animal husbandry
பறவை இனங்கள் :: வான்கோழி வளர்ப்பு முதல் பக்கம்

வான்கோழி வளர்ப்பு முறைகள்

வான்கோழிகள் வளர்த்திட கீழ்க்கண்ட வளர்ப்பு முறைகளைக் கடைப்பிடிக்கலாம்
1.புறக்கடை வளர்ப்பு(Backyard system)
2.மிதத்தீவிர முறை அல்லது மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு (Semi-intensive system)
3. ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்ப்பு(Deeplitter rearing)
4.கம்பி வலை மேல் வான்கோழிகள் வளர்த்தல்(Slate floor rearing)

புறக்கடை வளர்ப்பு

நம்முடைய கிராமபுறங்களில் விவசாயிகள் வீட்டுத் தோட்டங்களில் வான்கோழிகளை வளர்ப்பதை பார்த்திருப்பீர்கள். வீடுகளில் இருக்கும் நெல், அரிசி, குறுணை, கம்பு, சோளம், தவிடு, எஞ்சிய சமைத்த உணவு, சமையல் அறைக் கழிவுகள் ஆகியவை வான்கோழிகளுக்கு உணவாக அமைகின்றன.

புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்குத் தானியங்கள், கீரைகள், களைகள் போதுமான அளவு கிடைத்து விடும். ஆனால் புரதச்சத்து தேவை நிறைவு பெறாது. இதை ஈடுகட்ட கடலைப் பிண்ணாக்கு / எள்ளுப் பிண்ணாக்கு/ சூரியகாந்திப் பிண்ணாக்கு இவற்றில் ஏதாவது ஒன்றினைத் தண்ணீரில் ஊறவைத்து இத்துடன் சிறிதளவு தவிடு வகையினைச் சேர்த்துக் கொள்ளலாம்
ஒரே சமயத்தில் அதிகமாக வைக்காமல் சிறிது சிறிதாகத் தீவனம் வைக்க வேண்டும். தண்ணீரில் ஊற வைத்து ஒரிரு நாட்கள் கழித்து அக்கலவையினை தீவனமாகப் பயன்படுத்தக் கூடாது. பழைய, ஊற வைத்த பிண்ணாக்கில் பூஞ்சக்காளான் வளர்ச்சி ஏற்படுவதால் வான்கோழிகளுக்கு இது தீங்களிக்கும்.
turkey

இடவசதி

வீட்டைச்சுற்றி 5 செண்ட் நிலம் இருந்தால் அது ஒரு ஜோடிக்கு இடவசதி போதுமானதாக இருக்கும். இரவு நேரத்தில் அடைத்து வைத்திட ஒரு சிறிய அறை தேவைப்படும். அல்லது பெரிய கூடைகள் தேவைப்படும். முட்டைகளிட ஒரு சிறிய இருட்டான இடம் தேவைப்படும்

வயது
இட அளவு((சதுர அடிகளில்)) தீவனத்தொட்டியின் அளவு (செ.மீ) (நீளமான தீவனத்தொட்டி) தண்ணீர்த்தொட்டியின் அளவு (செ.மீ)
(நீளமான தீவனத்தொட்டி)
0-4 வாரங்களில் 1.25 2.5 1.5
5-16 வாரங்களில் 2.5 5.0 2.5
16-29 வாரங்களில் 4.0 6.5 2.5


மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்க்கும் முறை


வியாபார முறையில் வான்கோழிப் பண்ணை அமைத்திட, மேய்ச்சலுடன் கொட்டகை கட்டி வளர்க்கும் முறை, புறக்கடை முறையைவிடச் சிறந்ததாகும். ஒரு ஆண் வான்கோழிக்கு, கொட்டகையில் 5-6 கொட்டகையில் சதுர அடியும், ஒரு பெட்டை வான்கோழிக்குச் சுமார் 4 அடி இடவசதியும் தேவைப்படும். இந்தக் கொட்டகையில் நெல் உமி அல்லது கடலைத் தோல் போட்டு, ஆழ்கூளம் அமைத்து விட வேண்டும். சுமார் 100 வான்கோழிகள் கொண்ட பண்ணை அமைத்திட 20 ஆண் வான்கோழிகள் தேவை. இதற்காகச் சுமார் 20 அடி அகலம், சுமார் 25 அடி நீளம் கொண்ட ஒரு கொட்டகை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கொட்டகையைச் சுற்றிச் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு கம்பிவலை கட்டப்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு விடலாம். புல் பூண்டுகள், களைகளை ஒரிரு நாட்களில் தின்று விடும். இந்த இடத்தில் அருகம்புல் கொண்டு வந்து போடலாம். கலப்புத் தீவனம் இரண்டு அல்லது மூன்று முறை தினமும் அளிக்கலாம்.

ஆழ்கூள முறையில் கொட்டகையில் வான்கோழி வளர்ப்பு

கோழிகளை வளர்ப்பது போல் வான்கோழிகளையும் ஆழ்கூளமுறையில் கொட்டகையில் வளர்க்கலாம். ஆழ்கூளம் அமைப்பதற்கு நெல்உமி அல்லது கடலைத் தோலை, சிமெண்ட் தரையின் மீது ஆறு அங்குலத்திற்கு பரப்பவேண்டும். இம்முறையில் வான்கோழிகளை வியாபார நேர்கிகல் வளர்க்க வேண்டுமானால் குறைந்தது 200 வான் கோழிகள் கொண்ட பண்ணையை அமைக்கவேண்டும். இம்முறையில் 40 ஆண் வான்கோழிகளுக்கு, 160 பெட்டை வான்ாகழிகள் என்ற விகிதத்தில் வளர்க்கலாம். ஒரு சேவல் வான்கோழிக்கச் சுமார் 5-6 சதுர அடி இடவசதியும் ஒரு பெட்டை வான்கோழிக்குச் சுமார் 4 சதுர இடவசதியும் தேவை. 40 ஆண் கோழிகளுக்கு 200 முதல் 240 சதுர இடவசதியும் 160 பெட்டை வான்கோழிகளுக்கு 640 சதுர இடவசதியும் தேவை. வளர்ந்த  வான்கோழிகள் வளர்ப்பதற்கு தனிக் கொட்டகையும் குஞ்சுகள் வளர்ப்பதற்கு தனிக்கொட்டகையும் அமைத்திடவேண்டும்.

turkey

கம்பி வலைச் சட்டங்களில் மேல் வான்கோழிகள் வளர்ப்பு

அதிகமாக மழைபெய்யும் இடங்களிலும், ஆழ்கூளம் காய்ந்த நிலையில் வைக்க முடியாத இடங்களிலும் கம்பிவலைச் சட்டங்களைப் பொருத்தி அதன் மேல் வான்கோழிகளை வளர்க்கலாம். இதற்கான கொட்டகையினை அமைப்பதை ஆழ் கூளமுறையில் போன்றே கட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் சிமெண்ட் காங்கிரிட் கொண்ட தரை அமைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் கோழிகளைக் கம்பி வலைகளின் மேல் விட்டுத் தானே வளர்க்கப்போகின்றோம். பக்கவாட்டுச் சுவர், கம்பிவலைச் சட்டத்திற்கு மேல் 11/2 அடி உயரத்திற்கு அமைத்துக் கொள்ள வேண்டும். சட்டமானது ஒரு அங்குலத்திற்கு 2 அங்குலம் இடைவெளி கொண்ட கம்பி வலையினை 2 அடிக்கு 2 அடி மரச்சட்டங்களை அமைத்துக் கொண்டு அதன்மேல் பொருத்திவிட வேண்டும். இந்தக் கம்பி வலைச் சட்டங்களை மண் தரைமீது ஒவ்வொன்றாக அடுக்கி வைத்து விடலாம். அவற்றின் மீது வளர்ந்த வான்கோழிகளை வளர்த்திடலாம். சிறிய குஞ்சுகளை, கம்பி வலைச் சட்டத்தின் மீது வளர்க்க வேண்டுமானால் ஒரு அங்குலத்திற்கு 2 அங்குலம் கொண்ட கம்பி வலையை மரச்சட்டம் மீது பொருத்திக் கொள்ளலாம். கம்பிவலைச் சட்டத்தின் மேல் விட்டு வான்கோழிகளை வளர்த்தால் பலவிதமான நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாப்பு அளித்திடலாம்.

பெரிய வான்கோழிகள் இனவிருத்திக்காக வளர்க்கும் பட்ச்த்தில் பண் வான்கோழிகளின் மார்புப் பகுதி கம்பிவலையினால் காயம் ஏற்படலாம். இதைத் தடுத்திட, பாதி இடம் கம்பிவலைச் சட்ட அமைப்பு கொண்ட கொட்டகை அமைக்கும் பொழுது ஒரு குஞ்சுக்கு 2 சதுர அடி இடவசதியும், ஒரு வளர்ந்த வான்கோழிக்கு சுமார் 5 சதுர அடி இடவசதியும் போதுமானது. முடிந்த அளவிற்கு வளர்ந்த வான்கோழிகளை ஆழ்கூளத்தில் வளர்க்க முயற்சிக்கலாம். கம்பிவலைக் சட்டத்தின் மேல் குஞ்சுகளை வளர்க்கலாம்
கம்பி வலைச் சட்டத்தின் மேல் இனவிருத்திக்கான வான்கோழிகளை வளர்க்கும் பட்சத்தில் தீவனத்தில் குறைந்தது 2.5 தாது  உப்பும், 3 கிளிஞ்சலும் கலந்து இருக்க வேண்டும். இந்த அளவில் குறைவு ஏற்பட்டால் கால்களில் வாதம் ஏற்பட்டு நடக்க முடியாமல் கஷ்டப்படும். மேலும் முட்டையிடக்கூடிய பகுதி ஆழ்கூளமாக இருப்பது சிறந்தது. அப்பொழுதுதான் முட்டைகள் உடையாமல் இருக்கும். சுத்தமான ஆழ்கூளமாக இருந்தால் மட்டுமே சுத்தமான முட்டைகள் பெற முடியும். சுத்தமான முட்டைகளையே குஞ்சு பொரிக்க அவயத்தில் வைத்திட இயலும்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15