயற்கையில் பொறி வண்டு மற்றும் கிரைசோபா இரை விழுங்கிகள் மாவுப் பூச்சிகளை உணவாக உட்கொள்வதால் இப்பூச்சிகளின் எண்ணிக்கை ஓரளவு குறைகிறது.
  • பப்பாளி மாவுப்பூச்சி அதிக அளவில் தென்படும்போது அசிரோபேகஸ் பப்பாயே எனப்படும் ஒட்டுண்ணியை விட்டும் கட்டுப்படுத்தலாம்.
  • எறும்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இப்பூச்சிகள் பரவுவதைக் குறைக்கலாம்.
  • அதிகம் தாக்கப்பட்ட இலைகளை அகற்றி அழிக்க வேண்டும்.
  • இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஏக்கருக்கு  என்ற அளவில் கலந்து  தெளிக்க  வேண்டும்.
  • பூச்சிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் பொழுது ஏக்கருக்கு 400 மி.லி. மீத்தைல் டெமட்டான் அல்லது டைமெத்தோயேட் மருந்தைத் தெளிக்க வேண்டும்.
  • மாவுப்பூச்சியினைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ மீன் எண்ணெய் சோப்பை 40 லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்க வேண்டும்.
Updated on March, 2014

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014